வியாழன், 7 ஜூன், 2018

தலித் குடியரசுத் தலைவரைக் கோயிலுக்குள் விடவில்லையா... திராவிடர் கழகம் போராட்டம் !

குடியரசுத் தலைவரைக் கோயிலுக்குள் விடவில்லையா?மின்னம்பலம்: தீண்டாமை காரணமாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.
கடந்த மாத இறுதியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாட்கள் பயணமாக ராஜஸ்தான் சென்றார். தனது பயணத்தின்போது அஜ்மீர் மாவட்டம் புஷ்கர் எனுமிடத்தில் உள்ள பிரம்மா கோயிலில் வழிபாடு செய்யச் சென்றார். கோயில் பூசாரிகள் அவரை அனுமதிக்கவில்லை. எனவே, அவர் கோயிலுக்கு வெளியில் உள்ள படியில் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து வழிபாடு செய்தார். இந்த கோயிலுக்குள் பல ஆண்டுகளாக தலித் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற காரணத்தாலே குடியரசுத் தலைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி சமூக வலைதளத்தில் பரவியது. தீண்டாமை காரணமாகவே குடியரசுத் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று முதலில் செய்தி வெளியிட்ட தி வையர் தளம் தனது செய்தியை விலக்கிக்கொண்டது. ஆனால், இந்தச் சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மனைவிக்கு மூட்டுவலி பாதிப்பு இருக்கின்ற காரணத்தாலே அவர்கள் கோயிலின் முகப்பிலுள்ள படியில் அமர்ந்து வழிபாடு செய்தனர்” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இருவேறு கருத்துகள் நிலவிவரும் நிலையில், இந்நிகழ்வைக் கண்டித்து இன்று (ஜூன் 7) திராவிடர் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ‘ராஜஸ்தான் கோயிலுக்குள் நுழையவிடாது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?’ என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை: