சனி, 3 நவம்பர், 2018

திருப்பூர் தீண்டாமை சுவர் அகற்றப்பட்டது

அகற்றப்பட்ட தீண்டாமை வேலி!மின்னம்பலம்: திருப்பூர் மாவட்டத்திலுள்ள அலகுமலை கிராமத்தில் கோயிலுக்குச் சொந்தமான நிலம் என்று கூறி சாலையில் வேலி அமைத்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை அகற்றினர் அரசு அதிகாரிகள்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகேயுள்ள அலகுமலை கிராமத்தில் ஈஸ்வரன் கோயில் உள்ளது. இப்பகுதியில் தலித் மக்கள் வசித்து வருகின்றனர். கோயில் வழியே செல்லும் சாலையானது, அவ்வூரின் மற்ற பகுதிகளை அடைய உதவி வந்தது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 15ஆம் தேதியன்று அலகுமலை கோயில் சாலையின் குறுக்கே திடீரென்று முள்வேலி போடப்பட்டது. ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம் தலைமையில், சிலர் இதனைச் செய்ததாகத் தகவல் வெளியானது.

சாலையின் குறுக்கே வேலி அமைத்ததால், அங்குள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் 3 கி.மீ. சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குடிநீர் தேவையப் பூர்த்தி செய்யக் கூட, வேலியைத் தாண்டிச் செல்ல வேண்டிய நிலை உண்டானது. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் பாதிப்பைச் சந்தித்தனர். அத்தியாவசியத் தேவைகளுக்கே, அப்பகுதி மக்கள் சிரமப்படும் நிலைமையில் இருந்தனர்.
இதன் பின்னர், கோயில் சாலை குறித்த விவரங்களை அறிய அப்பகுதிக்கான வட்டாட்சியர் அலுவலகத்தைச் சிலர் நாடினர். அப்போது, வேலி அமைக்கப்பட்ட நிலமானது தமிழக அறநிலையத் துறைக்குச் சொந்தமானதல்ல என்று தெரிய வந்தது. அது அரசுக்குச் சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலம் என்ற உண்மை வெளியானது. இது பற்றி வட்டாட்சியர், ஆட்சியரிடம் மனு அளித்தனர் அப்பக்தி மக்கள். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி நியூஸ்18 ஊடகம் செய்தி வெளியிட்டது.
இந்த பிரச்சினையைத் தீர்க்க, நாளை (நவம்பர் 4) இந்த வேலியைத் தானாக அகற்றும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தது தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு. ஊடகங்களில் இதுபற்றிய தகவல்கள் வெளியான நிலையில், நேற்று (நவம்பர் 2) திருப்பூர் சார் ஆட்சியர் ஷர்வண்குமார் அலகுமலை சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், பல்லடம் காவல் கண்காணிப்பாளர் முத்துசாமி தலைமையில் காவல் துறையினர் அந்த வேலியை அகற்றினர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது தீண்டாமை ஒழிப்பு முன்னணி.
அப்பகுதியில் நிலவும் சமூக நல்லிணக்கத்தைச் சிதைக்கச் சில சமூக விரோத சக்திகள் முயற்சித்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் அதனைத் தடுத்து தலித் சமூகத்தவரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டக் குழு.

கருத்துகள் இல்லை: