திங்கள், 25 பிப்ரவரி, 2019

சத்துணவு முட்டைக்கு வேட்டு? அட்சயபாத்திரம் திட்டம் ஆர் எஸ் எஸ் திட்டம் ... பூண்டு வெங்காயத்துக்கும் வேட்டு? சத்தியராஜ் மகளுக்கு இதிலென்ன வேலை?

LR Jagadheesan : NEETஐ திணித்தவர்கள் சத்துணவை பறிக்க முயல்கிறார்கள்
இந்துத்துவ ஒட்டகம் ஒன்று திராவிட கொட்டகைக்குள் நுழைவதையும் அதற்கு “வாழும் பெரியார்” சத்தியராஜின் வாரிசு தனது “கொங்கு தொடர்புகள்” மூலம் துணைபோகிறதா என்றும் எச்சரித்தபோது பலரும் அதன் ஆபத்தை உணரவில்லை. இன்று ஆளுநர் பன்வாரிலாலே பகிரங்கமாக போட்டு உடைத்துவிட்டார்.
தமிழ்நாட்டின் ஆரம்ப பள்ளிக்கல்வியை அனைவருக்க்கும் சாத்தியமாக்கி அதன் மூலம் மிகப்பெரும் சமூக புரட்சியை நிகழ்த்திக்காட்ட உதவிய தமிழ்நாட்டரசின் மதிய உணவு திட்டத்தை தனியார் தொண்டுநிறுவனத்திடம் கொடுக்கும்படி சொல்கிறார் ஆளுநர்.
அதுவும் அந்த தொண்டுநிறுவனம் சுத்தசைவத்தை திணிக்கும் இந்துத்துவ வெறிகொண்ட நிறுவனம் என்று குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனம். எந்த அளவுக்கு என்றால் வெங்காயம் வெள்ளைப்பூண்டை உணவில் சேர்க்கக்கூடாதென தடைவிதிக்கும் அளவுக்கு சுத்த சைவ இந்துத்துவத்தை உணவில் திணிக்கும் நிறுவனம் என்று கூறப்படுகிறது.

அப்படியானதொரு சர்ச்சைக்குரிய தொண்டுநிறுவனத்துக்கு இந்தியா மட்டுமல்ல உலகமே பாராட்டிய தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தை கொடுக்கும்படி பரிந்துரைக்கிறார் ஆளுநர்.
நீதிக்கட்சி காலத்தில் துவங்கி காமராஜர், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என எல்லோர் ஆட்சியிலும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட சத்துணவு திட்டத்தை அரசிடம் இருந்து பறிக்க பகிரங்கமாக பரிந்துரைக்கிறார் ஆளுநர்.
தான் தமிழக ஆளுநரானதும் கிண்டி ஆளுநர் மாளிகையில் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்று தடைபோட்ட சர்வாதிகார ஆளுநர் இப்போது இப்படியொரு ஆலோசனை சொல்வது சத்துணவு திட்டத்திலும் தனது இந்துத்துவ உணவுபழக்கத்தை ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மீதும் திணிப்பதற்கான முயற்சியா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
ஏற்கனவே NEETஐ திணித்து தமிழ்நாட்டு அரசுபள்ளிமாணவர்களின் மருத்துவ கனவை கொன்ற கும்பல் இப்போது அந்த மாணவர்களின் சத்துணவையும் பறிக்கப்பார்க்கிறது. தமிழ்நாட்டு சத்துணவில் முட்டை போடுவது சனாதனிகளுக்கு நீண்டநாட்களாகவே உறுத்திக்கொண்டிருக்கிறது. அதை ஒழிக்க இப்படியும் முயல்கிறார்கள் போலும்.
அதுவும் எம்ஜிஆரின் கர்லாகட்டையை இரவலாக பெற்ற புரட்சித்தமிழன் சத்தியராஜின் வாரிசுகளின் ஏகோபித்த ஆதரவோடு. நடப்பதோ கொங்குமண்டலத்தார் ஆட்சி. நடைமுறைப்படுத்தப்படுவதோ இந்துத்துவ கொள்கை.
இதில் முடிவெடுக்கவேண்டிது தமிழக மக்கள். தங்கள் பிள்ளைகளின் மருத்துவக் கல்வியை பறித்தவர்கள் அவர்களின் உணவுத்தட்டையும் பறிக்க முயல்கிறார்கள். இப்போதும் விழிக்காவிட்டால் இனி எப்போதும் தமிழ்நாட்டுக்கு விடிவில்லை

கருத்துகள் இல்லை: