செவ்வாய், 30 அக்டோபர், 2018

டெல்லிக்கு 48 மணிநேரமாக தூதுவிடும் மகிந்த ராஜபக்‌ஷே

டெல்லிக்கு 48 மணிநேரமாக தூதுவிடும் மகிந்த ராஜபக்‌ஷேமின்னம்பலம்: இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்‌ஷே இந்திய அதிகாரிகளைத் தொடர்பு கொள்வதற்காக 2 நாட்களாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் டெல்லியோ தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவும் மகிந்த ராஜபக்‌ஷே வுடன் ஆலோசனை நடத்தவும் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேவை அதிரடியாக நீக்கினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா. இதையடுத்து புதிய பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷே பொறுப்பேற்றார்.

ஆனால் தம்மை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை; நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்கிறது ரணில் தரப்பு. இதனால் இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
அதே நேரத்தில் மகிந்த ராஜபக்‌ஷே பதவி ஏற்ற உடன் முதலில் வாழ்த்து சொன்னது சீனா. இதை இந்தியா விரும்பவில்லை என கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உடனடியாக இலங்கை நாடாளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை தொடர்பு கொள்ள மகிந்த ராஜபக்‌ஷே தொடர்ந்து முயற்சித்து வருகிறார். ஆனால் இந்திய தரப்பில் இருந்து எந்த ஒரு சிக்னலும் அனுப்பி வைக்கப்படவில்லை.
தற்போதைய நிலையில் எந்த ஒரு நிலைப்பாட்டையும் மேற்கொள்ளாமல் ‘வேடிக்கை’ பார்த்துவிட்டு பின்னர் முடிவு எடுக்கலாம் என்பது டெல்லியின் முடிவு என கூறப்படுகிறது. அதேநேரத்தில் எப்படியாவது இந்தியாவின் ஆதரவைப் பெற்றே ஆக வேண்டும் என்பதில் மகிந்தவும் தீவிரமாக இருந்து வருகிறார்.
இலங்கையின் தற்போதைய குழப்பமான அரசியல் சூழலில் இந்தியாவின் கருத்தை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: