சனி, 10 டிசம்பர், 2016

பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் கொலையான இளம்பெண்ணின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு மேலும் பரபரப்பு தகவல்கள்

தாம்பரம், பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் கொலையான இளம்பெண்ணின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலையில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இளம்பெண் கொலை சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள நெடுங்குன்றம் கருமாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவருடைய மகள் சோனியா(வயது 23). இவர், தாம்பரத்தில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். இவரும், அதே தெருவில் வசித்து வரும் பிரசாந்த் (24) என்ற வாலிபரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திடீரென பிரசாந்துடன் சோனியா பேச மறுத்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த பிரசாந்த், நேற்று முன்தினம் மாலை பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் சோனியாவின் கழுத்தை அறுத்தார்.


இதில் படுகாயம் அடைந்த சோனியா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பிரசாந்த், பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியானது.

இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

சந்தேகப்பட்டார்

பிரசாந்த், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ முடித்து விட்டு ஊரப்பாக்கத்தில் உள்ள கார் உதிரிப்பாக தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். ஒரே தெருவில் வசித்து வந்ததால் முதலில் சோனியாவுடன் நட்பாக பழகி வந்தார். பின்னர் காதலாக மாறி இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர்.

சோனியா, தனது தோழிகள், நண்பர்களிடம் சகஜமாக சிரித்து பேசும் பழக்கம் உடையவர். ஆண் நண்பர்களிடம் சிரித்து பேசியதால் சோனியா மீது சந்தேகப்பட்டு அவரிடம் பிரசாந்த் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த சோனியா, காதலிக்கும் போதே தன்னை சந்தேகப்படுகிறானே என்று நினைத்து பிரசாந்திடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் பிரசாந்த், சோனியா வேலைக்கு செல்லும்போது அவரது தோழிகளுக்கு எதிரிலேயே, என்னை விட்டு விலக நினைத்தால் உன் மீது திராவகம் வீசுவேன் என மிரட்டினார்.

செல்போனில் மிரட்டல்

வீட்டில் கஷ்டமான சூழ்நிலை இருந்ததால் இதை வீட்டில் சொன்னால் வேலைக்கு அனுப்ப மாட்டார்கள். குடும்பம் கஷ்டப்படும் என நினைத்த சோனியா, இதுபற்றி தனது வீட்டில் சொல்லாமல் மறைத்து விட்டார். தனது தோழிகளிடம் மட்டும் பிரசாந்தின் மிரட்டல் குறித்து தெரிவித்து அழுது புலம்பினார்.

செல்போனில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் தனது செல்போன் எண்ணையும் மாற்றி விட்டு புதிய எண்ணை வாங்கி சோனியா பயன்படுத்தினார். எப்படியோ அந்த எண்ணையும் தெரிந்து கொண்ட பிரசாந்த், செல்போனில் தொடர்ந்து சோனியாவை மிரட்டி வந்தார். பிரசாந்தின் தொல்லை பொறுக்க முடியாமல் நடந்த சம்பவங்களை தனது வீட்டில் கூறி சோனியா அழுதார்.

தந்தை-அக்காள் கணவர்

இதையடுத்து சோனியாவின் தந்தை மற்றும் அக்காள் கணவர் இருவரும் பிரசாந்திடம் நேரில் சென்று, சோனியாவுக்கு பிடிக்கவில்லை என்றால் அவளை விட்டு விடுங்கள். வீணாக அவளை மிரட்டாதீர்கள் என்று கண்டித்தனர். அப்போது அவர்கள் இருவரையும் பிரசாந்த் மிரட்டி அனுப்பி விட்டார்.

இதன் பின்னர் சோனியா வேலைக்கு சென்றால் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என நினைத்து அவரது பெற்றோர் அவரை வேலைக்கு அனுப்பாமல் இருந்தனர். வீ்ட்டின் கஷ்ட சூழ்நிலை காரணமாக இந்த ஒரு மாதம் மட்டும் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சோனியா வேலைக்கு சென்றார்.

இந்தநிலையில்தான் அவரை பிரசாந்த் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பெற்றோரிடம் ஒப்படைப்பு

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று சோனியாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் நெடுங்குன்றத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு சோனியாவின் உடலை பார்த்து அவரின் உறவினர்களும், கிராம பொதுமக்களும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவத்தால் நெடுங்குன்றம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

மகளின் உடலை பார்த்து கதறி அழுத தந்தை ஆதிமூலம் கூறியதாவது:-

எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது

ஒரே பகுதியில் வசிப்பதால் எனது மகளும், பிரசாந்தும் நட்பாக பழகினர். இது எல்லோருக்கும் தெரியும். பிரசாந்த் திடீரென சந்தேகப்பட்டதால் அவரிடம் இருந்து எனது மகள் விலகி வந்து விட்டாள். அதன் பின்னரும் அவளை கொலை செய்வதாக மிரட்டி வந்தார். நாங்கள் தட்டிக்கேட்ட போது எங்களிடம் தகராறு செய்தார்.

இதனால் எனது மகளை வேலைக்கு செல்லாமல் வீட்டில் இரு என்றேன். ஆனால் குடும்ப கஷ்டத்தால் இந்த ஒரு மாதம் மட்டும் வேலைக்கு சென்று விட்டு, சம்பளத்தை வாங்கி விட்டு இனிமேல் வேலைக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு வருவதாக கூறி விட்டு சென்றாள். அதற்குள் அவளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார்.

எனது மகளுக்கு ஏற்பட்ட கதி, உலகில் வேறு எந்த இளம்பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத அளவுக்கு கொலையாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கைதான பிரசாந்தை, தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்  dailythanthi.com

கருத்துகள் இல்லை: