வியாழன், 29 டிசம்பர், 2011

சசிகலாவை உண்மையிலேயே நீக்கிட்டாங்களா என்ன? இல்லே, இதுவும் ஒரு நாடகமா?

நட்பை சிதைத்த ஒரு குடும்பத்தின் கதைதிருத்துறைப்பூண்டியில் 'இங்கிலீஷ் மருந்துக் கடைக்காரர் வீடு’ - பிரபலம்!

சில பல பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலீஷ் மருந்துக் கடைகள் சொற்பமாகவே இருக்கும் என்பதால், இந்த அடைமொழி சந்திரசேகரன் பிள்ளைக்கு அடையாளம் ஆனது. இந்த மன்னார்குடி பாரதத்தின் பிரதான பாத்திரமான சசிகலாவின் தாத்தா அவர்!
சந்திரசேகரன் பிள்ளையின் மகன் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு, சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி, சசிகலா, திவாகரன் என்று வந்த வாரிசுகளும், அவர்களது வாரிசுகளும்தான் கடந்த 30 ஆண்டு கால அ.தி.மு.க.வின்... அதன் மூலமாக தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் சக்திகளாக வலம் வந்தார்கள். பெரும் நெடுங்கதையின் முன்கதைச் சுருக்கம் இது!
1.பாசமலர் படலம்!
மூன்று பாசக்கார அண்ணன்களின் செல்லத் தங்கச்சியாக திருத்துறைப்​பூண்டி வடக்குச் செட்டித் தெருவில் வலம் வந்த சசிகலா, பங்குனி மாச மகா மாரியம்மன் கோயில் உற்சவத்தில் முழு உற்சாகத்தோடு வலம் வருவார். அங்கிருந்த போர்டு ஹை ஸ்கூலில் சேர்த்தார்கள். படிப்போடு சேர்ந்து ஓட்டப் பந்தயத்திலும் பரிசுகள் வாங்கினார். பள்ளி மாணவர் மன்றத்திலும் அவரது பங்களிப்பு இருந்துள்ளது. பத்தாம் வகுப்பு வரைக்கும் படித்த அவர்... மேற்கொண்டு ஏனோ படிக்கவில்லை. ''பொம்பளப் பிள்ளை இவ்வளவு படிச்சா போதும்'' என்று கட்டுப்பாடு வீட்டுக்குள் விதிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இதற்கிடையே விவேகானந்தனின் குடும்பமும் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடிக்கு இடம் பெயர்கிறது. ஆனாலும் அந்த மகா மாரியம்மன் கோயிலை சசிகலா மறக்கவில்லை. எல்லா விழாக்களிலும் பங்கேற்பார். அந்த நாட்களை உறவினர்களோடு கழிப்பார். அன்றைய தினம் உள்ளூர்க்காரர்கள் அனைவருடனும் பழைய கதைகளைச் சொல்லிப் பேசிக்கொண்டு இருப்பார். ஜெயலலிதாவே இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறார். வெள்ளிக் கவசமும் சாத்தி இருக்கிறார். அந்த அளவுக்கு திருத்துறைப்பூண்டி சசிகலாவால் மறக்க முடியாத ஊர்.



இதைஅடுத்து, சசிகலா வாழ்க்கையில் முக்கியமான ஊர்... விளார். தஞ்சாவூரில் இருந்து 7 கி.மீ தூரத்தில் இருக்கிறது இது. இங்கு வாழ்ந்த மருதப்பன் என்பவரின் மகன்தான் நடராஜன். இயல்பிலேயே தமிழ் ஆர்வமும், அரசியல் ஈடுபாடும்கொண்ட இவர், தி.மு.க. மாணவர் இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டவர். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். எல்.கணேசனின் முக்கிய சிஷ்யராக வலம் வந்தார். கருணாநிதி தமிழக முதல்வராக முதல் முறை ஆனபோது, செய்தி மக்கள் தொடர்புத் துறையில் ஏ.பி.ஆர்.ஓ-வாக நடராஜனை நியமித்தார். (அவரோடு ஏ.பி.ஆர்.ஓ-வாக நியமிக்கப்பட்டவர்தான் சமீபத்தில் திட்ட அமலாக்கத் துறை சிறப்பு அலுவலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர் செல்வம்.) தஞ்சை மாவட்ட தி.மு.க.வின் அன்றைய தளகர்த்தரான மன்னை நாராயணசாமி தலைமை ஏற்க, நடராஜன் - சசிகலா திருமணத்தையும் நடத்தி வைத்தார் கருணாநிதி.

கருணாநிதி, சசிகலா இருவரது வரலாற்றிலும் இருக்கும் முக்கியமான விநோதங்களில் இதுவும் ஒன்று!

2. அறிமுகப் படலம்!

நடராஜன் - சசிகலா தம்பதி சென்னையில் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள். செய்தித் துறைக்காரர் என்பதால் தனக்கு ஆர்வமான தொழில் ஒன்றைத் தொடங்க நினைத்த நடராஜன், வீடியோ கடை ஆரம்பித்தார். 'வினோத் வீடியோ விஷன்’ என்று அதற்குப் பெயர் சூட்டினார் சசிகலா. தனது அண்ணன் விநோதகன் ஞாபகமாக இது இருக்கலாம். இதன் நிர்வாகத்தையும் சசிகலா கவனித்து வந்தார்.

1982 - அ.தி.மு.க.வுக்குள் ஜெயலலிதா அதிகாரப்பூர்வ​மாக உள்ளே நுழையும் காலம். கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்து, தினமும் தலைமைக் கழகம் வரலாம், 10 நாளைக்கு ஒரு முறை வெளியூர் டூர் போகலாம் என்று எம்.ஜி.ஆர். கிரீன் சிக்னல் காட்டிய நேரம் அது. ஜெயலலிதா தனது சுற்றுப்பயணம் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய விரும்பினார். இதற்காகவே ஒரு படை அவர் பின்னால் செல்ல ஆரம்பித்தது. இந்தப் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நடராஜன் நினைத்திருக்கிறார்.

அந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நிழலாக இருந்தவர் பத்திரிகையாளர் சோலை. அவருக்கு அறிமுகமான ரங்கராஜன் என்ற பொறியாளர் மூலமாக நடராஜன் தொடர்புகொண்டார். 'வினோத் வீடியோ விஷனு’க்கும் சில கூட்டங்களைப் பதிவு செய்து தர வாய்ப்புகள் தரப்பட்டன. இப்படித் தயாரான கேசட்டுக்களைக் கொடுப்பதற்காக, வேதா இல்லத்துக்குள் நுழைகிறார் சசிகலா. ''ஜெயலலிதாவுடன் சுற்றுப்பயணம் போய்விட்டு நாங்கள் வந்த அன்றுதான் முதன் முதலாக சசிகலாவும் அந்த வீட்டுக்குள் வந்தார். நாங்கள் நான்கைந்து பேர் இருந்தோம். எங்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு பேனா பரிசளித்தார் சசிகலா'' என்கிறார் ஒரு பத்திரிகையாளர். வேதா இல்லத்துக்குள் அடிக்கடி போய்வருவது ஒரு பெண் என்பதால், வசதியாய் இருந்தது சசிகலாவுக்கு. அப்போது ஜெயலலிதாவைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தவர் பிரேமா என்ற பெண். அவருக்கு இரண்டு வாரிசுகள். ஒரு மகனுக்கு பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கித் தர பிரேமா கேட்டதாகவும், அது ஜெயலலிதாவால் முடியவில்லை என்றும், பிரேமா கோபித்துக்கொண்டு கார்டனைவிட்டு வெளியேறியதாகவும் சொல்கிறார்கள்.

பிரேமா வெளியேறிய சில மாதங்களில் மருத்துவ சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் ஜிண்டால் மருத்துவமனைக்கு ஜெயலலிதா சென்றுள்ளார். ஒரு நட்பு அடிப்படையில் மரியாதை நிமித்தமாக ஜெயலலிதாவைப் பார்க்க... பெங்களூரு செல்கிறார் சசிகலா. ''என்னைப் பார்க்கிறதுக்காக இவ்வளவு தூரம் வந்தீங்களா?'' என்று ஜெயலலிதா உருகுகிறார். ஒரு நட்புக்கான அடித்தளம் பெங்களூருவில் போடப்படுகிறது. இன்றைய பிளவுக்கு அடித்தளம் இட்டதும் அதே ஊர்தான்.

ஜெயலலிதா, சசிகலா இருவருக்குமே பெங்களூரு மறக்க முடியாது!



3. அடைக்கலப் படலம்!

'அம்முவுக்குத் துணையாக யாரை இருக்க வைப்பது?’ என்று தனக்கு அருகில் இருந்த சோலையிடம் எம்.ஜி.ஆர். கேட்டார். சசிகலாவின் பெயர் அப்போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரிடம் சொல்லப்படுகிறது. இந்த ஆலோசனை நடக்கும்போது டி.ஜி.பி. மோகன்தாஸ் உடன் இருந்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தனுஷ் என்பவரை நடராஜனிடம் அனுப்பிக் கேட்டுள்ளார்கள். 'இது எதுக்கு சார் பெரிய இடத்து விவகாரம்?’ என்று நடராஜன் முதலில் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. 'சசிகலா என்றால் ஓகே’ என்று ஜெயலலிதாவும் சொன்னது... சசிகலா மனதையும் மாற்றியது.

''எம்.ஜி.ஆரின் ஆற்காடு தெரு வீட்டில் ஓரிரு முறை சசிகலாவையும் நான் பார்த்திருக்​கிறேன்'' என்று வலம்புரிஜான் எழுதி இருக்கிறார். 'எம்.ஜி.ஆரின் ஸ்பையாக போயஸ் கார்டனுக்குள் அனுப்பி​ வைக்கப்​பட்டவர்தான் சசிகலா’ என்று சொல்பவர்களும் உண்டு. எது காரணமாக இருந்தாலும் அடைக்கலப் படலம் அப்போதுதான் ஆரம்பம் ஆனது.

அடிக்கடி வந்து போன சசிகலா, ஒரு வாரம்... பத்து நாட்கள் எனத் தங்க ஆரம்பித்தார். 1984 தேர்தல் நேரத்​தில் எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்த​தால், பிரசாரம் முழுமையாக ஜெயலலிதாவை நம்பியே இருந்தது. 'எம்.ஜி.ஆரின் கதாநாயகி’ என்பதால் எல்லா இடங்களிலும் கூட்டம் கட்டி ஏற ஆரம்பித்தது. தனியாக பாதுகாப்புப் படை உருவாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும்... மன்னார்குடியில் இருந்து தனது தம்பி திவாகரனை அழைத்து வந்தார் சசிகலா. ஜெ. செல்லும் இடத்துக்கு எல்லாம் திவாகரன் போனார்.

அரசியல் ஆலோசனைகளுக்கு நடராஜன், பாதுகாப்​புக்கு திவாகரன், தனி உதவிக்கு சசிகலா... என்ற மூவர் அணி போயஸ் கார்டனை மறைக்க ஆரம்பித்தது!

4. அனுசரணைப் படலம்!

போயஸ் கார்டனில் இருக்கும்போது மட்டும் அல்ல... டெல்லி ராஜ்ய சபாவுக்குச் செல்லும்போதும் கூடவே சசிகலாவை அழைத்துச் செல்லும் அளவுக்கு இருவரும் நட்பு ஆனார்கள். ஜெயலலிதாவிடம் சொல்ல வேண்டியதை சசிகலா மூலமாகத்தான் சொல்லியாக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். இறந்து உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும்போது வலதுகை அருகில் ஜானகி இருப்பார். தலை அருகே ஜெயலலிதா சோகமே உருவாக உட்கார்ந்திருப்பார். அவருக்குப் பின்னால் அந்த இடத்திலும் சசிகலா நிற்பார். அந்த அளவுக்கு நிழலாகத் தொடர ஆரம்பித்தார். எம்.ஜி.ஆரின் உடல் கொண்டு செல்லப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏறிய ஜெயலலிதா இறக்கிவிடப்​பட்டார். அவமானப்படுத்தப்பட்ட தனி மனுஷியாக வேதா இல்லத்தைப் பூட்டிக்கொண்டு அழுத ஜெயலலிதாவுக்கு அன்று சசிகலாவும் நடராஜனும்​தான் அனுசரணையாக இருந்தார்கள். 'உங்களோட பொலிடிக்கல் லைஃப் இனிமேல்தான் ஆரம்பமாகப்​போகிறது’ என்று உற்சாகம் கொடுத்தார்கள். புதிய பொதுச்செயலாளர் தேர்வு, ஜானகி அணி - ஜெயலலிதா அணி எனக் கட்சி உடைவது, தலை​மைக் கழக முற்றுகை, 1989 சட்டமன்றத் தேர்தல்... என ஜெயலலிதா பரபரப்பாகும் காலகட்டத்தில் இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இருக்கிறார்கள்.

பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வந்த திவாகரனின் நடவடிக்கைகளில் ஒருவிதமான கோபம் ஜெயலலிதாவுக்கு வருகிறது. எனவே, அவரை விலக்க உத்தரவு இடுகிறார் ஜெயலலிதா. அதை ஏற்றுக்கொண்ட சசிகலா, தனது அக்காள் வனிதா மணியின் மூத்த மகனான தினகரனை அழைத்து வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளை தினகரன் கவனிக்கத் தொடங்குகிறார். இதே காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கும் - நடராஜனுக்குமான முரண்​பாடுகள் துளிர்க்கின்றன. திருப்பூர் பிரமுகர் ஒருவரை கட்சியைவிட்டு ஜெயலலிதா நீக்கியதாகவும், 'அது தவறு’ என்று நடராஜன் வாதிட்டதாகவும் 'இது என்னோட அதிகாரம்’ என்று ஜெயலலிதா கூறியதாகவும் இதுவே இவர்கள் பிரிவுக்கு காரணம் என்று ஒரு தரப்பினரும்...

'ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆலோசனை அனைத்துமே நான்தான் செய்கிறேன். அவர் நான் சொன்னபடிதான் நடப்பார்’ என்று நடராஜன் எங்கோ சொன்னதாகவும் அது பிடிக்காமல் ஜெயல​லிதா கோபித்​ததாகவும் இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள்.

'தம்பியை போகச் சொல்’ என்றபோதும் ஏற்றுக்​கொண்டார் சசி. 'கணவன் வரக் கூடாது’ என்றதற்கும் தலையை ஆட்டினார் அவர். தன் குடும்பத்தினரைக்கூட புறந்தள்ளும் அளவுக்கு அழுத்தமானவரா அல்லது அரசியல் உள்நோக்கமா... சசிகலாவுக்கு எது தூக்கலாக இருந்தது?

5. ஆதிக்கப் படலம்!

சசிகலாவுக்குள் ஒரு பக்கா அரசியல்வாதி நாற்காலி போட்டு உட்கார்ந்து இருப்பதை 1991-96 காலகட்டம் நிரூபித்தது. சட்டமன்றத்துக்குள் முதல்வராக உள்ளே நுழைந்த ஜெயலலிதா தன்னுடன் சசிகலாவையும் அழைத்து வந்ததன் மூலம், 'அவரே எனக்கு எல்லாம்’ எனக் காட்டினார். வேதா இல்லத்தின் சுற்றுச்சுவர் உயர்த்திக் கட்டப்பட்டது மட்டும் அல்ல... உள்ளே நுழைய மந்திரிகள்கூட மணிக்கணக்காய் காத்திருக்க வேண்டிய காலம் தொடங்கியது. முக்கியமானவர்கள்கூட வீடுவரை வந்தும் இன்டர்காமில் பேசிவிட்டுச் செல்ல நிர்பந்திக்கப்பட்டார்கள். 'மேடம்’, 'சின்ன மேடம்’... பட்டப் பெயர்கள் முளைத்தன... சசிகலா சொல்வது, ஜெயலலிதாவின் கட்டளையாகக் கவனிக்கப்பட்டது. ஜெயலலிதாவிடம் சொல்ல சசிகலா மட்டுமே ஒரு வழிப் பாதையாக மாறியது. எனவே, வெளியே நடந்த நல்லதும் கெட்டதும் தெரியாமல் இருட்டறையில் ஜெயலலிதா வைக்கப்பட்டுள்ளார் என்பது... சென்னை தியாகராய நகர் தெற்கு போக் சாலையில் ஒரு நாள் காலையில்... சிவாஜி வீட்டுக்குள் ஜெயலலிதா போனபோது வெளிச்சத்துக்கு வந்தது.

''சிவாஜியின் மகள் வயிற்றுப் பேத்தி சத்தியலட்சுமியை சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரனுக்கு நிச்சயம் செய்திருக்கிறார்கள்'' என்று அறிக்கை வெளியாகி இருந்தால், சிவாஜி - சசிகலா என்ற இரண்டு குடும்பங் களின் பந்தமாக முடிந்திருக்கும். சுதாகரன் என்ற பெயருக்கு முன்னால் 'முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன்’ என்ற அடைமொழி தமிழ்நாட்டை அதிர்ச்சி அடையச் செய்தது. ஜெயலலிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் மனுஷியாக இல்லாமல்... சசிகலாவின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் ஆளாக ஜெயலலிதா மாறிப்போனதை அது காட்டியது. அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர்தான் சுதாகரனின் அண்ணன் பாஸ்கரனின் திருமணம் தஞ்சையில் நடந்தது. 'என் உடன்பிறவா சகோதரி சசிகலா’ என்று குறிப்பிட்டு ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டதுகூட நட்பின் வெளிப்பாடாக ஏற்றுக்கொள்ளலாம். கும்பகோணம் மகாமகத்தில் இருவரும் மாறி மாறி நீர் ஊற்றிக்கொண்டதும், வளர்ப்பு மகன் தத்தெடுப்பும், 1995 செப்டம்பர் 7-ம் தேதி நடந்த 100 கோடி மதிப்பிலான திருமணமும், தஞ்சாவூரில் நடந்த உலகத் தமிழ் மாநாடும், முன் வரிசையில் ஜெயலலிதாவுக்கு சமமாக சசிகலா உட்கார்ந்து இருந்ததும், அரசாங்கச் செலவில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு மந்திரிகள் வசூல் செய்து மன்னார்குடி உறவுகளுக்கு கப்பம் கட்டியதையும் பட்டியல் இட்டுப்பார்த்தால், சசிகலா குடும்ப முன்னேற்றக் கழகமாக அ.தி.மு.க. மாறிப்போனதை அப்பட்டமாக உணர்த்தியது.

வெளியில் இது பச்சையாக படமெடுத்து ஆடிக்கொண்டு இருந்தபோது ஜெயலலிதா இதை உணரவில்லை. அதுவரை தலையாட்டிப் பொம்மைகளாக வலம் வந்த எஸ்.டி. சோமசுந்தரம் போன்றவர்கள் மெள்ளப் புலம்ப ஆரம்பித்தார்கள். முக்கிய இலாகாக்களை வைத்திருந்த கண்ணப்பன், வேட்பாளர் தேர்வுகளில் புறக்கணிக்கப்பட்டார். 'அடுத்தும் நம்முடைய ஆட்சிதான். சொந்த செல்வாக்கு உள்ள நபர்களைத் தட்டிவைக்க வேண்டும்’ என்று சசிகலாவின் உள்வட்டாரம் முடிவெடுத்தது.

1996 தேர்தல் நெருக்கத்தில் அரசல்புரசலாக சில விஷயங்கள் ஜெயலலிதா கவனத்துக்கு போக ஆரம்பித்தன. அதற்குள் தேர்தல் முடிந்து, தோற்றுப்போனார். தனித்து நின்ற ஜெயலலிதாவுக்கு தனது சொந்தங்களை அழைத்து வந்து தைரியம் கூட்டி... வெற்றி பெறவைத்த சசிகலாவின் முயற்சிகள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடந்த பலத்த தோல்விக்கும் காரணமாக அமைந்தது. இதில் இருந்து ஜெயலலிதா பாடம் கற்றுக்கொண்டாரா?

6. வெளியேற்றும் படலம்!

மரண அடிக்கு என்ன காரணம் என்றே தெரியாத ஜெயலலிதா, அப்பாவி அ.தி.மு.க. தொண்டனிடம் ஒரு கோரிக்கை வைத்தார். 'தேர்தல் தோல்விக்கான காரணத்தைக் குறிப்பிட்டு எனக்கு எழுதுங்கள்’ என்று கட்டளை இட்டார். மளமளவென்று குவிந்த கடிதங்கள் அனைத்துமே 'சசிகலாதான் காரணம்’ என்று சொன்னது. ஜெயலலிதாவுக்கு வேறு வழி இல்லை. நான்கு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 'கட்சியா... சசிகலாவா... என்பதை நான் முடிவு செய்ய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினார்கள். கஷ்டமான காலகட்டங்களிலும் சோதனையான சூழ்நிலைகளிலும் உற்ற தோழியாக, உடன்பிறவா சகோதரியாக சசிகலா எனக்கு உறுதுணையாக இருந்தார் என்ற நன்றி உணர்வு எனக்கு இருந்தாலும், ஒரு சில தனிநபர்களைவிட கட்சியின் நலனும் எதிர்காலமுமே மிகமுக்கியம் என நான் கருதுகிறேன்’ என்பது அவரது அறிக்கையின் சாராம்சம். இந்த அறிக்கை வெளியிடும்போது சசிகலா சிறையில் இருந்தார். அவரை சிறைக்குச் சென்று சந்தித்துவிட்டு வந்துதான் இந்த அறிக்கை வெளியிட்டார். 'இது ஒரு நாடகம்’ என்று சிலர் பேசினார்கள். 'அரசன் பதவியையும் புகழையும் இழக்கும்போது, தளபதியைக் கைவிடுவது தவிர்க்க முடியாதது’ என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி சொன்னதை பலரும் வழிமொழிந்தார்கள். 'சுதாகரனும் என்னுடைய வளர்ப்பு மகன் அல்ல’ என்று அறிவித்தார்.

தோல்விக்கு என்ன காரணம் என்று எழுதச் சொன்ன ஜெயலலிதா, நான் எடுத்த நடவடிக்கை சரியா எனத் தொண்டனிடம் கேட்கவில்லை. ஏனென்றால், இந்த நடவடிக்கையை அவரே மனப்பூர்வமாக எடுக்கவில்லை என்பது 10-வது மாதமே தெரிந்தது!



7. மீண்டும் அன்புப் படலம்!

1996 - செப்டம்பரில் சசிகலாவை நீக்கி அறிக்கைவிட்ட ஜெயலலிதா, 1997 ஜூலை யில் அறிக்கை விடாமலேயே சசிகலாவை சேர்த்துக்​ கொண்டார்.

சசிகலா இந்தக் காலகட்டத்தில் நீதிமன்றக் காவலில் இருந்தார். உடல்நிலைக் கோளாறு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் இருந்தார். நீதிமன் றத்துக்கு ஆம்புலன்ஸில்தான் வந்தார். ஸ்ட்ரெக்சரில் கொண்டு வந்தார்கள். அதன் பிறகு, நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் கிடைத்தது. மருத்துவமனையில் இருந்து சசிகலா எங்கே போவார் என்று மீடியாக்கள் யோசித்தபோது... போயஸ் கார்டனில் வரவேற்க ஆரத்தித் தட்டு தயாராகிக்கொண்டு இருந்தது. வாசலுக்கு வந்து தன்னுடைய உடன்பிறவாத் தோழியை அழைத்துச் சென்றார் ஜெ. சசிகலாவை விமர்சித்தவர்கள் விக்கித்துப்போனார்கள். இந்த இடைவெளியில் கட்சி முக்கியஸ்தர்கள் வெளியேறி இருந்தார்கள்.... வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் சசிகலாவை விரும்பாதவர்களாக இருந்தது தற்செயலானது அல்ல.

''ஒவ்வொருவருக்கும் தாய், கணவர், குழந்தை, நண்பர் என்று ஏதாவது ஒரு வடிவத்தில் உணர்வுப்பூர்வ பந்தம் தேவைப்படுகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல'' என்று ஜெயலலிதா சொன்னார். 'வழக்குகள், கைதுகள், புகார்கள் ஆகியவையும் இதற்குள் இருந்தது’ என்று போட்டி அ.தி.மு.க. விமர்சித்தது. ஆனால், எதைப்பற்றியும் ஜெயலலிதா கவலைப்படவில்லை. சசிகலாவுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் நெருங்க ஆரம்பித்தார். சசிகலாவின் கைது, சிறைவாசம் என்ற சென்டிமென்ட் கூடுதல் நெருக்கத்துக்கு காரணம் ஆனது.

சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் - இளவரசி தம்பதியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் திருமணம் (2000 ஜூன்) கட்சிக்கு ஒரு விஷயத்தை மீண்டும் தெளிவுபடுத்தியது. ''எனக்கு வேண்டியவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக எந்தத் தவறும் செய்யாத திருமதி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த நான்கு ஆண்டுகளாக, சந்தித்து இருக்கும் அவமானங்கள், அவதூறுகள், துன்பங்கள், கொஞ்ச நஞ்சம் அல்ல. எனக்காகவும் இந்த இயக்கத்துக்காகவும் வாழ்கிற சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பதை என் கடமையாகக் கருதுகிறேன்!’ என்று அந்தத் திருமணத்தில்தான் பகிரங்கமாக அறிவித்தார். அடுத்து நடந்தது சசிகலாவின் அண்ணன் சுந்தவதனனின் மகன் டாக்டர் வெங்கடேஷ் திருமணம். 'என்னோடு துணையாக இருந்து எல்லா வகையிலும் எனக்கு உதவியாக இருந்ததற்காகவே சசிகலாவுக்கு இப்படி ஒரு தண்டனை’ என்று ஜெயலலிதா சொன்னபோது, சசிகலா விக்கி விக்கி அழுதார். 'டாக்டர் வெங்கடேஷ§க்கு நான் இயக்கத்தில் எந்தப் பொறுப்பும் வழங்கவில்லை. ஆனாலும் ஏராளமான மாணவர்களை இயக்கத்தில் சேர்த்தார்’ என்பதையும் ஜெயலலிதா கண்டுபிடித்துச் சொன்னார்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் தினகரன், பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கப்பட்டு 'இவர்தான் அடுத்த வாரிசு’ என்று மகுடம் சூட்டப்பட்ட சம்பவங்களும் அரங்கேற ஆரம்பித்தன. மீண்டும் கார்டனுக்குள் குடும்பங்கள் சாரை சாரையாக உள்ளே வரத் தொடங்கின!

8. அர்ப்பணிப்புப் படலம்!

இரண்டாம் முறை ஜெயலலிதா முதலமைச்சராக ஆனபோது நடந்த இரண்டு மூன்று விஷயங்களை சசிகலாவே எப்படி சகித்துக்கொண்டார் என்று தெரியவில்லை. 'சின்ன எம்.ஜி.ஆர்’ என்று அழைத்துக்கொண்ட வி.என்.சுதாகரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். 'ராஜகுரு’ என்று அழைக்கப்பட்ட நடராஜனைச் சுற்றி நடந்த விஷயங்கள்.

தத்து எடுத்திருக்கவும் வேண்டாம். தலையில் அடித்திருக்கவும் வேண்டாம். லட்சக்கணக்கான ஜோசியர்களைப் பார்த்து விட்டார் சுதாகரன். அவருடைய ஜாதகத்தை இன்னும் யாராலும் கணிக்க முடியவில்லை. கஞ்சா வைத்திருந்ததாக அவரைக் கைது செய்ததற்குக்கூட காரணம் இருந்தது. அவரது அப்பா விவேகானந்தனும் உள்ளே போனார். நடராஜனை போலீஸ் வேவு பார்ப்பதற்குக் காரணம் இருந்தது. அவருக்கு அறிமுகமான குடும்பம் என்பதற்காக, செரீனாவும் அவரது அம்மாவும் ஜெயிலுக்குப் போனார்கள். உண்மையில் செரீனா 'கஞ்சா விற்பனையில்’ கைதானது ஏன் என போலீஸும் நடராஜனும் இதுவரைக்கும் காரணம் சொல்லவில்லை. ஆனால் 'கந்தசாமி’ என்ற பெயரில் ஆங்கில கேப்பிடல் லெட்டர்களில் கடிதம் எழுதிக்கொண்டே இருந்த ஆசாமிக்கு(!) மட்டும் எல்லாம் தெரிந்தது. இன்று பல்வேறு சிக்கல்களை வலிந்து போய் சப்பைக் கட்டும் கபில்சிபல்தான் அன்று வந்து, செரீனாவைக் காப்பாற்றினார். கபில்சிபலுக்கு 'கந்தசாமி’யும் உதவினார்.

இதன்பிறகு, சசிகலாவின் வளர்ச்சி ஏறுமுகம் ஆனது. என்.சசிகலா என்ற 'கணவர்’ இனிஷியலுடன் இருந்தவர் வி.கே.சசிகலா என்று தனது 'அப்பா’ இனிஷியலுக்கு மாறினார். நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கையின் வெளியீட்டாளர் ஆனார். பொதுக் கூட்டங்களுக்கு மட்டும் வந்து முன்வரிசையை அலங்கரித்தவருக்கு செயற்குழு உறுப்பினர் பதவியும் தரப்பட்டது. அம்மாவுக்கு அடுத்து 'சின்னம்மா’ என்பது அ.தி.மு.க.வின் தலைவிதியாக மாறிப்போனது!



9. ஆக்கிரமிப்புப் படலம்!

சசிகலா குடும்பத்துக்காக கார்டனில் போட்ட மியூஸிக்கல் சேரில் டாக்டர் வெங்கடேஷ் உட்கார வைக்கப்பட்டார். அவருக்கு, மாநிலம் முழுக்க வலம் வரும் இளைஞர்கள் - இளம் பெண்கள் பாசறை பதவி கிடைத்தது. சென்னையின் தலைமை இடத்தில் உட்கார்ந்து கண்காணிப்பது போதாது என்று மாவட்ட எல்லைகளில் தனது ஆட்களை நியமிக்கத் திட்டமிட்டார் சசிகலா. கொங்கு மண்டலம் ராவணன் கைக்குப் போனது. திருச்சி மண்டலம் கலியபெருமாள் கைக்குத் தரப்பட்டது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களை திவாகரனே வைத்திருந்தார். தென் மாவட்டங்களால் தங்களது அதிகாரத்துக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று இந்த வட்டாரம் நினைத்தது.

ஜெயலலிதாவுக்கு அருகில் யார் வர வேண்டும், அம்மாவை யார் யார் சந்திக்கலாம் என்பதை மட்டும் தீர்மானித்தவர்கள், 2005-2006க்குப் பிறகு கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் வரைக்கும் இன்னார்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க ஆரம்பித்தார்கள். அ.தி.மு.க.வில் இருக்கும் முக்கியமான கெட்ட பழக்கம், மொட்டைக் கடிதங்கள். இந்தக் கடிதங்கள்தான் பணம் காய்க்கும் மரங்களாக மாறியது. தலைமைக் கழகமோ, கார்டனோ, இங்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் ஜெயலலிதா பார்க்க முடியாது. அவருடைய நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று சசிகலாவின் ஆசீர்வாதத்துடன் நியமிக்கப்பட்டவர்கள் திருகல் வேலை பார்த்தார்கள். ராவணன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷைப் பிடிக்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது என்ற நிலை உருவானது. இதன் உச்சகட்டம்தான், ஜெயலலிதாவுக்கே தெரியாமல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட விநோதம். 'எங்க கடமைக்கு லிஸ்ட்டை விட்டாச்சு. அம்மா அப்புறம் மாத்திட்டாங்க’ என்று சப்பைக் கட்டு கட்டிக் கணக்குக் காட்டுவதற்காக ஜெயலலிதாவையே தலை குனியவைத்தார்கள்.

வெற்றிக்குப் பிறகும் செல்வாக்கானவர்கள், அமைச்சர்களாக இருந்த முன்அனுபவம் பெற்றவர்களை விட்டுவிட்டு... முதல் தடவை எம்.எல்.ஏ. ஆனவர்கள் தலையில் பெரிய பெரிய துறைகளைக் கொண்டு போய்வைத்து அமைச்சர் ஆக்கினார்கள்.

இது எதையும் ஜெயலலிதா தட்டிக்கேட்கவில்லை. தட்டிக்கேட்க முடியாத நிலையில் இருந்தார் என்றே சொல்ல வேண்டும்!

10. அழிப்புப் படலம்!

தி.மு.க. அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் சம்பாதித்த கெட்ட பெயரை, சிலர் ஐந்து மாதங்களிலேயே இப்போது வாங்கித் தந்ததை ஜெயலலிதாவின் காதில் கொண்டுபோய்ச் சேர்த்தவர் டி.ஜி.பி. ராமானுஜம். தி.மு.க.வின் சரிவுக்கு, ஸ்பெக்ட்ரமும், கமிஷனும், குடும்ப ஆதிக்கமும், கான்ட்ராக்டர் லாபியும்தான் காரணம். 'இது நெகடிவ் வாக்குகள் அல்ல. அ.தி.மு.க. மீதான பாசிட்டிவ் வாக்குகள்’ என்று ஜெயலலிதா வெளியில் சொன்னாலும் உள்ளே உண்மை தெரியும் அவருக்கு. இன்னொரு சரிவை நம் கண்முன் பார்க்கக் கூடாது என்று அவர் நினைத்து, தயங்காமல் எடுத்த அல்ட்டிமேட் அதிரடி ஆயுதத்தில் சசிகலாவே இப்போது வெளியேற்றப்பட்டு உள்ளார்.

ஆனாலும் எல்லாருக்குள்ளும் ஒரு சந்தேகம் இன்னமும் இருக்கிறது.

'ஏம்ப்பா, சசிகலாவை உண்மையிலேயே நீக்கிட்டாங்களா என்ன? இல்லே, இதுவும் ஒரு நாடகமா?’ என்ற பேச்சு பிரபலமாகி வருகிறது.

அதையும் பார்க்கலாம்!

- ப.திருமாவேலன்
thanks vikatan + senthi K

கருத்துகள் இல்லை: