செவ்வாய், 27 நவம்பர், 2012

கி.வீரமணி: தி.மு.க. நிலைப்பாடுதான் சரியானது! ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணைபோககூடாது

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை உறுதியாக எதிர்க்கும் தி.மு.க., மத்தியில் ஆட்சி கவிழ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டினை தி.மு.க. தலைவர் கலைஞர் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்துத் தெரிவித்துள்ளார்.திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று (27.11.2012) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு மூலதன முதலாளிகளை அனுமதித்தால் நம் நாட்டு சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், காங்கிரஸ், மற்றும் ஒரு சிலர் தவிர, எல்லோரும் எதிர்க்கிறார்கள். ஏனோ ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைமை இதில் பிடிவாதம் காட்டுகிறது.
மாநில அரசுகளுக்குச் சுதந்தரம் உண்டு. அனுமதிக்கவோ, மறுக்கவோ என்று கூறிடும் நிலையில் இதில் பிடிவாதம் காட்டுவது முரண்பட்ட ஒரு நிலைப்பாடு ஆகும்.
தி.மு.க. இதில் உறுதியாக இருப்பது பாராட்டத்தக்கது; வாக்கெடுப்பை வலியுறுத்தி, பா.ஜ.க. போன்ற எதிர்க்கட்சி திட்டமிட்டே நாடாளுமன்றத்தை முடக்குவது நியாயமல்ல. மக்கள் விரோதப் போக்கே ஆகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை எதிர்க்கட்சியினர் கேலிக் கூத்தாக்குகின்றனர்.

வாக்கெடுப்பு நடத்தினால்கூட, இன்றுள்ள சூழ்நிலையில் பல எதிர்க்கட்சிகளே ஆட்சியைக் கவிழ்க்க அவசரப்படாதபோது, தயாராக இல்லாதபோது, இப்போது  பாராளுமன்றத்தை நடக்க விடாமல் செய்வது எப்படி  நியாயமானதாகும்?
‘‘இந்நிலையில், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை உறுதியாக எதிர்க்கும் தி.மு.க., ஆட்சி கவிழ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்;’’ அதன் மூலம் பிற்போக்கு மதவாத சக்திகளுக்கு வலுவூட்டும் வகையில் காரணமாக அமைய மாட்டோம் என்ற நிலைப்பாட்டினை தி.மு.க. தலைவர் கலைஞர் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

திராவிடர் கழகம் தி.மு.க.வின் இந்த நிலைப்பாட்டைப் பாராட்டுகிறது.
பொறுப்புள்ள முற்போக்கு சிந்தனை உள்ள எதிர்க்கட்சிகளும் இதே நிலையை எடுப்பதன் மூலம் மதவெறிக் கட்சிகளை கரங்களை மறைமுகமாக வலுப்படுத்தக் காரணமாகி விடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ளுகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: