சனி, 24 செப்டம்பர், 2011

அழகிரி தரப்பால் தாமதமான தி.மு.க., வேட்பாளர் பட்டியல்

தி.மு.க.,வில், மத்திய அமைச்சர் அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ள தென் மாவட்டங்களுக்கு, உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. மதுரை, சேலம் மேயர் பதவிக்கு, யாரை நியமிப்பது என்பதிலும் குழப்பம் நிலவுகிறது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏழு மேயர் வேட்பாளர்களை, தி.மு.க., நேற்று முன்தினம் அறிவித்தது. திருச்சி தவிர, மதுரை, சேலம் மேயர் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. முதல் பட்டியலில், 22 மாவட்டங்களில், 86 நகராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர் பெயர்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சென்னை மாவட்டத்தில் நகராட்சி இல்லாத நிலையில், மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு, நகராட்சித் தலைவர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இரண்டாவது பட்டியலில், இந்த மாவட்டங்களுக்கு அறிவிக்கப்படுவதாக, தி.மு.க., தலைமை தெரிவித்துள்ளது. முதல் பட்டியலிலேயே, அனைத்து வேட்பாளர் பெயர்களையும் வெளியிடாததற்கு, உட்கட்சிப் பூசலே காரணம் என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள் வருமாறு: முதல் பட்டியலில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில், மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான விருப்ப மனு பட்டியல் வர தாமதமானதும் தெரிய வந்துள்ளது. தென் மாவட்டங்களுக்குப் பொறுப்பாளரான, மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்களான பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி, எஸ்ஸார் கோபி, திருநெல்வேலி மாவட்டச் செயலர் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட தி.மு.க., பிரமுகர்கள் பலர், நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ளனர். தென் மாவட்ட தி.மு.க.,வினர் பலர், போலீஸ் ஸ்டேஷன்கள், சிறைகள், கோர்ட்டுகளுக்கு அலைந்த வண்ணம் உள்ளனர். இதனால், வேட்பாளர் விருப்ப மனுக்கள் வருவது தாமதமாகியுள்ளது.

தென் மாவட்டங்களுக்குப் பொறுப்பாளரான அழகிரியின் நேரடிப் பார்வையில், பட்டியலைத் தயார் செய்து, அதை, சென்னையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப, தென் மாவட்டங்களில் முடிவாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில், ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆகிய இருவருக்கும் ஆதரவாளர்கள் உள்ளதால், அவர்களுக்குள்ளும் வேட்பாளர் தேர்வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை, மதுரை வழியாகத் தான், சென்னை தலைமை அலுவலகத்துக்கு வேட்பாளர் பட்டியல் அனுப்ப வேண்டுமென, அழகிரி தரப்பில் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கத்தை நியமிக்க, ஸ்டாலின் தரப்பில் முடிவு செய்யப்பட்டதாகவும், ஆனால், முந்தைய ஆட்சியில், மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வான கவுஸ் பாட்சாவை, மேயர் வேட்பாளராக்க அழகிரி தரப்பில் முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தால், மதுரை மேயர் வேட்பாளர் தேர்விலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சமீபத்தில் தான் சிறையிலிருந்து ஜாமினில் விடுதலையானதால், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு தாமதமாகியுள்ளது. கரூர் மாவட்ட எம்.எல்.ஏ., கே.சி.பழனிச்சாமி, கடந்த சில தினங்களுக்கு முன் கைதானதால், அங்கும் வேட்பாளர் பட்டியல் வர தாமதமாகியுள்ளது. நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், பெரும்பாலான தொகுதிகள் பெண் தொகுதிகளாகவும், தனித் தொகுதிகளாகவும் மாற்றப்பட்டதால், வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விடுபட்ட இடங்களுக்கான மேயர் மற்றும் நகராட்சித் தலைவர்கள் வேட்பாளர்கள் பட்டியல், இன்றோ, நாளையோ இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும். திங்கட்கிழமை முதல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவாகியுள்ளது. இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: