வெள்ளி, 30 டிசம்பர், 2011

சசிகலாவை வெளியேற்றியது பற்றி விளக்கம் அளிக்க முடிவு?

செயற்குழுக் கூட்டத்தில் கட்சி தொடர்பான முடிவுகளை எடுக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அ.திமு.க., பொதுக்குழு கூட்டத்திற்கு, இக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட, 3,400 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. அழைப்பிதழ் கொண்டு வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் யாரும் எளிதில் உள்ளே நுழைந்து விடாத அளவுக்கு, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பத்திரிகை நிருபர்களுக்கு செய்தி சேகரிக்க, அங்கு அனுமதி இல்லை. கூட்டம் நடக்கும் இடத்தின் வெளியே, நிருபர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா வந்ததும், முதலில் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது. அக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் உட்பட, 160 மட்டுமே பங்கேற்கின்றனர்.
செயற்குழுக் கூட்டத்தில் கட்சி தொடர்பான முடிவுகளை எடுக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. செயற்குழுக் கூட்டம் முடிந்த சில நிமிடங்களில், பொதுக்குழுக் கூட்டம், அவைத் தலைவர், மதுசூதனன் தலைமையில் துவங்கும். முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அமைப்புச் செயலர் செம்மலை எம்.பி., தலைமை நிலைய செயலர் செங்கோட்டையன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், மகளிர் அணி சார்பில், கணிதா சம்பத் எம்.எல்.ஏ., ஆகியோர் பேச அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.

சசிகலா கும்பலை வெளியேற்றியது ஏன், அ.தி.மு.க., இரு முறை ஆட்சியை இழந்ததற்கான காரணங்கள், கடந்த ஆறு மாதங்களில் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள பாதகங்கள் ஆகியவை குறித்து, தொண்டர்களுக்கு இன்றைய கூட்டத்தில் விளக்கப்படும் என்று தெரிகிறது. முல்லை பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்னை, தமிழக அரசுக்கு கூடுதல் நிதி பெறுவது, இலங்கை தமிழர்கள் பிரச்னை, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடருவது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மத்திய அரசை வலியுறுத்தியும், கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

கட்சி தொடர்பான புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டதும், அந்த புகாருக்கு, 15 நாட்களில் பதில் பெறுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கும், கட்சிக்கும் பாலமாக, நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும்; எம்.ஜி.ஆர்., மன்றம், ஜெயலலிதா பேரவைகளை வலுப்படுத்த வேண்டும். அரசு அதிகாரிகளை கட்சியினர் மிரட்டக் கூடாது. இளைஞர், இளம் பெண் பாசறைக்கு உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். சசிகலா கும்பலுடன் யாரும் தொடர்பு வைக்கக் கூடாது போன்ற தீர்மானங்களும் இடம் பெறும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா சிறப்புரை ஆற்றிய பின், பொதுக்குழு நிறைவு பெறுகிறது. முன்னதாக, மதியம், 12 மணிக்கு மட்டன், சிக்கன் பிரியாணி, மீன் வறுவலுடன் அசைவ உணவு மற்றும் அறுசுவை சைவ உணவும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை: