வியாழன், 31 ஆகஸ்ட், 2017

சில நாட்களில் ஆட்சி மாற்றம்: ஸ்டாலின்

இன்னும் சில நாட்களில் தமிழக மக்களுக்கு ஒரு விடிவுகாலம் வரும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சேலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. 19 எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் சட்டசபையை உடனடியாகக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தி வருகின்றன. ஆளுநர்,' அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் சட்டப்படி தான் தலையிட முடியாது' என்று கூறியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இன்று குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சேலத்தில் இன்று (ஆகஸ்ட்-31) நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், “தற்போது தமிழகம் இருக்கக் கூடிய சூழ்நிலையில், ஆட்சியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டுமென 19 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். முன்பு பன்னீர்செல்வம் அணியில் 10 உறுப்பினர்கள்தான் இருந்தார்கள், அவர்களின் கோரிக்கையை ஏற்று கவர்னர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். ஆனால் தற்போது ஏன் மறுக்கிறார். ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருப்பது என்னவோ 19 பேர்தான் ஆனால் 40 எம்.எல்.ஏ.க்கள் வரை போர்க்கொடி தூக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது” என்று கூறினார்.
மேலும் அவர், “தற்போதையை சூழ்நிலையில் தீவிரமாக ஆலோசித்து சட்டபூர்வமாக ஒரு முடிவெடுப்போம். அந்த முடிவு திமுகவின் சுயநலமாக இருக்காமல், மக்களின் பொதுநலனுக்காகவே இருக்கும். இவ்வளவு நாட்கள் பொறுத்திருந்தீர்கள், இன்னும் சில நாட்கள் காத்திருங்கள். நான் சில வருடங்கள், சில மாதங்கள் என்று சொல்லவில்லை. சில நாட்கள் என்றுதான் கூறுகிறேன். விரைவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராக உள்ளனர். அதற்கான சூழ்நிலையை திமுக உருவாக்கித் தரும்” என்று தெரிவித்துள்ளார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: