திங்கள், 26 நவம்பர், 2012

தலித்கள் மீது தேவர் சாதி போலீசின் கொலைவெறியாட்டம் !


கேவலம் பள்ளன் பறையனெல்லாம் போலீச எதிர்த்துப் பேசுவதா? அப்புறம் பாண்டியமாரு மரியாதை என்னாவது? என்கிற சாதிவெறிதான் போலீசை கொலைவெறியுடன் இயக்குகிறது என்கிறார் ஆனந்தனின் தாய்

     ஆனந்தன்கூமாபட்டி-வத்திராயிருப்பு பகுதிகளில் தலித்கள் மீது தேவர் சாதி போலீசின் கொலைவெறியாட்டம் !


    வண்டியில் இருப்பவர் ஆனந்தன்
    பார்ப்பன பாசிச ஜெயலலிதாவின் ஆட்சி வந்து விட்டால் போலீசுக்குக் கொண்டாட்டம் தான். ஜெயலலிதாவின் ஆட்சி போலீசின் ஆட்சி. அதுபோலவே ‘அவாளுடைய’ ஆட்சியும் கூட. பார்ப்பன ஊடகங்கள் தொடங்கி ‘அவாளின்’ அனைத்து தரப்புக்கும் ஒரு நமுட்டு மகிழ்ச்சிதான். அத்தோடு இப்போது முக்குலத்தோர் சாதி வெறியாட்டமும் சேர்ந்து கொண்டு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.
    விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் அணைப் பகுதியில் நடைபெற்ற மணல் கொள்ளையை எதிர்த்து தன்னந்தனியாகப் போராடிய தலித் விவசாயி கூமாபட்டி ராமசாமியாபுரம் ராஜேந்திரன் கடந்த அக்டோபர் மாதம் 11ந்தேதி அதற்காகத் தீக்குளித்து இறந்தார். அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுமதி கோரிய அவரது குடும்பத்தார் மற்றும் அந்த ஊர் மக்களை அனுமதிக்காமல் காட்டு மிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தி விரட்டிவிட்டு உடலை போலீசே சிதையில் வைத்து தீ முட்டியது.
    இறுதி அஞ்சலிக்குச் சென்றிருந்த மதுரை மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் மீதும் தடிகொண்டு தாக்கிய டி.எஸ்.பி.சக்திவேல், இன்ஸ்பெக்டர் சக்ரவர்த்தி, சப்இன்ஸ்பெக்டர் ஐயப்பன் ஆகியோர் மீது உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் அளிக்கப்பட்ட புகாரின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
    அதற்குள் மேலும் ஒரு காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறது வத்திராயிருப்பு-கூமாபட்டி போலீசு. கூமாபட்டியை அடுத்துள்ள கான்சாபுரத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் ஆனந்தன். வயது 24. தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் தொழில். கடந்த 13/05/12 அன்று கான்சாபுரத்துக்கு தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் வந்த போது நடைபெற்ற தகராறில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் ஆனந்தன். அவர் மீது காவல்துறை குண்டாஸ் வழக்குப் போட்டது. ஆனால் அந்த வழக்கு விசாரணைக் குழுவின் முன்பாக நிருபிக்க முடியாமல் தள்ளுபடியாகி விட்டது. இருந்தாலும் துடிப்பாகச் செயல்படும் ஆனந்தனின் கொட்டத்தை அடக்க போலீசு துடித்தது. ஆனந்தனைக் கண்ட இடத்தில் கைது செய்யத் தீர்மானித்து கொலை வெறியுடன் அலைந்தது கூமாபட்டி முக்குலத்து சாதிவெறி போலீசு படை.
    கடந்த 14/11/2012 அன்று குடும்பத்தினருடன் அவரது வீட்டிலிருந்த ஆனந்தனை இருபது பேர் கொண்ட போலீசு படை வந்து திடீரென கைது செய்து கூமாபட்டி காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்றது. மறுநாள் 15-ம் தேதி இரவு ஆனந்தனின் பெற்றோரை அழைத்து “உன் மகன் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில இருக்கான் போய் பார்த்துக்க” என்று கூமாபட்டி போலீசு ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் மதுரை மனித உரிமை பாதுகாப்பு மையச் செயலாளருக்கு கூமாபட்டி வழக்கறிஞர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டது. ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது ஆனந்தன் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் குற்றுயிரும் கொலையுயிருமாக தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    ஆனந்தன் நம்மிடம் சொன்னது:
    “நான் அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன் படம் போட்ட பனியன் போட்டிருந்தேன். அந்த பனியனை கழற்றச் சொன்னார் எஸ்.ஐ.சந்திரசேகர். பனியனைக் கிழித்து கீழே போட்டார், அதன்மீது எல்லா போலீசும் சிறுநீர் கழித்தார்கள். அதை எடுத்து திரும்பவும் என்னைப் போடச் சொன்னார்கள். முடியாது என்றதற்காக கடுமையாக அடித்தார்கள். இரவு முழுவதும் கூமாபட்டி காவல் நிலையத்துக்குள் வைத்து என்னை நிர்வாணமாக்கி அடித்தார்கள். மயக்கம் தெளியத் தெளிய லத்தியால் அடித்தார்கள். பூட்ஸ் காலால் வயிற்றில் மிதித்து துவைத்தார்கள். மறுநாள் 15/11/12 மாலை 4.45 மணிவரை அடி ஓயவில்லை. எனது இரண்டு சிறுநீரகங்களும் சிதைந்து சிறுநீர் ரத்தமாக வெளியேறுகிறது. அடிவயிற்றில் உதைத்ததில் ஆசனவாய் வழியாகவும் ரத்தம் வெளியேறுகிறது.”
    பின்னர் ஆனந்தன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு 3 முறை டயாலிசிஸ் செய்யப்பட்டிருந்தது. உள்ளுறுப்புகளில் ரத்தக்கசிவு நிற்கவில்லை. பாதுகாப்பில் இருந்த போலீசு ஆனந்தனைச் சந்தித்துப் பேச யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனந்தனின் உடம்பு முழுவதும் காயம் உள்ளது. லத்தி, இரும்புத்தடி கொண்டு தாக்கிய காயங்கள் உள்ளன. ஆனால் எலும்பு முறிவு இல்லை. கொடுங்காயம் விளைவிக்காமல் கொஞ்ச நாள் அவகாசத்தில் சாவை நோக்கித் தள்ளும் கொலைக்கலையை தமிழக போலீசிடம் உலகமே கற்றுக் கொள்ள வேண்டும். அடிபட்டவரை புகைப்படம் எடுக்க காவல் துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகமும் அனுமதிக்கவில்லை.
    கூமாபட்டி எஸ்.ஐ.சந்திரசேகரன், கருப்பசாமி பாண்டியன், ஏட்டுக்கள் முரளி, பெரியசாமி ஆகியோர் தான் சாதி வெறி கொண்டு கீழ்த்தரமாகத் திட்டி மிருகத்தனமாக அடித்தவர்கள் என்று பதிவு செய்தார் ஆனந்தன். 17ந் தேதி மாலை 5.30 மணியளவில் ஸ்ரீவிலிபுத்துர்ர், மாஜிஸ்டிரேட்டிடம் கொண்டு போன போது ஆனந்தன் தனக்கு நேர்ந்த  கொடுமைகளை விளக்கியிருக்கிறார். மாஜிஸ்டிரேட் ஒரு பெண். அவர்தான் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு போகச் சொல்லியிருக்கிறார்.
    ஆனந்தனின் அப்பா ரெங்கநாதன் விவசாயி. அம்மா மலர்விழி பி.காம். டி.கோ ஆப் பட்டதாரி. சகோதரர் ராஜேஷ், கூமாபட்டி போலீசின் கொலை வெறிக்குப் பயந்து சென்னைக்குப் போய்விட்டார்.
    ஆனந்தன் மீது பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டு வைத்துக்கொண்டு அவரது வீட்டுக்கு கண்ட நேரங்களில் வந்து அவரது பெற்றோரை மிரட்டி வந்துள்ளது போலீசு. போலீசின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பயந்து தலைமறைவாயிருந்த ஆனந்தனை ஒப்படைக்கக் கோரி போலீசு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது.
    ஆனந்தனின் அம்மா மலர்விழியைச் சந்தித்து கேட்ட போது கூமாபட்டி போலீசு அவர்களுக்கு கொடுத்து வந்த இம்சையை வேதனையுடன் விவரித்தார்.
    “என்னுடைய மகன் ஆனந்தன் தென்னை ஏறும் தொழில் செய்து வந்தான். பொதுப் பிரச்சனைகளில் தலையிடுவான். போலீசு செய்யும் சட்ட விரோத செயல்களைத் தட்டிக் கேட்பான். போலீசுக்கு பயப்படமாட்டான். எதிர்த்து நிற்பான். அவன் மேல நிறைய பொய் கேசுகளை போட்டு எங்களை வந்து அடிக்கடி தொல்லை பண்ணினாங்க. என்மேல கூட போலீசு ஒரு பொய் கேச போட்டுச்சு. ஒரு பொம்பளையாளுகிட்ட நான் செல்போன் கேட்டதாகவும், அந்தம்மா தராமாட்டேன்னு சொன்ன உடனே அந்தம்மாவை கழுத்தை நெறித்து கொல்ல முயற்சி பண்ணதாகவும் பொய்கேசு போட்டு உள்ள அடச்சாங்க. நான் ஜாமீன்ல வெளியே வந்தேன். இப்பவும் என்மேல கேசு இருக்குது. போலீசு தொல்லை கொடுக்கிறதப்பத்தி டி.எஸ்.பி. கிட்ட புகார் கொடுத்ததுக்கு கூமாபட்டி எஸ்.ஐ. என்னை சாதியச் சொல்லி கேவலமாக திட்டி “உனக்கு ரெண்டு பிள்ளைகள்ல ஒன்று இல்லன்னு நினைச்சுக்கோ. என்றைக்காயிருந்தாலும் அவனுக்கு என்கையால தான் சாவு. தியாகம் செய்யிறதுக்குன்னு பிள்ளை பெத்து விட்டிருக்கியா? தேவடியாப்பிள்ளையை பெத்து விட்டிருக்க” என்று கேவலமாகப் பேசினார்.”
    ” 2010-ல் ஊர்த்திருவிழாவின் போது கண்ணையா எஸ்.ஐ. வண்டிய (பைக்) அன்பழகன் என்கிற பையன் தீ வச்சுட்டான். அவனப் புடிச்சி ஊர்க்காரங்க ரு.10 ஆயிரம் தெண்டம் வாங்கி எஸ்.ஐ க்கு கொடுத்துட்டாங்க. ஆனா அந்த கேச என் மகன் ஆனந்தன் மேல போட்டுட்டாங்க. தீபாவளியப்ப ஆனந்தனை எப்படியாவது பிடித்துவிடனுமுன்னு கங்கணம் கட்டி அலஞ்சது போலீசு. அதனால் அவனை நான் வெளியூருக்கு அனுப்பிவைச் சுட்டேன். தீபாவளி முடிஞ்சு மறுநாள் (14.11.12) அவன் வந்த உடனே பிடிச்சிட்டுப் போயிட்டாங்க.” என்று சொன்னார் மலர்விழி.

    ஆனந்தனின் பெற்றோர்
    ஆனந்தன் மீது என்ன புகார். என்ன வழக்கு என்கிற எந்த விவரமும் தெரிவிக்காமல் இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். மாஜிஸ்டிரேட்டிடம் கொண்டு போவதற்கு முன் ஆனந்தனின் மாமியாரிடம் மிரட்டி 2 வெற்றுத் தாள்களில் கையொப்பம் வாங்கியிருக்கிறது கூமாபட்டி கிரிமினல் போலீசு. அதில் ஆனந்தன் குடித்துவிட்டு அடிக்கடி வந்து தொல்லை கொடுப்பதாக புகார் எழுதிக் கொண்டது.
    எதற்காக இந்த தாக்குதல். ஏன் இந்தக் கொடுமை? என்ன தவறு செய்தார் ஆனந்தன்?
    மலர்விழியிடம் கேட்ட போது சொன்னார் : போலீசிடம் இருக்கும் சாதி வெறி தான் இதற்கு காரணம். கேவலம் பள்ளன் பறையனெல்லாம் போலீச எதிர்த்துப் பேசுவதா? அப்புறம் பாண்டியமாரு (தேவர் சாதி) மரியாதை என்னாவது? என்கிற வெறிதான்.
    இதுதான் 2011 செப்டம்பர் 11-ல் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவுநாளன்று நடந்தது. அங்கேயும் போலீசில் பெரும்பான்மை முக்குலத்தைச் சேர்ந்தவர்கள் தான். வத்திராயிருப்பு கூமாபட்டி பகுதியிலும் அதே நிலைமை தான் என்று சொல்கிறார்கள்.
    இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தன்மானமுள்ள ஒருவன் போலீசு கையில் சிக்கினால் அந்த ஏரியா முழுவதும் உள்ள சாதி வெறி கொண்ட போலீசு மிருகங்கள் அங்கே அழைக்கப்படும். பெரிய அளவில் திட்டமிடப்பட்டால் உயர் அதிகாரிகள் கூட வருவார்கள். பரமக்குடி செந்தில்வேலன் எஸ்.பி. வந்ததைப் போல. தருமபுரி யிலிருந்து ஆஸ்ராகர்க் மதுரை தேவர் குருபூஜைக்கு அழைக்கப்பட்டதைப் போல. (அந்த நேரத்தில்தான் தருமபுரியில் தலித்களின் மீது வன்னியர்களின் கொலைவெறியாட்டம் நடைபெற்றது).
    பிளவக்கல் மணல் கொள்ளைக்கு எதிராக உயிர்நீத்த தியாகி ராஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தக்கூட அனுமதி மறுத்த போலீசு, தேவர் குருபூஜை சம்பவத்தில் செத்தவர்களின் உடலை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு கோரிப்பாளையம் தேவர் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் பழிக்குப் பழியாக கொன்றொழிப்போம் என்று பகிரங்கமாக கொக்கரிக்கவும் அனுமதித்தது.
    80களில் விருதுநகர் மாவட்டம் சேத்துர்ர், சிவகிரி, வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்கள் ராயப்பன், கணபதி போன்ற நக்சல்பாரி தோழர்களால் சிவந்திருந்தது. அது மீண்டும் சிவந்து விடாமலிருக்க போலீசு இந்த வெறியாட்டம் போடுகிறது என்று கருதுவதற்கும் இடமிருக்கிறது. அத்துடன் போலீசுத் துறையில் புரையோடிப் போயிருக்கும் ஆதிக்க சாதி வெறி-குறிப்பாக முக்குலத்து சாதி வெறியும் ஒரு காரணம். இது ஜெயலலிதாவின் ஆட்சியில் ஒரு புதிய பரிணாமம்.
    ________________________________________________________________________
    தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை

    கருத்துகள் இல்லை: