ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

யாழில் இனம் தெரியாத நபர் ஒருவரை மடக்கிப் பிடித்ததாக இராணுவம் அறிவிப்பு

யாழ். சாவகச்சேரியில் இனம் தெரியாத, மர்ம மனிதன் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். பலாலி படைத்தலைமையக ஊடகப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் பலாலி படைத்தலைமையக ஊடகப்பிரிவினர் இன்று சனிக்கிழமை மாலை குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்;கு யாழ். ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்று விளக்கமளித்தனர். இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் இராணுவத்தினர் பேசுகையில், 'யாழ். சாவகச்சேரி பருத்துறை வீதியில் கனகம்புளியடிச் சந்திக்கு சுமார் 500மீற்றர் தொலைவிலுள்ள 11 ஆவது படையணி முகாமிற்கு அருகில் பற்றைக் காடு நிறைந்த பகுதி ஒன்றில் இன்று சனிக்கிழமை காலை 8 மணியளவில் இளைஞன் ஒருவன் ஆடையில்லாமல் நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடிப்பதற்கு படையினர் முயற்சித்த வேளை அவர் அருகிலிருந்த இராணுவ முகாமை நோக்கி ஓடியுள்ளார். பின்னர் இளைஞன் பற்றைக் காட்டுப் பகுதியில் மடக்கிப் பிடிக்கப்பட்டு சாகவச்சேரி காவற்றுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்' எனத் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனைப் பிடித்து இராணுவத்தினர் விசாரித்த போது ,அவ் இளைஞன் சங்கத்தானையைச் சேர்ந்தவர் எனவும் அப்பகுதியால் செல்லும் பெண்களை மடக்குவதற்காகவே அங்கு பதுங்கியிருந்ததாகவும் தான் தனது பாதுகாப்பிற்காக இராணுவ முகாம் நோக்கி ஓடியதாகவும் தெரிவித்ததாகப் படையினர் கூறினர். குறித்த நபரை காண்பிப்பதற்காக ஊடகவியலாளர்களை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அந்நபரை பார்வையிட ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டபோதிலும் அவரை படம்பிடிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. குறித்த இளைஞனை இராணுவத்தினர் மடக்கிப்பிடித்து ஒப்படைத்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தவுள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: