புதன், 31 அக்டோபர், 2018

அதிமுக விதிகள் வழக்கு: கே.சி.பழனிசாமி மனு தள்ளுபடி!

அதிமுக விதிகள் வழக்கு: கே.சி.பழனிசாமி மனு தள்ளுபடி!மின்னம்பலம்: அதிமுக விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டுமென அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவினை விசாரித்த தேர்தல் ஆணையம், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் எடப்பாடி-பன்னீர் அணிகள் இணைந்த பிறகு நடைபெற்ற பொதுக் குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்படுவதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கொண்டு வரப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே அதிமுக கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இம்மனுவை 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் பதிலளிக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தது.
பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த பதில்மனுவில், கே.சி.பழனிசாமி மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. சசிகலா தரப்பிலிருந்தோ, “அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் மூலம் உடனே தேர்தல் நடத்த வேண்டும்” என்று பதில்மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கே.சி.பழனிசாமியின் மனுவையும், ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா தரப்பு பதில்மனுவையும் ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், இதுதொடர்பாக மூன்று தரப்பையும் நேரில் அழைத்து விசாரிக்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டது. மேலும் கே.சி.பழனிசாமியின் மனு தொடர்பாக ஆணையம் தலையிட முடியாது என்று கூறி அவரின் அனைத்து மனுக்களையும் இன்று (அக்டோபர் 31) தள்ளுபடி செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: