சனி, 10 டிசம்பர், 2016

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரத்தயார் என்று பேட்டி!

சென்னை: மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார் என்று பேட்டியளித்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சசிகலா நடராஜன் மீதும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. இவர் போயஸ்கார்டன் இல்லத்தில்தான் பிறந்தாராம். தீபா என பெயரை சூட்டியதே ஜெயலலிதாதான் என கூறப்படுகிறது. ஆனால் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் போயஸ் இல்லத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய பிறகு, தீபாவின் குடும்பம் வெளியேற்றப்பட்டதாம்.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கிற்காக ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, தீபா அவரை சந்திக்க முயன்று தோற்றுப்போனார்.ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோதும், தீபா அவரை சந்திக்க சென்றார். ஆனால் சசிகலா மட்டுமே ஜெயலலிதாவுடன் இருந்து கவனித்து வந்ததால் இவரை உள்ளே விடவில்லை.
ரத்த சம்மந்தப்பட்ட உறவுகள் யாரும் பார்க்கும் முன்பே ஜெயலலிதா காலமானார்., இந்நிலையில், ஜெயலலிதாவின் இறுதி சடங்கு நிகழ்வில் தீபா பங்கேற்க சென்றபோது அவமானப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், தீபாவின் சகோதரர் தீபக் ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு செய்ய அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு செல்ல வேண்டும் என்ற உயில் எழுதப்படாத பட்சத்தில் அது தீபக்கிற்கு சென்று சேரும் என்பதால் அவர் தற்போது போயஸ்கார்டனின் 'அன்பு கவனிப்பில்' இருக்கிறாராம். இந்நிலையில் தீபா ஆங்கில செய்தி சேனலான 'நியூஸ்எக்ஸ்'க்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். தனது அத்தையை போலவே ஆங்கிலத்தில் சரளமாக பேசியுள்ள தீபா தனது வேதனையை பின்வரும் வார்த்தைகளில் இப்படி வெளிப்படுத்தியுள்ளார். நான் பிறந்தது போயஸ் இல்லத்தில்தான். ஆனால் பிற்காலத்தில் எங்கள் குடும்பம் சசிகலாவால் வெளியே விரட்டப்பட்டது. எனது அத்தை அவரது ரத்த உறவுகளிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தப்பட்டார். எனது அத்தை சிறையில் அடைக்கப்பட காரணமே அவரை சுற்றி இருந்த மோசமான நபர்கள்தான். எனது அத்தை உடல் நலக்குறைவால் அவதிப்பட்டபோது அவருக்கு உரிய பராமரிப்பு கொடுக்கப்படவில்லை. உரிய நேரத்தில் அவரருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த தகவல் வெளியே தெரிவிக்கப்படவில்லை. சரியான நேரத்தில் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனது அத்தை மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது என்னை அனுமதிக்கவில்லை. அதிமுகவை பொறுத்தளவில் ஜெயலலிதாவுக்கு பிறகு யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே முடிவு எடுக்கப்படவில்லை. ஜெயலலிதா தனது சொத்துக்கள் குறித்து உயில் எழுதி வைத்துள்ளதாக வரும் தகவல் பற்றியும் எனக்கு எதுவுமே தெரியாது. மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வர தயாராக உள்ளேன். இவ்வாறு தீபா தெரிவித்தார் tamiloneindia.com

கருத்துகள் இல்லை: