வெள்ளி, 2 நவம்பர், 2018

நியூட்ரினோ வழக்கு: இன்று தீர்ப்பு!

மின்னம்பலம்:
நியூட்ரினோ வழக்கு: இன்று தீர்ப்பு!
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடுத்த வழக்கில், இன்று தீர்ப்பு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு, தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி மறுத்த நிலையில், டாடா நிறுவனம் அளித்த மனுவை ஏற்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது.
இதனை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் 9ஆம் தேதியன்று, நீதிபதி ராகுவேந்திர எஸ் ரத்தோர் அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

ஆனால் டாடா நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தின் மீதான மதிப்பீட்டு ஆணையம் ஆகியவை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி ஆர்.எஸ்.ரத்தோர்.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (நவம்பர் 2) வெளியாகுமென்று தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: