வெள்ளி, 2 நவம்பர், 2018

நியுற்றினோ திட்டத்துக்கு இடைக்கால தடை பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்மாலைமலர் :நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய தேசிய பசுமை தீர்ப்பாயம், நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தது.
Neutrino #NationalGreenTribunal புதுடெல்லி: நியூட்ரினோ என்பது சூரியன் மற்றும் நட்சத்திரங்களில் இருந்து வெளியாகும் அணுத்துகள்களாகும். இந்த அணுத்துகள்களை ஆய்வு செய்தால் சூரியன் மற்றும் நியூட்ரினோதுகள்களின் ரகசியங்களை கண்டுபிடிக்க முடியும். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரில் மலைப் பகுதியில் மிகப்பெரிய ஆய்வு கூடம் அமைத்து நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவும் இந்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


தேனி மாவட்டத்தில் தேவாரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருக்கும் பொட்டிபுரம் கிராமம் அருகே ராமகிருஷ்ணாபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்து ஆய்வு செய்யும் திட்டத்தை தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்திற்காக மலைக்கு அடியில் சுமார் 2½ கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதை தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. தமிழக அரசும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இந்த திட்டத்தை அமல்படுத்தும் முயற்சிகள் கடந்த 2015-ம் ஆண்டு மேற் கொள்ளப்பட்டன.

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கு பொட்டிபுரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை அமைத்தால் தங்கள் ஊர்களில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று அச்சம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தேனி மாவட்ட நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த அமைப்பு தனது மனுவில், “நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். பொது மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்ய வேண்டும்” என்று கூறி இருந்தது.

கடந்த மாதம் 5-ந்தேதி இந்த வழக்கு விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்தது. அப்போது நீதிபதிகள் நியூட்ரினோ திட்டம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசு, மற்றும் டாடா நிறுவனம் ஆகியவை எழுத்து பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.



அதன்பேரில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எழுத்துப் பூர்வ தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த மாதம் 9-ந்தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

அப்போது தமிழக அரசு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் வக்கீல் ராகேஷ் சர்மா ஆஜராகி வாதாடினார். அதன்பிறகு இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி ராகுவேந்திர ரத்தோர் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பை வெளியிட்டது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தேனியில் நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கு இடைக்கால தடை விதித்தனர். தீர்ப்பின் முழு விவரம் வருமாறு:-

தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தை அமைக்க வேண்டுமானால் வனவிலங்கு வாரியத்தின் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டும். தேசிய வனவிலங்கு வாரியம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் இந்த ஆய்வு திட்டத்தை அங்கு செயல்படுத்த இயலாது.

நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனவிலங்குகளுக்கு எந்தெந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை இடைக்கால தடை நீடிக்கும்.

அந்த ஆய்வு பணிகள் முற்றிலும் முடிந்தபிறகே நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு தடை விதிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படும். தற்போது இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆய்வு பணிகள் முடிவடையாத காரணத்தால் மத்திய அரசு அளித்து இருக்கும் அனுமதியை ரத்து செய்ய இயலாது.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்து இருப்பதால் பொட்டிபுரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சியும், நிம்மதியும் தெரிவித்து இருக்கிறார்கள். என்றாலும் இந்த ஆய்வு திட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

ஆனால் இந்த திட்டத்தால் அந்த பகுதிகள் சர்வதேச அளவுக்கு மிகப்பெரிய மேம்பாட்டை அடைய முடியும் என்று அதிகாரிகள் கூறி வருகிறார்கள். அதற்கேற்ப சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. #BanOnNeutrino #Neutrino #NationalGreenTribunal

கருத்துகள் இல்லை: