வியாழன், 1 நவம்பர், 2018

கோவில்கள், அறக்கட்டளை, சொத்துக்கள், குத்தகையாளர்கள் விபரங்கள்: இணையதளத்தில் பதிவேற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

tamilthehindu : கோவில்கள், அறக்கட்டளைகள் ஆகியவற்றிக்கு சொந்தமான சொத்துக்களின் குத்தகை விவரங்களையும், குத்தகை பாக்கிதாரர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த விவரங்களையும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்புகளூர் வேலக்குறிச்சி ஆதினத்திற்கு சொந்தமான 12.5 ஏக்கர பரப்பிலான நிலங்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க இந்துசமய அறநிலைத்துறையின் கீழ் செயல்படும் வாடகை நிர்ணயக்குழுக்கு உத்தரவிடக்கோரி ஆதினகர்த்தரான ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ பரமாச்சாரிய சுவாமிகள் வழக்கு தொடர்ந்தார்.
கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஒரு மாதத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட வேண்டுமென அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்ட நிலையில், தியாகப்பாரி என்பவருக்கு 10 ஆண்டுகளுக்கு 83 லட்சத்துக்கு கோவில் செயல் அலுவலர் குத்தகை தொகை நிர்ணயிக்கப்பட்டதாகவும், அதற்கு அரசு அதிகாரிகள் உடந்தை எனவும் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தியாகபாரி எந்த உரிமமும் இல்லாமல் ஆக்கிரமித்துள்ளதால் அவரை ஆக்கிரமிப்பாளர் என்றே கருத வேண்டுமென அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீதும், தொடர்புடைய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பல்வேறு இடங்களில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் மூன்றாவது நபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், கோவில் நிலங்கள் இதுபோன்ற முறைகேடுகள் சம்பந்தபட்ட துறைகள் கண்டும் காணாமல் வாய்மூடி மௌனியாக இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு நிலம், கோவில் நிலம், அறக்கட்டளை நிலம் ஆகியவை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருவதாக தெரிவித்த நீதிபதி, இதை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக கண்டனம் தெரிவித்தார்.
கோவில் நலனுக்கும், பக்தர்களின் நலனுக்காகவும், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை நல்ல உள்ளங்கள் தானமாக வழங்குகின்றனர் என்றும், ஆனால் அந்த உன்னத நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சம்மந்தப்பட்ட கோவில் அறங்காவலர்களே தவறாக பயன்படுத்துவதாக நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். இந்த சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் கடமை தவறிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆணையர், இணை ஆணையர் ஆகியோரும் கடமை தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மூத்த ஐ.ஏ.எஸ். இந்துசமய அறநிலையத்துறை ஆணையர், தன் கீழ் பணியாற்றக்கூடிய அதிகாரிகளை கண்காணித்து பணிகளை ஆய்வு செய்ய வேண்டிய கடமை உள்ளது; இனிமேலாவது அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடி நடவடிக்கைகளில் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பையும் பதிவுசெய்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 36 ஆயிரம் கோவில்களின் சொத்துகள், நகைகள் உள்ளிட்டவற்றை கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்துசமய அறநிலையத்துறை சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்குகளை விசாரணைக்கு ஏற்ககூடாது என அனைத்து சிவில் நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். குத்தகை காலம் முடிவடைவதை முறையாக கண்காணிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளளார்.
இதுதவிர சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதந்படி, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், அறக்கட்டளைகள் ஆகியவற்றிக்கு சொந்தமான சொத்துக்களின் குத்தகை விவரங்களையும், குத்தகை பாக்கிதாரர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த விவரங்களையும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
கோவில் சொத்து ஆக்கிரமிப்பளர்களை கண்டறிந்து மூன்று மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை பின்பற்றிவிட்டு 2019-ம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: