செவ்வாய், 20 செப்டம்பர், 2011

ம தி மு காவும் தே தி மு காவும் ஓரணியில்? அதிமுகாவின் சேவை

அதிமுகவின் போக்கால் அதிகரிக்கும் அதிருப்தி- மதிமுகவுடன் கூட்டணிக்குத் தயாராகும் தேமுதிக

சட்டசபைத் தேர்தலைப் போலவே தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தன்னிச்சையான போக்கைக் கடைப்பிடித்து வருவதால் கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக தேமுதிகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவுடன் ஒப்பந்தம் செய்து போட்டியிடலாமா என்ற ரீதியில் அவர்கள் யோசித்து வருகிறார்களாம்.

சட்டசபைத் தேர்தலின்போதும் அதிமுக கூட்டணிக் கட்சிகளைப் புறம் தள்ளி விட்டு தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதனால் கூட்டணிக் கட்சிகள் கொந்தளித்தன. பின்னர் இறங்கி வந்த ஜெயலலிதா, தொகுதி உடன்பாட்டை மேற்கொண்டார்.

தற்போதும் அதே கதையாகியுள்ளது. அடுத்தடுத்து அவர் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறார். இதனால் கூட்டணிக் கட்சிகள் கடுப்பாகியுள்ளன. குறிப்பாக தேமுதிகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தாங்கள் கோரிய, தங்களுக்குச் செல்வாக்கு உள்ளதாக கருதும் நகராட்சிகள் பலவற்றை அதிமுக அபகரித்து வேட்பாளர்களை அறிவித்திருப்பது அவர்களை சிந்திக்க வைத்துள்ளது. மேலும் 3 மாநகராட்சி மேயர் பதவிகளை அது அதிமுகவிடம் கோரியிருந்தது. ஆனால் ஒன்று கூட கிடைக்கவில்லை.

தென் மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் சில முக்கிய நகராட்சிகளை கோரியிருந்தது. அதுவும் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்யலாம் என்பது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதில் தனித்துப் போட்டியிடலாம் என்று பலரும் கூறி வருவதாக தெரிகிறது. ஆனால் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க விஜயகாந்த் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், கட்சியின் உணர்வுகளை புறம் தள்ளவும் அவர் தயார் இல்லை.

இதனால் அவர் ஒரு புதிய திட்டத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது மதிமுகவுடன் ஆதரவு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வதே அது என்று கூறப்படுகிறது. கூட்டணி என்றில்லாமல், உங்களுக்கு சாதகமான இடங்களில் நாங்கள் ஆதரவு தருகிறோம், நாங்கள் போட்டியிடும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்ற ஒப்பந்தம் அது என்கிறார்கள்.

இதுகுறித்து இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், அதிமுகவுடனும், தேமுதிக தரப்பில் ரகசியமாக

பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வருவதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
மகா கோபத்தில் மார்க்சிஸ்ட்கள்
மறுபக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடும்கோபத்தில் உள்ளன. அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் அதிருப்தியில் உள்ளது. தங்களுக்குச் சாதகமான, தங்களுக்கு தொண்டர் பலம் நிறைந்த நகராட்சிகளையும் அதிமுகவே எடுத்துக் கொண்டிருப்பதால் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதனால் இன்று நடைபெறும் அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் சிபிஎம் பங்கேற்குமா என்பது தெரியவில்லை. மேலும் சிபிஎம் கேட்கும் நகராட்சிகளை அதிமுக தரும் என்பதும் சந்தேகமே என்பதால் சிபிஎம் தரப்பிலும் தனியாக போட்டியிடலாமா என்ற ஆலோசனைகள் வேகம் பிடித்துள்ளதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை: