புதன், 21 செப்டம்பர், 2011

இலங்கையில் 357 பேர் தூக்குத் தண்டனை கைதிகள்

தூக்கு தண்டனையை நிறைவற்றக் கூடிய வேலையாள் தேவை என்ற விளம்பரத்தை விரைவில் வெளியிடப்போவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாட்டில் 1976 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருவர் கூட தூக்கிலிடப்படவில்லை என்றாலும் மரண தண்டனை நாட்டின் சட்டத்தில் உள்ளது.
கொழும்பு வெலிக்கந்தை சிறைச் சாலையில் தான் இந்தப் பணிக்கான ஆள் கோரப்பட்டுள்ளது. இந்தப் பணியில் இருந்தவர் சிறைக்காவலராக பதவி உயர்வு பெற்றுச் செல்வதால் சற்றே கீழ் நிலையில் இருககும் இந்தப் பணி காலியாகி உள்ளது.
உடனடியாக ஆட்களைத் தூக்கில் போடும் எண்ணம் தமக்கு இல்லை என்று இலங்கை சிறைத் துறைத் தலைவர் பி.டபிள்யு.கொடிப்பிலி தெரிவித்தார்.


ஆனால், மொத்தமாக 357 பேர் தூக்கு தண்டனை கைதிகளாக இருக்கின்றனர், எனவே தண்டனைகளை நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் முற்றாக இல்லை என்று கூறிவிட முடியாது.

அலுகோஸ் என்று சொல்லப்படும் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணியில் தற்போது இருப்பவரும் அதற்கு முன்பு அந்தப் பணியை இருந்தவரும் யாரையும் தூக்கிலிட்டதில்லை.

தற்போது தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணியாளராக இருப்பவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு தனது 22 ஆவது வயதில் இந்தப் பணிக்கு சேர்ந்தார். ஆனால் இவரின் பெயர் விபரம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. வறுமை காரணமாக தனது தந்தை செய்த பணியில் தான் சேர நேரிட்டதாக அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த ஒரு செவ்வியில் கூறியிருந்தார்.

மிக மோசமான குற்றங்களைச் செய்தவர்களுக்கு மரண தணடனை விதிக்கப்பட வேண்டும் என்று தான் நம்பினாலும் தனது பணிக்காலத்தில் யாரையும் தூக்கில் போடாதது தனக்கு மகிழ்சியை அளிப்பதாக இருப்பாதகவும் அவர் கூறினார். எல்லோரும் தூக்குப் போடும் வேலையைச் செய்வர்கள் இதயமில்லாதவர்கள் என்று நினைக்கிறார்கள் அது தவறு என்றும் அவர் கூறியிருந்தார்.

அதே போல தனது குழந்தைகள் தம்முடையை குடும்பத் தொழிலை செய்யக் கூடாது என்று விரும்பும் அவர் தான் தனது பணிக் காலத்தில் குமாஸ்த்தா வேலைகளைச் செய்து காலத்தைக் கழித்ததாகத் தெரிவித்தார்.

தற்போது தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளில் முன்னாள் புலிகள் யாரும் இல்லை. மீண்டும் மரண தண்டனையைக் கொண்டு வரப் போவதாக அரசு அவ்வப்போது தெரிவித்தாலும், தூக்குதண்டனை அமுலுக்கு வரவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான்கு இளவயதினரைக் கொன்ற வழக்கில் நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிகக்கப்பட்டிருந்தது என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: