சனி, 24 செப்டம்பர், 2011

பிரான்சில் பர்தா அணிந்த 2 பெண்களுக்கு அபராதம்!.

மீயக்ஸ்: பிரான்சில் தடையை மீறி பர்தா அணிந்து வந்த 2 இஸ்லாமிய பெண்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. பிரான்ஸ்சில் இஸ்லாமிய பெண்கள் முகத்தை முழுவதுமாக மறைக்கும் பர்தா அணிய கடந்த ஏப்ரல் மாதம் தடை விதிக்கப்பட்டது. சர்வதேச அளவில் தீவிரவாதம் அதிகரித்துள்ள நிலையில், பர்தாவை தவறாக பயன்படுத்த கூடும் என்ற அச்சத்தில் இந்த தடை கொண்டு வரப்பட்டது.
எனினும், மத வழக்கங்களுக்கு தடை விதித்ததால் இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மீயக்ஸ் நகரில் பர்தா அணிந்து வந்த 2 பெண்களுக்கு உள்ளூர் நீதிமன்றம் நேற்று அபராதம் விதித்தது. ஹிந்த் அமாஸ் (32) என்ற பெண்ணுக்கு 120 யூரோவும், நஜாத் நய்த் அலி (36) என்ற பெண்ணுக்கு 80 யூரோவும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போவதாக இவர்கள் கூறியுள்ளனர். அபராதத் தொகை ஒரு பிரச்னையே அல்ல. ஆனால், எங்கள் மதவழக்கங்களை பின்பற்றுவதற்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது என்றார். பிரான்ஸ் தவிர பெல்ஜியம், இத்தாலியின் சில நகரங்களிலும் பர்தாவுக்கு தடை உள்ளது.

கருத்துகள் இல்லை: