வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஏழாம் அறிவில் வரும் ஹீரோ 'போதி தர்மன்'... சில குறிப்புகள்!


போதி தர்மன்... தமிழ் சினிமாக்காரர்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில் அதிகமாககத் தேடிக் கொண்டிருக்கும் பெயர் இன்றைக்கு இதுதான்!
காரணம், சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்தில் கதையின் நாயகன் இந்த போதி தர்மன்தான்!
முதலில் போதி தர்மன் யார் என்பதை சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.

கிபி 5-ம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் இந்த போதி தர்மன். காஞ்சிபுரத்தில் பிறந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவர்.

புத்த மத குருவாக மாறியபிறகு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி, அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.
ஷோலின் குங்ஃபூ என்ற உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலையை நிறுவியரே இவர்தான் என்கிறது வரலாறு. இதற்கான கல்வெட்டு சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.

புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவராம் இந்த போதி தர்மர்.

அதுமட்டுமல்ல, அவர் கால் தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கடல்வழியாக இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.

போதிதர்மன் மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச அரசன் நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ உயிருடன் 'பாமீர் முடிச்சு' பிரதேசத்தில் ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன அமைச்சர் நேரில் கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த ஊருக்குப் போகிறேன், என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் மீண்டும் உயிர்த்து எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி செய்தார்களாம்... இப்படிப் போகிறது போதியின் கதை.

இந்தக் கதைதான் சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்துக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. போதியின் ஜீன்களைப் பயன்படுத்தி, நவீன மருத்துவமுறையில் சாதனைகளைச் செய்வதாக இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

படத்தின் முக்கிய காட்சிகளை சீனா, தாய்லாந்து என போதி தர்மன் வாழ்ந்த இடங்களிலேயே எடுத்திருப்பதுதான் ஏழாம் அறிவின் சிறப்பு.

தகவல்களைப் படிக்கும்போதே படம் குறித்து ஏக எதிர்ப்பார்ப்பு உருவாகிறதல்லவா... எதிர்ப்பார்ப்பை பொய்யாக்க மாட்டார் முருகதாஸ் என நம்புவோம்!

கருத்துகள் இல்லை: