புதன், 30 ஆகஸ்ட், 2017

விஜயதரணி :ஆளுநர் இருவரின் கையை பிடித்து இணைத்து வைக்கிறார். இதுதான் இவர் வேலையா?

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், ஜவாஹிருவல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது பெரும்பான்மையை இழந்து நிற்கும் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிட வலியுறுத்தினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ''எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறிய 19 எம்.எல்.ஏ.க்களும் அதிமுக-வில் உள்ளதால் நடவடிக்கை எடுக்க இயலாது. வேறு கட்சியில் சேர்ந்தால் நடவடிக்கை எடுக்கலாம். ஆளுங்கட்சியில் இருந்து விலகாமல் அதே கட்சியில் தொடர்வதால் சட்ட நடவடிக்கை எடுப்பதில் சிரமம்'' என ஆளுநர் தெரிவித்ததாக கூறியுள்ளார்.


இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதாரணி, 19 எம்.எல்.ஏ.க்கள் முதல் அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்கின்றனர். அந்த முதல் அமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கும், அந்த அரசு உருவாவதற்கும் ஆதரவு அளித்த எம்எல்ஏக்கள் தற்போது தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாக சொல்கிறார்கள். அந்தக் கட்சியில் இருந்துகொண்டே வாபஸ் பெறலாம். பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டிய கட்டாயம் ஆளுநருக்கு உள்ளது. அவர்கள் கொடுத்த கடிதத்திலேயே ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். அப்படி இருக்கும்போது ஆளுநர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலும் அனுப்பவில்லை. ஆளுநர் முறையான பதில் கடிதம் எதுவும் வெளியிடவில்லை. இந்த மாதிரி சொன்னால் என்ன நடக்கும் என பல்ஸ் பார்க்கிறார்.

பெரும்பான்மையை இழந்து நிற்கும் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தியவர்களிடம் 19 எம்எல்ஏக்கள் விலகாமல் அதே கட்சியில் தொடர்வதால் சட்ட நடவடிக்கை எடுப்பதில் சிரமம் என சொல்லி அனுப்பியிருக்கிறார். இது தவறான நடைமுறை. சட்டத்திற்கு புறம்பானது. ஆளுநர் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். முறையான நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

மத்திய பாஜக ஆளுநரை இயக்குகிறது என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் இருக்க வாய்ப்பில்லை. நடுநிலையாக ஆளுநர் செயல்படவில்லை. வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார். சசிகலாவின் ஆதரவோடு 122 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கும்போது 22 நாட்கள் காக்க வைத்தார். அதுவே ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமி அணி இணைவதற்கு முன்கூட்டியே வந்து காத்திருந்தார். இருவரின் கையை பிடித்து இணைத்து வைக்கிறார். இது ஆளுநரின் வேலையா. அதன் பிறகு பதவியேற்று வைக்கிறார். இணையப்போகிறோம் என்ற அறிவிப்பு வருவதற்கு முன்பே வந்து காத்திருந்து இதையெல்லாம் செய்து வைக்கிறார்.

இப்பவும் 19 எம்எல்ஏக்கள் முதல் அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று கடிதம் கொடுத்து ஒரு வாரம் ஆகிறது. எந்த பதிலும் முறையாக கொடுக்கவில்லை. தன்னை சந்திக்க வருபவர்களிடம் இந்த பதிலை சொல்லி அனுப்புகிறார்.&>வே.ராஜவேல்<  நக்கீரன்

கருத்துகள் இல்லை: