ஞாயிறு, 28 அக்டோபர், 2018

டெல்லியில் தமிழக ஐ எ எஸ் மாணவி தற்கொலை? சந்தேகத்துக்கு இடமான தொடர் தற்கொலைகள் ...

டெல்லியில் தமிழக மாணவி தற்கொலை!மின்னம்பலம்: டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி பெற்று வந்த தமிழக மாணவி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆதாம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள பூமார்க்கெட்டில் பூ வியாபார தொழில் செய்துவருகிறார். இவரது ஒரே மகள் ஸ்ரீமதி. இவர் டெல்லியிலுள்ள கரோல்பார்க் பகுதியில் வஜிரம் என்ற தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் கடந்த 6 மாதங்களாக படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று(அக்டோபர் 27) தங்கியிருந்த விடுதியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் ஸ்ரீமதி. இந்த தற்கொலை குறித்து கரோல்பர்க் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஸ்ரீமதியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, விமானம் மூலம் டெல்லிக்கு சென்றனர். அங்குமருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதையடுத்து, மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடல் எம்பாமிங் செய்வதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடலைப் பெற்று இன்று மாலை அல்லது நாளை காலை ஸ்ரீமதியின் பெற்றோர் ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீமதி எதனால் இறந்தார், அவர் தற்கொலை செய்துகொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்துகொண்டார் எனில், அதற்கு காரணம் என்ன என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் கரோல்பர்க் போலீசார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிமாநிலங்களுக்கு படிப்பதற்கு அல்லது பயிற்சி பெறுவதற்கு செல்லும் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கு முன்பு டெல்லி உட்பட வடமாநிலங்களில் மருத்துவம் பயில சென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டது நினைவுகூரத்தக்கது.

கருத்துகள் இல்லை: