திங்கள், 4 டிசம்பர், 2017

விஷால் விலகும் வரை உள்ளிருப்பு போராட்டம்: இயக்குநர் சேரன் அறைகூவல்! .. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து

cheranதினமணி: சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து  விலகும் வரை தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி டி.டி.வி. தினகரன் அணி  மற்றும் ஜெ.தீபா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இத்தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட நடிகர் விஷாலும் இன்று மனுதாக்கல் செய்தார். அதே சமயம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சேரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
விஷால் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் நிற்பதால் தயாரிப்பாளர் சங்கம் பாதிக்கப்படும். அவர் வேண்டுமானால் ராஜிநாமா செய்து விட்டு தேர்தலில் நிற்கட்டும்.
அவர் ராஜிநாமா செய்யும் வரை எங்களின் உள்ளிருப்புப் போராட்டம் தொடரும்.இதில் மேலும் தயரிப்பாளர்கள் சேர்ந்து கொள்வார்கள்.
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான இந்த 8 மாதத்தில் அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. அவர் தேர்தலில் நிற்பதில் மூலம் அரசுக்கு எதிராக இருப்பது போலாகி விடும். அத்துடன் அரசியல்வாதிகள் கோபத்திற்கும் ஆளாக நேரிடும். 
எனவே அவர் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டும். இல்லா விட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தனது இயலாமையையும் கருத்தில் கொண்டு விஷால் தயாரிப்பாளர்கள் சங்க பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு சேரன் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: