புதன், 7 டிசம்பர், 2016

பொதுச்செயலாளர் சசி: செப்டம்பர் 20இல் ஒப்புக்கொண்டாரா ‘ஜெ’? பத்திரம் முன்தேதி இடப்பட்டது?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி நாட்களில் இடம்பெற்ற அத்தனை  விடயங்களிலும் ஒரு மர்ம நாவலுக்கு உரிய ரகசியத் தன்மை இருந்தமை கொஞ்சம் யோசிக்க வேண்டிய ,கவனிக்க பட வேண்டிய ஒன்றாகும் . பல சந்தேகங்கள் எதிர்காலத்தில்  நிச்சயம் எழும். ஜெயலலிதா அதை கூறினார் இதை கூறினார் . கையெழுத்து வைத்தார் என்றெல்லாம் இனி கூறுவதை நம்புவது கொஞ்சம் சிரமமான காரியம்தான்.முன்தேதி இட்ட பத்திரம் தயார் செய்வது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல   
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், செப்டம்பர் மாதம் 20ஆம் தேதியே போயஸ் தோட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அன்று போயஸ் தோட்டத்தில் அதிமுக கட்சியின் சட்டங்களில் மிக முக்கியமான எட்டு திருத்தங்களைச் செய்திருக்கிறார் ஜெயலலிதா. மேலும், அன்றே அதிமுக-வின் பொதுச்செயலாளர் சசிகலா என்று முடிவெடுக்கப்பட்டதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை ஜெயலலிதாவே தயார் செய்துள்ளதாகவும் நமது ‘மின்னம்பலம்’ இணைய இதழுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் கடந்த 75 நாட்களாக நீங்கா நிழலாக ஜெயலலிதாவின் பக்கம் இருந்தார் சசிகலா. டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதாவின் உயிர் பிரிந்ததை அறிவித்தது அப்பல்லோ நிர்வாகம். டிசம்பர் 6ஆம் தேதி காலை முதல் இறுதி ஊர்வலம் வரை ஒரு கணமும் ஜெயலலிதாவை விட்டு அகலாமல் தலைமாடு காத்தார் சசிகலா. 

ஜெயலலிதாவின் உடலுக்கு முப்படை வீரர்களும் அரசு மரியாதை செலுத்த, அடுத்து நடந்தது அனைவரையும் சிந்திக்க வைத்தது. ஜெயலலிதாவின் வாரிசாக முன் நின்று சசிகலா இறுதிச் சடங்குகளை செய்யத் தொடங்கினார். பட்டர் ஒருவர் வழிகாட்ட வாரிசாக முன் நின்று ஜெயலலிதாவுக்கு இறுதி பால் வார்த்தார் சசிகலா. இதையடுத்து வாய்க்கரிசியிட்டார். இறுதியில் சந்தனக் கொள்ளி ஏந்தி ஜெயலலிதாவின் வாரிசு, தான்தான் என்பதை இந்த உலகத்துக்குச் சொல்லாமல் சொல்லிவிட்டார் சசிகலா. இந்து மரபின்படி இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்பவரே இறந்தவரின் வாரிசாக கருதப்படுவார். இந்நிலையில் ஜெயலலிதாவின் இறுதி சடங்கை செய்திருக்கிறார் சசிகலா. எனவே, சசிகலாவே ஜெயலலிதாவின் வாரிசு என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் விரைவில் அதிமுக பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஜெயலலிதாவால் அதிமுக-வின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வக் கடிதம் அதிமுக பொதுக்குழுவில் வாசிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: