புதன், 28 நவம்பர், 2012

Facebook பெண்களை மும்பையில் கைது செய்த போலீஸ் அதிகாரிகள் சஸ்பென்ட்!

கைது செய்யப்பட்ட பெண்கள் பேஸ்புக்கில் பால் தாக்கரே மறைவுக்காக மும்பையில் பந்த் நடத்தப்பட்டதை கண்டித்து கருத்து எழுதிய 2 பெண்களை கைது செய்த எஸ்.பி. உட்பட 2 போலீஸ் அதிகாரிகளை மகாராஷ்டிரா அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
சிவசேனா தலைவர் பால் தாக்கரே கடந்த 17-ம் தேதி இறந்தார். மறுநாள் அவருடைய இறுதிச் சடங்கு நடந்தது. இந்த இரு நாட்களும் மும்பையில் பந்த் கடைப்பிடிக்கப்பட்டது. இதை கண்டித்து ஷாகீன் தாதா என்ற 21 வயது இளம்பெண், ‘பால் தாக்கரே போன்றவர்கள் தினமும் பிறக்கிறார்கள்:  தினமும் இறக்கிறார்கள்’ என்று பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டார். இதை அவருடைய தோழி ரேணு ஸ்ரீனிவாசன் லைக் செய்தார்.
இதையடுத்து, 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.

அதையடுத்து, ஷாகீனின் மாமனாருக்கு சொந்தமான மருத்துவமனையை சிவசேனாவினர் அடித்து நொறுக்கினர். மத உணர்வை புண்படுத்தியதாகவும், இரு சமூகங்கள் இடையே மோதலை ஏற்படுத்த முயன்றதாகவும் இந்த பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இருவரும் பால்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தார்.
நாட்டில் பல திசைகளில் இருந்தும், பலதரப்பானவர்களிடமிருந்தும் எதிர்ப்புகள் வந்து குவியத் தொடங்கவே, இது குறித்து விசாரணை நடத்த கொங்கன் பகுதி போலீஸ் ஐ.ஜி.பி.யை மகாராஷ்டிரா அரசு நியமித்தது. அவர் தனது அறிக்கையில், ‘பெண்களை கைது செய்தது தவறு. இந்த தவறை செய்த போலீசார் மீது நடவடிக்க எடுக்க வேண்டும்’ என்று அரசுக்கு பரிந்துரை செய்தார்.
அதன்படி, தானே மாவட்ட (ரூரல்) போலீஸ் எஸ்.பி. ரவீந்திர செங்காவ்கர், பால்கர் போலீஸ் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் பிங்க்ளே ஆகியோரை மகாராஷ்டிரா அரசு நேற்று சஸ்பெண்ட் செய்தது. <

கருத்துகள் இல்லை: