சனி, 1 டிசம்பர், 2012

என்கவுன்ட்டர்: மதுரை சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்!

மானாமதுரை: திருப்பாச்சேத்தி சப் இன்ஸ்பெக்டர் ஆல்வின்சுதன் கொலை வழக்கில் இருவர் என்கவுன்ட்டரி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சம்பவ இடத்தில் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.
என்கவுன்ட்டர்
கடந்த அக்டோபர் 27-ந் தேதி திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின் சுதன் ரவுடி கும்பலால் கத்தியால் குத்தப்பட்டார். இதில் மானாமதுரை புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த பாரதி உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். பிரபு உள்ளிட்ட மூவர் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.இந்நிலையில் பாரதி மற்றும் பிரபு ஆகியோர் சிவகங்கை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் இளையான்குடி அருகே கால்பிரிவு என்ற இடத்தில் தப்பியதாகவும் தடுத்த போலீசாரை பெட்ரோல் குண்டுகள் வீசியும் அரிவாளால் வெட்டியதாகவும் கூறி போலீசார் சுட்டுக் கொன்றனர்.

மாஜிஸ்திரேட் விசாரணை
இந்த இடத்தை இளையான்குடி மாஜிஸ்திரேட் மகேஷ்பூபதி இன்று காலை நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பிரபு, பாரதி இருவரையும் சுட்டுக் கொன்ற வெள்ளதுரையிடம் விசாரணை நடத்தினார். அப்பகுதி மக்களிடமும் மாஜிஸ்திரேட் சம்பவம் குறித்து விசாரித்தார்.
கைதிகள் உண்ணாவிரதம்
இதனிடையே இந்த என்கவுன்ட்டர் சம்பவத்துக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து இதே வழக்கில் கைதாகியிருக்கும் 24 பேர் மதுரை மத்திய சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தங்களது உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.
உடலை வாங்க மறுப்பு
இதனிடையே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபு மற்றும் பாரதியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட இருவரது உடலையும் வாங்க மறுக்கும் உறவினர்கள், இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரது தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர். இதனால் பதற்றம் நிலவி வருகிறது.

கருத்துகள் இல்லை: