செவ்வாய், 27 நவம்பர், 2012

FDI வாக்கெடுப்புடன் விவாதத்துக்கு தயார் என மத்திய அரசு அறிவிப்பு!! திமுக ’தைரியம்

டெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் அரசை ஆதரிப்போம் என்று திமுக அறிவித்துவிட்டதால் மத்திய அரசும் ‘தைரியமாக' வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு தயார் என அறிவித்திருக்கிறது.
வாக்கெடுப்புக்கு தயார்
டெல்லியில் இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத், அன்னிய முதலீட்டு விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. இந்த விவகாரத்தில் எந்த விதியின் கீழும் விவாதம் நடத்தலாம். இது பற்றி அவைத்தலைவர்களே முடிவு செய்வார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முடிவை அவைத் தலைவர்களுக்கு தெரிவித்துவிட்டோம் என்றார்.

பிரதமர் நம்பிக்கை
கூட்டம் முடிந்த பிற்கு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங்கும், எங்களுக்கான ஆதரவு எண்ணிக்கை இருக்கிறது என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
மத்திய அரசைப் பொறுத்தவரையில் திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்டதால் இத்தகைய ஒரு நிலையை மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து வந்த திமுக திடீரென இன்று அரசுக்கு ஆதாவளிப்போம் என்று அறிவித்திருப்பதுதான் மத்திய அரசுக்கு கூடுதல் பலமாக கருதி வாக்கெடுப்புக்கு தயாராகி இருக்கிறது என்பதே யதார்த்தம்!

கருத்துகள் இல்லை: