புதன், 28 நவம்பர், 2012

ஸ்பெக்ட்ரம் உரிமம் ரத்தான நிறுவனங்களுக்கு அனுமதி தரப்படுமா?

புதுடில்லி: "2ஜி ஸ்பெக்ட்ரம் மறு ஏலம் விடுவதில், அரசு தரப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ஏற்கனவே உரிமம் ரத்து செய்யப்பட்ட தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, சேவையை தொடர அனுமதிப்பது குறித்து, பரிசீலிக்கப்படும்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்களை, பிப்ரவரியில், சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது; மறு ஏலத்துக்கும் உத்தரவிட்டது. மறு ஏலம் நடத்துவதற்கு அவகாசம் தேவைப்படும் என்பதால், உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்கள், நான்கு மாதங்களுக்கு, தங்களின் சேவையை தொடரவும், அனுமதி அளிக்கப்பட்டது.இந்த காலக்கெடு, மே மாதம், 2ம் தேதியுடன் முடிந்து விட்டது. ஆனாலும், மறு ஏலம் விடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, அந்த நிறுவனங்கள், சேவையை தொடர, அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள், ஜி.எஸ்.சிங்வி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், இது தொடர்பான வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:மறு ஏலம் நடத்துவதில், அரசு தரப்பில் தொடர்ந்து தாமதம் நிலவுகிறது. எனவே, ஏற்கனவே உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்கள், மறு ஏலம் முடியும் வரை, தங்களின் சேவையை தொடர, அனுமதி அளிப்பது குறித்து, இந்த கோர்ட், பரிசீலனை செய்யும். அதேநேரத்தில், இதற்காக, தற்போது ஸ்பெக்ட்ரத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை, சம்பந்தபட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.ஆனாலும், இது தொடர்பாக, உத்தரவு எதையும் நீதிபதிகள் பிறப்பிக்கவில்லை.
வக்கீலுக்கு அபராதம்இதற்கிடையே, "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி, ஓ.பி.ஷைனி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., வழக்கறிஞர், ஏ.கே.சிங், அரசு தரப்பு சாட்சியான மீனாட்சியிடம், சில ஆவணங்களை காட்டினார்.இதற்கு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, "குசேகான் ப்ரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ்' நிறுவனத்தின் இயக்குனர்கள், ராஜிவ் அகர்வால், ஆசிப் பால்வா ஆகியோரின் வழக்கறிஞர், விஜய் அகர்வால், கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இதையடுத்து, வழக்கின் விசாரணைக்கு தேவையற்ற முறையில் தாமதம் ஏற்படுத்தியதாக கூறி, வழக்கறிஞர் விஜய் அகர்வாலுக்கு, நீதிபதி, ஓ.பி.ஷைனி, 250 ரூபாய் அபராதம் விதித்தார்.

கருத்துகள் இல்லை: