வெள்ளி, 30 நவம்பர், 2012

ஜெயலலிதாவின் களங்க வழக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது பாய்ந்தது

தமிழக அரசுக்கு எதிராக தவறான கருத்துக்களை கூறியதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி முடங்கி கிடப்பதற்கு மாநில அரசு காரணம் என்றும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். அதேபோல் மத்திய அரசு திட்டப்பணிகள் நிறைவேறாமல் இருப்பதற்கு காரணம் தமிழ்நாட்டில் ஆளும் அரசியல் கட்சி தலைவர்கள் ஒப்பந்ததாரர்களிடம் அதிகப்படியான கமிஷன் தொகை கேட்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இவரது பேச்சானது உண்மைக்கு மாறானது. அடிப்படை ஆதாரமற்றது. வேண்டுமென்று உள்நோக்கத்துடன் அவதூறாக பேட்டி அளித்துள்ளார். இது, முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனவே அவதூறு பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: