புதன், 7 டிசம்பர், 2016

‘ஜெ’-வை உருவாக்கியவர்கள் நாங்கள்: மீண்டும் சீனுக்கு வந்த நடராஜன்!

ஜெயலலிதா மறையும் வரை அமைதியாக இருந்த சசிகலா நடராஜன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் பேசத்துவங்கியிருக்கிறார்.
நேற்று இரவு, ‘நியூஸ் 18’ தமிழ்நாடு டிவி சேனலுக்கு சசிகலா நடராஜன் அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “அதிமுகவில் வெற்றிடமே இல்லை. புரட்சித்தலைவரின் புகழும் புரட்சித்தலைவி அம்மாவின் புகழும் இருக்கும் வரையில் அதிமுக தொடரும். புரட்சித்தலைவரின் இரட்டை இலையும் புரட்சித்தலைவி அம்மாவுடைய உழைப்பும் இருக்கும் வரை அதிமுக தொடரும். புரட்சித்தலைவரை அடக்கம் செய்தபோது யார் அடுத்த தலைவர் என்பதை தேர்வு செய்த மிக முக்கியமான தலைவர்களாக நாங்கள் இருந்தோம். அவர்களில் பலர் பல்வேறு இடங்களில் இருக்கிறார்கள். அவர்கள் பெயரைச் சொன்னால் தாமதமாகும். இந்தக் கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய தகுதி வாய்ந்தவர் யார்? என்று தீர்மானிக்கும் இடத்தில் நாங்கள் எல்லாம் அப்போது இருந்தோம்.
திருட முடியாது

எம்.ஜி.ஆர். காத்து வந்த அதிமுக என்ற ஒளிவிளக்கை ஏந்தும் தகுதியுள்ள ஒரே ஒருவர் புரட்சித்தலைவி அவர்கள்தான் என்று நாங்கள் அப்போது முடிவு செய்தோம். 28 ஆண்டுகாலம் இந்த கட்சியை வழிநடத்தி, எம்.ஜி.ஆர்.உருவாக்கிய பாரம்பரியத்தைக் கொண்டு வந்துவிட்டார் ஜெயலலிதா. இப்போது திராவிட இயக்க ஆட்சியும் 50 ஆண்டுகாலம் நிறைவு பெறும் கட்டத்தில் உள்ளது.
அண்ணா, எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி என இவர்களின் சகாப்தம் என்றும் தொடரும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் போட்ட விதையை எந்த ஒரு தனி நபராலும் திருடிவிட முடியாது. இரட்டை இலையையும் அதிமுக என்ற கட்சியும் காலத்தை கடந்து நிற்கும். இதை வீழ்த்துவதற்கு வெளியில் இருந்து யாரும் இல்லை. சாதாரண கடைநிலையில் இருக்கிற தொண்டன்கூட இக்கட்சியை கொண்டு செல்ல முடியும். அப்படிப்பட்ட அடித்தளத்தை அவர்கள் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். இரண்டு கோடி தொண்டர்களைக் கொண்ட ஒரு கட்சி இந்தியாவில், ஏன் இந்த உலகத்தில் இருக்கிறதா? கடைநிலை தொண்டன் இருக்கும் வரை இந்த கட்சி தொடரும்”.இவ்வாறு நடராஜன் கூறினார்.  minnambalam.com/

கருத்துகள் இல்லை: