திங்கள், 26 டிசம்பர், 2011

Bharathi Raja:உங்கள் பணத்தை சாப்பிடுபவர்கள், ஏன் குரல் கொடுக்கவில்லை என்று நீங்கள்தான் கேட்க வேண்டும்

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து மே பதினேழு இயக்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கம் சார்பில் (25/12/2011) மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இதில், வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டைரக்டர் பாரதிராஜா பேசியதாவது:
நான் வரலாறு, இலக்கியம் படித்ததில்லை. ஆனால், உணர்வு பூர்வமாக படித்தவன். தமிழர்கள் பெருந்தன்மை காரணமாக பலவற்றை இழந்து வருகின்றனர். இனியும் இழக்க வேண்டுமா?. முல்லைப் பெரியாறு பிரச்சினை என்பது 5 மாவட்ட மக்களின் பிரச்சினை மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை. இந்த பிரச்சினையில் மத்திய அரசு தந்திரப்போக்கை கையாள்கிறது.
ஆனால், முல்லைப் பெரியாறு பிரச்சினையில், தமிழக நடிகர்கள் இன்னும் குரல் கொடுக்கவில்லை. உங்கள் உதிரத்தை, பணத்தை சாப்பிடுபவர்கள், ஏன் குரல் கொடுக்கவில்லை என்று நீங்கள்தான் கேட்க வேண்டும்.முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகம் இனி ஏமாந்தால் பாலைவனமாகிவிடும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடிகர்கள் சங்கம் ஏன் குரல் கொடுக்கவில்லை? தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பெயர் இனி இருக்கக்கூடாது. தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் எனப் பெயர் மாற்றப்பட வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையைக் காக்கக் கோரி தேனி மாவட்ட மக்கள் நடத்தும் போராட்டங்கள், வன்முறைச் செயல்களாக கேரளத்தில் சித்திரிக்கப்படுகின்றன. தமிழர்கள் கேரள மாநிலத்தில் தாக்கப்படுவதும், விரட்டப்படுவதும் தொடர் கதையாகி வருகின்றன. இனியும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: