திங்கள், 26 நவம்பர், 2012

ஜோஷிக்கு தொடர்பில்லை: மாஜி சி.ஏ.ஜி.அதிகாரி திடீர் பல்டி

புதுடில்லி: "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த சி.ஏ.ஜி., அறிக்கையில், தனக்கு தொடர்பில்லை என்று கூறி, திடுக் புகார் தெரிவித்த, சி.ஏ.ஜி., முன்னாள் டைரக்டர் ஜெனரல், ஆர்.பி.சிங், இப்போது திடீர் பல்டி அடித்துள்ளார்.
"சி.ஏ.ஜி., அறிக்கை தயாரிப்பில், பொது கணக்கு குழு தலைவர், முரளி மனோகர் ஜோஷிக்கு தொடர்பு இருப்பதாக சொல்லவில்லை' என, கூறியுள்ளார்."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு என்று செய்தி வெளியானதிலிருந்து இன்றுவரை, அந்த விவகாரம் இடியாப்ப சிக்கலாõக உள்ளது. இந்த ஊழல், தொடர்பாக, சுப்ரீமகோர்ட்டில், அரசுக்கு எதிராக கடும் கண்டனம் வரும்போதெல்லாம், அதற்கு மாறாக கருத்துகள் கிளம்புவதும், மறுப்பதும் நடந்து கொண்டிக்கிறது.
இந்நிலையில், கடந்த வார இறுதியில், புதிதாக கிளம்பினார், சி.ஏ.ஜி.,யின் முன்னாள் டைரக்டர் ஜெரனல், ஆர்.பி.சிங். இவர்தான், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை, தணிக்கை செய்தவர். 14 மாதங்களுக்கு முன், பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர், தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி கொடுத்து குட்டையை குழப்பிவிட்டார்.
அந்த பேட்டியில்," 2ஜி தணிக்கை என் நேரடி பார்வையில் நடந்தது. வரைவு அறிக்கையில், இழப்பு பற்றி குறிப்பிடவில்லை. சி.ஏ.ஜி., உயர்மட்ட அதிகாரிகள் இறுதி அறிக்கை தயாரித்து, என்னை மிரட்டி கையெழுத்துவாங்கிவிட்டனர்; அதில், எனக்கு தொடர்பில்லை.சி.ஏ.ஜி., அறிக்கை தயாரிக்கும் போது, பொது கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி குறுக்கிட்டார்' என்று கூறியிருந்தார்.இவரது பேட்டியை அடுத்து, காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாக துள்ளி குதித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, "பா.ஜ., சாயம் வெளுத்துவிட்டது' என்று குறிப்பிட்டு இருந்தார்.இந்த பரபரப்பு, அடங்காத நிலையில், தனியார், "டிவி'க்கு பேட்டியளித்த, ஆர்.பி., சிங், திடீர் பல்டி அடித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு இழப்பு தொடர்பாக, சி.ஏ.ஜி., அறிக்கை தயாரிப்பில், பொது கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆலோசனை வழங்கவில்லை; அவர், தொடர்பு இருப்பதாக சொல்லவில்லை. ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், முரளி மனோகர் ஜோஷியை தொடர்பு படுத்தி தவறாக தகவல்களை வெளியிட்டு விட்டனர்,பொது கணக்கு குழு உறுப்பினர் ஒருவர் தான் ஆலோசனை வழங்கினார். அவர் பெயர் உட்பட பிற விபரங்களை என்னால் உறுதி படுத்தமுடியவில்லை. ஆனால், ஒருவர் ஆலோசனை வழங்கினார் என்பதை உறுதியாக சொல்கிறேன்.மேலும், காங்கிரஸ் கட்சி பின்னால் இருந்து என்னை இயக்குகிறது என்ற குற்றச்சாட்டும் தவறானது. இந்த விஷயத்தில், ஐ.மு., கூட்டணி அரசுடன் தொடர்பு இல்லை. இது தொடர்பாக, நான் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இதை அரசியலுடன் தொடர்பு படுத்த வேண்டாம்.அறிக்கையில் இடம்பெற்றிருந்த அம்சங்கள் எனக்கு தெரியும். என் துறைக்கு, சி.ஏ.ஜி.,யின் உத்தரவுகளை எதிர்க்கவோ, மறுக்கவோ எவ்வித அதிகாரமும் அளிக்கப்படவில்லை.இருப்பினும், வரைவு அறிக்கையும், இறுதி அறிக்கையும் மாறுபட்டு இருந்ததை நான் அறிவேன்.சமீபத்தில் நடந்த ஏலத்தில் கிடைத்த வருவாய்க்கும், சி.ஏ.ஜி., அறிக்கையில் குறிப்பிட்ட தொகைக்கும் வித்தியாசம் இருப்பது குறித்து என்னிடம் கருத்து கேட்டனர்; அதையொட்டி, பதில் அளித்தேன்.இவ்வாறு, சிங் கூறினார்.சிங்கின் இந்த திடீர் பல்டி, காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கருத்துகள் இல்லை: