புதன், 31 அக்டோபர், 2018

பசும்பொன் தந்த முத்துராமலிங்கத்தேவரின் 55 வருட வாழ்வியல் சொல்லும் பாடம் என்ன..

"சொத்தில் எந்த பகுதியும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வைத்துக் கொள்ளவில்லை என்பதே உண்மை"
splco.me :
முத்துராமலிங்கத்தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 29, 1963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். இவரின் பிறந்த நாளும் அடக்கம் செய்யப்பட்ட நாளும் ஒரே நாளில் வருவது இவரது தனி சிறப்பாக அவரின் நம்பிக்கையாளர்கள் சிலேகித்து கூறுகின்றனர்
இவரின் முக்கிய சிறப்பாக கூறப்படுவது தென்னக அரசியலில் இவர் கையில் எடுத்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது.
1920ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது.

இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார்.
1930களில் மகாலெட்சுமி ஆலை தொழிலார்கள் சங்கமும் மதுரா பின்னலாடை ஆலை தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டத்தினை இவர் தலைமை தங்கி நடத்தினார்.

1937ஆம் ஆண்டு பிப்ரவரியில்இராமநாதபுரம் தொகுதியில் இவர் போட்டியிட்ட போது நீதி கட்சி அவரின் சமுகத்து ஆளையே எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் இது முத்துராமலிங்கதேவரின் வெற்றியை தடுக்க முடியவில்லை . அவர் கண்முடித்தனமான காங்கிரஸ் கட்சியின் அதரவு காரணமாக காங்கிரஸ் அரசு குற்ற பரம்பரை சட்டத்தினை விலக்கும் என்று அவர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அப்போதைய புது அரசின் காங்கிரஸ் முதல்வரான ராஜகோபாலாச்சாரி அவர்கள் அந்த சட்டத்தினை நீக்கவில்லை.இருந்தும் தொடர்ந்து காங்கிரசுக்கு இவரின் அதரவை இவர் விலக்கவில்லை ..
இந்த நிலையில் மதுரா பின்னலாடை ஆலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீள் பணியில் அமர்த்தும் போராட்டத்தில்.,
1938 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். பின்னர் 1945 ஆம் ஆண்டு மதுரை டிவிஎஸ் தொழிலாளர் சங்க தலைமை பொறுப்பையும் ஏற்றார்.
1939ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற 52ஆவது வருடாந்திர காங்கிரஸ் கூட்டத்தில் முத்துராமலிங்கத்தேவர் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியிட்டார் . பின்னர் காந்தியின் தலையீட்டின் படிக்கு போஸ் அந்த பொறுப்பை விட்டு விலகி ஜூன் 22ஆம் நாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார். காங்கிரஸ் கட்சியின் மீதான கருத்து வேறுபட்டாலும் குற்றபரம்பரை சட்டத்தின் மீதான காங்கிரசின் நிலைபாட்டின் காரணத்தினாலும் இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உடன் இணைந்தார்.
இது நட்ந்து அடுத்த மாதத்திலே மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் அரிசனங்களை அழைத்துச் செல்ல அன்றைய காங்கிரஸ் அரசு முடிவு செய்யப்பட்ட போது அவர் தனது சொந்த சமூகத்து ஆட்களை இப்படி எச்சரித்தார்.
“அந்த ரவுடிக் கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாதர் அரிசனங்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக்கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்” என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம்முத்துராமலிங்கத்தேவரின் அறிக்கை வெளியானது”
ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது. 8.7.1939-ல் காலை 10 மணிக்கு கக்கன், முருகானந்தம், பூவலிங்கம், சின்னையா, அரிசன தேவாலய ஊழியர் முத்து என ஐந்து அரிசன சமூகத்தினரும் சேர்ந்து வைத்தியநாதருடன் ஆலயத்தில் நுழைந்து அம்மனை வணங்கினர்

இந்த கால கட்டத்தில் அகில இந்திய அரசியலில் பல் முக்கிய மாற்றங்கள் நிகழ தொடங்கின ..1939ம் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பதவியிலிருந்த காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகின. இந்தியர்களைக் கலந்தாலோசிக்காமல் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவைக் காலனிய அரசு ஈடுபடுத்தியது இம்முடிவுக்குக் காரணமாக இருந்தது. இதன் பின்னர் சென்னை மாகாணம், சென்னை ஆளுனரால் நேரடியாக நிர்வாகம் செய்யப்பட்டது.
இந்த காலத்தில் மதுரா பாதுகாப்பு என்கிற உயர் சாதி அமைப்பு பெயரில் தேவர் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் மூலம் தேவர் மதுரையை விட்டு வெளியேற முடியாதபடிக்கு அவரை தடுப்பதில் அந்த அமைப்பு வெற்றியும் கண்டது பின்னர் 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேவர் மதுரையில் இருந்து தனது சொந்த ஊரான பசும்பொன்னிற்கு பயணித்த பொழுது திருப்புவனத்தில் அவரை கைது செய்து திருச்சிராப்பள்ளி மத்திய சிறைசாலையில் 18 மாதகாலம் அடைத்தது.மதுரா பாதுகாப்பு அமைப்பின் பிண்ணனில் அப்போதய அர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்பில் இருந்தனர் என்று அக்காலத்து பெரியவர்கள் கூற கேட்கலாம்..
மதுரா பாதுகாப்பு அமைப்பினர் தொடர் அழுத்தம் காராணமாக முத்துராமலிங்கத் தேவர் கைது அப்பகுதியில் அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்தியது. 18 மாதங்களுக்கு பின்னர் இவர் விடுதலையான பொழுது சிறை வாசலிலேயே இந்திய பாதுகாப்பு சட்டத்தினை காரணம் காட்டி மீண்டும் ஆங்கிலய அரசு மதுரா பாதுகாப்பு புகார் காராணமாக சிறையில் அடைத்தனர்.
பின்னர் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் விடுதலை ஆனார்.
மார்ச் மாதம் 1946 ஆம் வருடம் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார். இதன் பின்னர் குற்றபரம்பரை சட்டம் நீக்கப்பட்டது.
பிப்ரவரி 1948இல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சி தனித்து பிரதான எதிர்க்கட்சியானது. இதில் தேவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாட்டின் தலைவரானார்.

11949 ஆம் ஆண்டு ஜனவரி 23 சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் அன்று அவர் “நேதாஜி” என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கி அவரே அதன் ஆசிரியராக இருந்து வந்தார். அன்று இரவு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளார் என்றும் அவர் விமான விபத்தில் இறந்ததாக கூறுவது பொய் எனவும் அவரை தாமே சந்தித்தாக பகிரங்கமாக அறிவித்தார் . இதன் பின்னர் தேவர் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தவித அறிவிப்பும் இன்றி மறைந்திருந்தார் சென்றார்.
பின்னர் 1950 இல் மீண்டும் பொது வாழ்க்கைக்கு திரும்பினார். இந்த கால கட்டத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளதாக பொது மேடைகளில் அவர் பேசியதாக எந்த ஆவண குறுப்பிடும் இல்லை .
1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது.
லோக் சபா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடந்தது. இதில் இவர் அருப்புகோட்டை லோக்சபா தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார்.
இரண்டிலும் வெற்றியும் பெற்றார். இதில் லோக்சபா பதவியை துறந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று மதராஸ் சட்டமன்ற உறுப்பினர் குழுவில் இடம்பெற்றார்.
இந்த தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மதராஸ் சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்தது. மேலும் கம்ம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து காங்கிரஸ் அல்லாத ஆட்சியை நிறுவ முனைந்தார் இவரின் முயற்சி தோல்வியில் முடிய ஆளுநர் அவர்கள் ராஜகோபாலசாரியார் அவர்களை முதல்வராக நியமித்தார்.
1955 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியில் மீண்டுமொரு பிளவு ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் சகோதரத்துவத்தை ஆதரித்தது. மோகன் சிங்க் மற்றும் சீல் பந்திரா யாகி போன்ற பார்வர்ட் ப்ளாக்கின் முக்கிய தலைவர்கள் காங்கிரசுடன் இணைய முற்பட்டனர். இந்த முடிவை கட்சியின் பிற தலைவர்கள் ஏற்க முன்வரவில்லை.
பார்வர்ட் பிளாக் கட்சி தனித்தே இருக்க வேன்றுமென்று விரும்பினர். இருப்பினும் மோகன் சிங்க் – யாகி ஆகியோர் தன்னிச்சையாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த தருணத்தில் ..
1955 ஆம் ஆண்டு மே மாதம் 11 முதல் 15 தேதிகளில் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நாக்பூரில் நடந்தது. இதை சிங்க் – யாகி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதில் ஹேமந்த் குமார் போஸ் அவர்கள் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஹல்டுல்கர் பொது செயலாளராகவும் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் துணைத் தலைவராகவும் தேர்ந்தேடுக்கபட்டனர் . இந்த பதவியில் தனது இறுதி நாள் வரை அவர் இருந்துள்ளார்
1955 ஆம் ஆண்டு பர்மா வாழ் தமிழ் மக்களின் அழைப்பை ஏற்று இரண்டாம் முறையாக பர்மா சென்றார்.
பின்பு 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் பொது தேர்தலை சந்திப்பதற்காக தாயகம் திரும்பினார். மீண்டும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் பொருட்டு பார்வர்ட் பிளாக் கட்சி உழைத்து கொண்டிருந்த வேளையில். மெட்ராஸ் மாநிலத்தில் புது பரிணாமமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. ராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி (CONGRESS REFORM COMMITTEE) என்கிற பிரிவில் காங்கிரஸ் உடைந்தது.
முத்துராமலிங்கத்தேவர் தனது அரசியல் எதிரி மற்றும் தனனை சிறையில் அடைத்த இந்த முறை தனது முன்னாள் அரசியல் எதிரியான ராஜகோபாலாச்சாரி அவர்களுடன் அமைதியை பேணினார்.
இதன் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி கட்சியினரும் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க தேர்தலில் இணைந்து பணியாற்றினர். இந்த தேர்தலிலும் தேவர் அருப்புகோட்டை தொகுதியில் லோக்சபா உறுப்பினருக்கும் முதுகுளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கும் போட்டியிட்டார். இந்த முறையும் இரு தொகுதிகளிலும் வென்றார். ஆனாலும் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் பெருவாரியான் வெற்றியை அவரால் தடுக்க முடியவில்லை . ஆதனால் இந்த முறை அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்.

தேவர் முதுகுளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால் இந்த தொகுதிக்கு .,
1957 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாள் அன்று இடைதேர்தல் நடத்தப்பட்டது. இதில் பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் சசிவர்ணதேவர் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவை எற்காத ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. இது பின்னர் கலவரமாக வெடித்தது.
பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அனேக ஆதரவளித்து வந்த மறவர் இனத்தவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த தலித் இனத்தவர்களும் பெருமளவில் மோதிக்கொண்டனர். இந்த கலவரம் இராமநாதபுரத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் பலர் கொல்லப்பட்டனர் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரயாக்கபட்டன.
இந்த கலவர நேரத்தில் செப்டம்பர் 10 ஆம் நாள் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் சசிவர்ண தேவர், மற்றும் வேலு குடும்பனுடன் (பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த தேவேந்திரர்குல சமூகத்தினை சார்ந்த தலைவர்) முத்துராமலிங்க தேவரும் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் சார்பில் ஆறு தலித் தலைவர்களும் மேலும் பல நாடார் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்து சமூகத்தவரும் இணக்கமாக வாழ்வதென்று முடிவு செய்யப்பட்டு கூட்டம் கலைந்தது. கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் என்ற பள்ளர் சமுதாய மக்களின் பிரிதிநிதித்துவம் குறித்து இம்மானுவேல் சேகரனுக்கும் தேவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தேவர், தேவேந்திரர்குலம் சார்பில் கலந்துகொண்ட இம்மானுவேல் என்பவரின் பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் கோபமுற்ற அவர் அமைதி அறிக்கையில் இம்மானுவேல் உடன் கையொப்பம் இட முடியாது என்று தெரிவித்தார். இதனால் தனித் தனி அறிக்கைகளில் கையெழுத்துப் பெறப்பட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.
மறுநாள் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்டார். இந்த அரசியல் படுகொலை நிகழ்வு சில தினங்களில் சாதி சண்டையாக உருவெடுத்து, தென் மாவட்டங்கள் சாதி கலவரத்தில் பற்றி எரிந்தன. கலவரம் காவல் துறை மூலம் கட்டுக்குள் அடக்கப்பட்டு கலவரம் செய்ய காராணமான காரணத்தினால் ..
1957 செப்டெம்பர் 28 ஆம் நாள் பாதுகாப்பு சட்டத்தின் பெயரில் முத்துராமலிங்கத்தேவர் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த பாதுகாப்பு சட்ட வழக்கு, இம்மானுவேல் சேகரன் கொலையில் முத்துராமலிங்கத்தேவர் சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பின்னர் புதுகோட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு வழக்காடபட்டது.
1959 இல் இந்த கொலைக்கும் முத்துராமலிங்கத்தேவருக்கும் தொடர்பு இருக்குமா என்று சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாட்சிகள் சொல்ல வராத காரணத்தினால் சாதகமா அறிவித்து நீதி மன்றத்தால் முத்துராமலிங்கத்தேவர் விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை நகராட்சி தேர்தலில் மும்முரமானார். இதில் கம்யூனிஸ்டுகள், இந்திய தேசிய குடியரசு காங்கிரஸ் (INDC – முன்னாளில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி) ஆகிய கட்சிகளுடன் இணைந்து பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலின் பொழுது தான் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்ற கழகம் பேசிய சாதியற்ற மதமற்ற கொள்கையால் அது தந்த வளர்ச்சியால் திமுக அரசியலில் சக்தியாக உருவாகியது.
பின்னர் 1962இல் மீண்டு லோக் சபா தேர்தலுக்கு இவரே நின்றாம் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் ஒரேயொரு பிரச்சார மேடையில் மட்டுமே தோன்றினார். இவருடன் ராஜகோபாலசாரியார் அவர்களும் தேவரும் இணைந்து தோன்றிய கடைசி பிரச்சார மேடை இதுவே ஆகும்.
முத்துராமலிங்கத்தேவர் மீண்டும் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு உடல்நலக்குறைவின் காரணமாக அப்போது நடைபெற்ற ஒரு கூட்ட தொடரில் பங்கேற்க டெல்லி செல்ல முடியவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த முத்துராமலிங்கத்தேவர் ..
1963-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் மறுநாள் அதாவது அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் வள்ளலாரின் முறைப்படி பூஜை நடத்தி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவு குறித்து அப்போதைய எதிர்கட்சி தலைவராக இருந்த அண்ணா பேசுகையில் “தேவரை இழந்தது எனக்கு தாங்க முடியாத வேதனை அளிக்கிறது. தென்பாண்டி மக்களின் இதயத்தைக் கவர்ந்த தலைவர் அவர். எது எது மக்களுக்குத் தேவையோ, அவைகளையெல் லாம் வீரத்தோடும், அஞ்சா நெஞ்சத்தோடும் எடுத்துச் சொன்னார். ஒருமுறை சட்டசபையில் அவரைப் பாராட்டி நான் பேசினேன். “உங்களைத் திட்டும் தேவரை நீங்கள் பாராட்டலாமா?” என்று சிலர் கேட்டார்கள். “அவர் செய்யும் நல்ல செயல்களை எடுத்துச் சொல்லாவிட்டால் என் மனச்சாட் சிக்கு துரோகம் செய்தவன் ஆவேன்” என்று பதில் அளித்தேன்.” இவ்வாறு அண்ணா கூறினார்.
அவரது மறைவு குறித்து காமராசர் பேசுகையில் “தேவர் மரணம் குறித்து மிகவும் வருந்துகிறேன். சுதந்திரப் போராட்டத்தில், வீரத்துடன் ஈடுபட்டார். மனதில் சரி என்று பட்ட கொள்கையை தைரி யத்துடன் சொல்லக்கூடியவர்” என்று குறிப்பிட்டு இருந்தார்
இவர் மறைவின் காரணமாக அருப்புகோட்டை லோக்சபா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டும் வெல்ல முடியவில்லை பார்வர்ட் பிளாக் கட்சி தோற்றது.
பார்வர்ட் பிளாக் கட்சி தந்த தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் அப்பகுதிகளிலிருந்தும் அயிரக்கணக்கில் அச்சமுக மக்கள் கலந்து கொண்டு பால்க்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் இவரை தெய்வமாக வணங்கி வருகின்றனர்..

இதன் இடையே முத்துராமலிங்கத்தேவர் தமது சொத்துக்களை தாழ்த்தப்பட்டோருக்கு இனாம் சாசனம் எழுதி வைத்தாரா என்ற கேள்விக்கு..
முத்துராமலிங்கத்தேவர் தமது சொத்தை பதினேழு பாகங்களாகப் பிரித்து அவற்றுள் ஒன்றைத் தமக்கென வைத்துக்கொண்டு, மீதி பதினாறு பாகத்தை பதினாறு நபர்களுக்கு இனாம் சாசனம் எழுதி வைத்தார் . அந்த பதினாறு நபர்கள் விவரம் பின்வருமாறு:
1) அருப்புக்கோட்டை ஏ.ஆர்.பெருமாள்,
2) அருப்புக்கோட்டை வி.ஏ.சிவன்,
3) தூரி இராமசாமித் தேவர்,
4) பாரக்குளம் நல்லமுத்துத் தேவர்,
5) பசும்பொன் நல்லகுட்டித் தேவர்,
6) பசும்பொன் சின்னதம்பித் தேவர்,
7) பசும்பொன் ராமச்சந்திரத் தேவர்,
8) பசும்பொன் நாகநாதன்,
9)கல்லுப்பட்டி வெள்ளைச்சாமித்தேவர்,
10) மதுரை முத்துச்செல்வம்,
11) திருச்சுழி குருசாமிப் பிள்ளை,
12) சிவகங்கை முத்துராசுப் பிள்ளை,
13) வடிவேலம்மாள்,
14) ஜானகியம்மாள்,
15) பசும்பொன் வீரன்,
16) பசும்பொன் சந்நியாசி
இவர்கள் யாவரும் முத்துராமலிங்கத் தேவருக்கு நெருங்கிய உறவினர்கள், பணிவிடைகள் செய்தவர்கள் மற்றும் அரசியல் ரீதியில் உதவியவர்கள் என்ற வகையில் மிகவும் நெருக்கமானவர்கள். இவர்களுள் பசும்பொன்னைச் சேர்ந்த வீரன், சந்நியாசி ஆகியோர் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களுள் முத்துராமலிங்கதேவரின் நெருங்கிய உறவினர்கள் நால்வர் தவிர மீதமுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வீரன், சந்நியாசி ஆகிய இருவர் உள்ளிட்ட பதினான்கு நபர்களும் அவரது இறப்புக்குப்பின் மேற்படி சொத்துக்களில் அவர்களது பாகத்தைத் திரும்ப அளித்து விட்டனர்.
பின்னாளில் மூக்கையாத் தேவர் உள்ளிட்டோர் முயற்சியால், முத்துராமலிங்கத் தேவரின் பெயரில் உருவாக்கப்பட்ட தர்ம ஸ்தாபனம் (ட்ரஸ்ட்) இந்தச் சொத்துக்களைக் கொண்டே உருவாக்கப்பட்டது. அதாவது மேற்படி சொத்தில் எந்த பகுதியும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வைத்துக் கொள்ளவில்லை என்பதே உண்மை . இதனை திருச்சுழி சார்பதிவாளர் ஆவணங்களில் காணலாம் இப்போதும் யார் வேண்டுமானாலும் சரி பார்த்து கொள்ளலாம்.
இக்கட்டுரையின் முடிவாக மூன்று கோணத்தை உங்கள் கனிவான பார்வைக்கு வைக்கிறேன்
முத்துராமலிங்கதேவரின் குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் , மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் அரிசனங்களை அழைத்துச் செல்லும் போராட்ட அதரவு ., மகாலெட்சுமி ஆலை தொழிலார்கள் சங்கமும் மதுரா பின்னலாடை ஆலை தொழிலாளர் திவிர அதரவு அவரை அப்பகுதி மக்கள் தலைவராக உருவாக்கியது ..
முத்துராமலிங்கதேவரின் சுபாஷ் சந்திர போஸ் உடன் இருந்த அனுக்கம் அவரை அகில இந்திய தலைவராக அவரை திசை மாற்றியது . ஆனால் அந்த காலத்தில் மக்களின் மனதில் பெரு மதிப்பு வைத்து இருந்த காந்தியை எதிர்த்து அவர் செய்த தனி நபர் சார் அரசியல், மற்றும் மதுரா பாதுகாப்பு அமைப்பின் முதலாளித்துவ பிண்ணனியை கூர்ந்து கவனிக்க தவறிய தன்மை , மேலும் அந்த கால கட்டத்தில் வளர்ந்து வந்த திராவிட முன்னேற்ற கழகம் பேசிய சாதியற்ற மதமற்ற சமத்துவ கொள்கை பற்றி அவரின் அனுகுமுறை, அவரை பிரந்த்திய தலைவராக சுருக்கியது எனலாம் ..
எப்படி மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஒரு உறுதியான முடிவை எடுத்தாரோ அது போலவே அவரின் இறுதி நாட்களில் ஒரு தீர்க்கமான முடிவை அவர் எடுத்து இருந்தால்., இராமநாதபுரம் கலவரம் நடக்காமல் இருந்து இருக்குமே என்றால் ., அவரின் புகழ் இராமநாதபுரம் வட்டாரத்தையும் தாண்டி , ஒரு குறிப்பிட்ட சமூகம் தாண்டி ., தமிழகம் தாண்டியும் பரவியும் இருக்கலாம்
பசும்பொன் எனும் மிக சிறிய கிராமத்தில் இருந்து வெளி வந்தவர் .. இந்திய அளவில் பேசப்படும் தலைவராக தன் 32 ஆம் வயதிலே உருப்பெற்று ., ஒரு சமூகத்தின் குற்ற பரம்பரை ஒழித்து கட்டி ., தேசமும் தெய்விகமும் எனது இரு கண்கள் என கூறி ., தான் நின்ற தேர்தலில் எல்லாம் தோல்வியே காணாமல் ., இன்னமும் அப்பகுதி மக்களின் பசும்பொன்னாக அவரை நிலை நிறுத்தும் மக்கள் அவருக்கு குரலாக ஒங்கி ஒலிப்பது மறுக்கப்படா உண்மை
ஆசிரியர் சவெரா எழுதி வரும் தமிழக வரலாறை திருத்திய தமிழர்கள் வரிசையின் ஒரு பகுதி ..

கருத்துகள் இல்லை: