திங்கள், 28 ஆகஸ்ட், 2017

நாஞ்சில் சம்பத் :நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி ஆகியவை தனியார் சொத்துக்கள்;

நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி ஆகியவை தனியார் சொத்துக்கள்; அவற்றை கையகப்படுத்த எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் யார் உரிமை கொடுத்தது என்று தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்தும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிலையிலும் அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சசிகலா, தினகரனால் செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செல்லாது. நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி மீடியாக்களைக் கட்சியே நடத்த வேண்டும். செயற்குழுவும், பொதுக்குழுவும் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும். சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கிவைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி விபரீதத்தின் எல்லைக்கே செல்கிறார். 21 எம்எல்ஏக்கள் நம்பிக்கை இல்லை என்று கூறியவுடன் அவர் பதவி விலகியிருக்க வேண்டும்.
நமது எம்.ஜி.ஆர், ஜெயா டிவியை கையகப்படுத்துவேன் என்று ஒரு முதல்வர் கூறுகிறார். ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் உள்ளிட்டவை தனியார் சொத்து அதைக் கையகப்படுத்தும் உரிமையை எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் யார் கொடுத்தது? எனவே முதல்வரை 420 என்று சொன்னதில் தவறென்ன இருக்கிறது.
தனியார் சொத்தை அரசு கையகப்படுத்த முடியாது என்ற விவரம்கூடத் தெரியாத பழனிசாமி முதல்வராக இருப்பதுதான் தமிழகத்தின் வெட்கக்கேடு. நமது எம்ஜிஆர், ஜெயா டிவியை முடிந்தால் கையகப்படுத்திப் பார்க்கட்டும். அவர்கள் நிறைவேற்றியுள்ள நான்கு தீர்மானங்களில் எதையுமே தீர்மானமாக சொல்லவில்லை. பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார்.
21 எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக நம்பிக்கை இல்லை என்று கூறுவதால்,இவர்களால் உரிமை மீறல் குழுவைக் கூட்ட இயலாது” என்று தெரிவித்துள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: