சனி, 2 ஏப்ரல், 2011

National Post கடத்தல்காரர்களின் அடிச்சுவட்டில்: “ஏராளமான அகதிகள் இங்கே உள்ளார்கள்” (பகுதி 1)

                                                 -   ஸ்ரூவாட் பெல்

பாங்கொக் - வெம்பஸ் ரெஸ்ட்ரான்ட்  பச்சை வண்ண சுவர்க் கடதாசிகளால் அலங்கரிக்கப் பட்ட ஒரு சிறிய அறை கூரையில் பெரிய மின்விசிறி சுழன்று கொண்டிருக்க கீழே மேசைகள் வாசனை வீசும் தென்னிந்திய உணவுத் தட்டுகளால் நிறைந்திருக்கின்றன. அதன் உரிமையாளர் வித்தியாசங்கர்.  ஸ்ரீலங்காத் தலைநகர் கொழும்பைச் சேர்ந்தவர். தனது நாட்டைச் சேர்ந்தவர்கள் 2000 முதல்  3000 வரையில் பாங்கொக்கில் இருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஏராளமான அகதிகள் இங்கே உள்ளார்கள்” என அவர் தெரிவிக்கிறார்.
உணவு விடுதியின் உரிமையாளர் வித்யாசங்கர், பெப்ரவரி 25,2011 வெள்ளியன்று பாங்கொக்கில் அவருடன் நடத்திய நேர்காணலின் போது பேசுகிறார்.
2009ல் அவர்களில் ஒருவரை சங்கர் தனது உணவு விடுதியின் மேற்தளத்தில் நடத்தும் நடுத்தர தங்கும் விடுதியில் வைத்துச் சந்தித்தார். அவரது பெயர் சிறீதரன். 19 அல்லது 20 வயது மதிக்கத்தக்க இளம் வாலிபரான அவர் தான் தமிழ் புலிப்போராளிகளில் ஒருவராக இருந்ததாக உறுதி செய்தார்.
அவரிடம் தங்கும் அறைக்கும் உணவுக்கும் செலுத்துவதற்கான பணம் எதுவும் இருக்கவில்லை எனவே சங்கர் அவரைத்  தனது உணவு விடுதியில் சமையல் வேலையிலும் அவரது மற்றொரு வியாபாரமான ஸ்ரீலங்காவுக்கு காலணிகளை ஏற்றுமதி செய்யும் இடத்தில் காலணிகளை பொதிசெய்யும் பணியிலும் அமர்த்தினார்.” அவர் மிகவும் கடுமையாக வேலை செய்தார். அவரிடம் பணம் எதுவும் இல்லை. மிகவும் ஏழை” திரு.சங்கர் கூறினார்.
சிறீதரன் மாதக் கணக்கில் பாங்கொக்கில் தங்கியிருந்தார்.ஆனால் கடந்த வருடத்தில் ஒரு நாள் அவர் எங்கோ போய்விட்டார். கடந்த மாதம் சிறீதரன் அவரை தொலைபேசியில் அழைக்கும் வரை சங்கர் அவரைப்பற்றிய எந்தத் தகவலையும் அறியவில்லை.
சிறீதரன் தான் கனடாவில் இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா கரையை வந்தடைந்த மனிதக் கடத்தல் கப்பலான எம்வி.சண் சீ கப்பலில் சிறீதரனும் ஏறியிருந்திருக்கிறார். அவரின் கடத்தல் திட்டம் பற்றித் தான் எதுவுமே அறிந்திருக்கவில்லை என சங்கர் கூறினார்.
ஆனால் சிலோம் பகுதி அயல்வாசிகள் தெரிவித்தது. ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு கனடா செல்வதற்கு ஒரு கப்பல் தயார் நிலையில் இருப்பது பரவலாக எல்லோராலும் அறியப் பட்டிருந்தது என்று.
சிலோமில் ஸ்ரீலங்காவாசிகளுக்கு குறைவான வாடகையும் பழக்கமான உணவு வசதியுடனும் தங்கக்கூடிய ஒரு கோவில் உள்ளது. ”சில வேளைகளில் கோவிலில் இருந்தும் அவர்களுக்கு உணவு கிடைக்கும், அவர்கள் தங்கள் அறையைக்கூட மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்ளலாம்” சங்கரின் விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்த ஒலிவர் என்கிற ஸ்ரீலங்காவாசி இவ்வாறு தெரிவித்தார். பெரும்பாலானவாகள் கனடாவுக்குப் போக விரும்புகிறார்கள். ஆனால் காவல்துறையினரின் தேடுதல் வேட்டைகள் தொடங்கியிருப்பதானால் அது இப்போது மிகவும் கடினமானதாகி விட்டது. மேலும் தமிழர்களுக்கு பாங்கொக்கை இடைமாற்றுத் தளமாகக் கொண்டு மேற்கிற்கு பயணம் செய்ய முடியும் என்பதில் இனிமேலும் நம்பிக்கையில்லை என்று அவர் தொடர்ந்து கூறினார்.
சண் சீ கப்பலில் பயணம் செய்த சிலர் தமிழ் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்று எதிர் விளைவுகளுக்கு அஞ்சித் தன்னை அடையாளம் காட்ட விரும்பாத அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் சபை ஏற்கனவே அப்படியான இருவரை நாடு கடத்தும்படி உத்தரவிட்டுள்ளது. இருவருமே புலிகளின் கடற் போராளிகளின் பகுதியில் அங்கத்தவர்கள் என இனங்காணப் பட்டுள்ளார்கள். அரசாங்கம் முன்னாள் போராளி எனக் குற்றம் சாட்டிய மற்றொருவர் புலிகளின் அங்கத்தவர் அல்ல எனக் கண்டறியப் பட்டுள்ளது.
பாங்கொக்கில் கப்பல்களுக்காகக் காத்திருக்கும் ஸ்ரீலங்கா வாசிகளை கைது செய்த சம்பவங்கள் சிலரை நகரின் வெளிப் பகுதிகளுக்குத் துரத்தியுள்ளது என்று  நீண்டகாலமாக சிலோமில் வசிக்கும் ஒருவர் கூறினார்.. அவர் மேலும் தெரிவித்தது அவர்கள் எல்லோரும் எங்கேயாவது போவதற்காகக் காத்திருக்கிறார்கள். ”கனடாவுக்கு மட்டுமல்ல” “எந்த நாட்டுக்காவது” என்று அவர் கூறினார்.
அருகில் உள்ள ‘சவேரா இன்’னில் பணியாற்றும் ஒரு ஊழியர் புகைப்படத்திலிருந்த ஒரு மனிதரை சண் சீ கப்பலின் கடத்தல் நடவடிக்கைக்கு உதவி புரிந்தவர் என அடையாளம் கண்டறிந்தார், - அந்த நபர் இப்போது கனடாவில் இருக்கிறார்.  கடத்தல்காரர்கள் தங்கள் மனிதச் சரக்குகளில் சிலரை, அவர்களை கப்பலில் ஏற்றுவதற்காக தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படும்வரை இந்த விடுதியில்தான் தங்க வைத்திருந்தார்கள், என்று உள்ளுர் வாசிகள் கூறினார்கள்.
அந்த விடுதி இந்திய சுற்றாடலிலுள்ள சிறிய சந்துப் பகுதியில் அமைந்துள்ளது. தாய்லாந்து அரசரதும் அரசியினதும் படங்கள் முகப்பு பீடத்தின் பின்னே தொங்கவிடப் பட்டிருந்தது. அங்கு வாடகைக்குத் தங்கியிருந்த ஒருவர் 20 – 30 பேர்களடங்கிய சுற்றுலாக் குழுக்கள் சில நாட்கள் தங்கியிருக்கும் எனத் தெரிவித்தார். ஆனால் சந்தேகப் படத்தக்க எதனையும் அவரால் நினைவுகூர முடியவில்லை. அதன் உரிமையாளர் அஜ்மல்கான் தெரிவித்தது, தான் சாதாரணமாக அறைகளை வாடகைக்கு விடுவதாகவும், மனிதக் கடத்தல் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்று.”அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் எங்களுக்கு ஆர்வமில்லை” எனத் தெரிவித்த அவர் தான் ஸ்ரீலங்காவாசிகளுக்கு இனிமேலும் அறைகளை வாடகைக்கு விடுவதாக இல்லை என்றும் தெரிவித்தார்.
கடத்தல்காரர்களின் அடிச்சுவட்டில்: பல தலைகளையுடைய பாம்பு
அதிக இலாபம் தரும் தொழிலான துருப்பிடித்த பழைய கப்பலில் கனடாவுக்கு பயணச்சீட்டை விற்பனை செய்வதைக் கண்டு பிடிக்கும் வரையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தோல் சட்டைகளை பரீசுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் தனது வாழ்க்கை வருமானத்தைத் தேடிக் கொண்டிருந்தார் சத்தியசீலன் பாலசிங்கம். 41 வயதான மனிதக் கடத்தல் வலையமைப்பின் தலைவர் எனச் சந்தேகிக்கப்படும் இவர் பிரபா எனும் பட்டப் பெயரினால் அழைக்கப்பட்டு வருகிறார். இந்த வலையமைப்பு கனடாவுக்கு கப்பலில் செல்ல விரும்பும் ஸ்ரீலங்காவாசிகளினால் விருப்பத்துடன் செலுத்தத் தயாராகவிருக்கும் பல்லாயிரக்கணக்கான டொலர்களைச் சேகரித்து வருகிறது.
பறவைகள் நல்லதிருஷ்டத்துக்காக ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வைத்து அதன் கூட்டிலிருந்து விடுதலையாக்கப் படுகின்றன. பாங்கொக் சுற்றாடலிலுள்ள சிலோம் வீதியிலுள்ள இந்தக் கோவில் ‘வாற் காயெக் சிலோம் இந்து ஆலயம்’எனவும் அழைக்கப் படுகிறது.
இங்குதான் மற்றைய நாடுகளுக்கான மாறி ஏறும் இடைத்தங்கல் பயணங்களைத் தொடரும்வரை அநேக ஸ்ரீலங்கா வாசிகள் தங்குகிறார்கள்.
கடந்த ஆகஸ்ட்டில் பிரிட்டிஸ் கொலம்பியா கரையை வந்தடைந்த எம்வி சண் சீ கப்பல் மூலமாக பிரபாவிற்கு கிடைத்துள்ள பங்கிலாபம் 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனத் தாய் காவல்துறையினர் மதிப்பிட்டுள்ளார்கள்.பாங்கொக்கில் பல வருடங்களாக வாழ்ந்த இவர் கடந்த வருடம் தாய்லாந்தை விட்டு ஓடி விட்டார். – ஆனால் கனடிய காவல்துறையினர் அவர் இன்னமும் கடத்தல் தொழிலில்தான் இருக்கிறார் என நம்புகிறார்கள்.
சமீபத்தில் ஜனவரி 20 ல் மனிதக் கடத்தலுக்கு எதிரான கனடிய பொலிஸ் பிரிவின் தலைவரான பரிசோதகர் ஜோர்ஜ் பெம்பேர்ட்டன் தாய் காவல் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பிரபாவின் சமீபத்தைய முயற்சியாக மேற்கொண்டு வரும் புகலிடம் தேடுவோரைக் கொண்ட மற்றொரு குடிவரவுக் கப்பலைக் கனடாவுக்குள் கொண்டுவருவதைப் பற்றி ஆராய்வதற்கு உதவும்படி கேட்டுள்ளார்.
கடத்தல்காரர்களின் அடிச்சுவட்டில்: “ஏராளமான அகதிகள் இங்கே உள்ளார்கள்”
கடற்குதிரைத் திட்டம் என அழைக்கப் படும் கனடிய காவல்துறையினரின் ஒரு புலன் விசாரணையில் வெளியாகியிருப்பது, பிரபாவினால் மேற்கொள்ளப் படுவதாகச் சந்தேகிக்கப்படும் முயற்சிக்கு, மலேசியாவிலும்,பாங்கொக்கிலும் தளம் அமைத்து செயற்படும் அவரது இரு கூட்டாளிகளும் அவருடன் சேர்ந்து, பசுபிக் சமுத்திரமூடாக ஒரு மனிதக் கடத்தலை நடத்துவதற்காக பிரயாணிகளைத் திரட்டி வருகிறார்கள என்பதாகும்.
பிரபாவின் கீழ் அவரது கூட்டாளிகளாகப் பணியாற்றும் மற்ற ஒன்பது பேர்களில் ராகுலன் கஜன் எனப் பெயருடையவர்களும் பிரயாணிகளைச் சேர்த்து, அவர்களிடம் பணம் பெற்று அவர்களைப் பராமரித்து வருவதுடன் பயணத்துக்கான ஒழுங்குகளையும் ஏற்பாடு செய்து வருவதாக அந்தக் கடிதம் மேலும் தெரிவிக்கிறது.
தாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
“நீங்கள் என்னை நேர்காணல் நடத்தும்வேளையில் கடத்தல் வளைய வலையமைப்பு ஒன்றிருப்பதையும், அது கனடாவுக்கு ஆட்களைக் கடத்தத் தயாராகி வருவதையும் நான் அறிவேன்” இவ்வாறு சொன்னார் தாய்லாந்தின் மத்திய புலனாய்வு நிலையத்தின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் பொங்பட் சாயாபான்.
எம்வி சண் சீயும் அதன் வரவிற்கு 10 மாதங்களுக்கு முன்பு வந்த மற்றொரு குடிவரவுக் கப்பலான ஓசன் லேடியும் சமிக்ஞை காட்டியிருப்பது, தென்கிழக்காசியாவின் மனிதக்கடத்தல் குழுக்களின் இலக்காக கனடா மாறியிருப்பதை.
குற்றவாளிக் குழுக்களிடம் தங்களைக் கனடாவின் கரையில், அதிக எண்ணிக்கையில் அதுவும் இதுபோன்ற ஆபத்தான பயண முறைகள் மூலம் கொண்டுசென்று இறக்கி விடுவதற்காக பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து, வரப்போகும் எதிர்கால அகதிகளை என்ன செய்வது என்பதைப்பற்றி ஒட்டவாவில் ஒரு அரசியல் விவாதமே உருவாகியிருக்கிறது.
நிராகரிக்கப்பட்ட 59 மீட்டர் சரக்குக் கப்பலுக்கு தாய் கொடியின் நிறங்களால் வண்ணம் தீட்டிய சண் சீ எனும் பெயருடன்  நியாயமான அகதிகள் போலக் காட்சியளிக்கும் பிரயாணிகளையும், கப்பல் பணியாளர்களையும் மற்றும் தமிழ் புலிப் போராளிகளையும் ஏற்றிக் கொண்டு இங்கு வந்ததில் ஒட்டவாவிற்கு இதுவரை 25 மில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளது.
மேலும் வரப்போகும் தேர்தல் காலத்தில் இது மிகப் பெரிய பிரச்சார விடயமாக உருவெடுக்கும். நிச்சயமாக இந்தப் பிரச்சனை பிரச்சார அடிச்சுவட்டில் புதிய வடிவத்தை ஏற்படுத்தும். கன்சவேட்டிவ் கட்சியினர் ஏற்கனவே தொலைக்காட்சி விளம்பரங்களில் லிபரல் மற்றும் புளொக் கட்சியினர் புதிய மனிதக் கடத்தலுக்கு எதிரான சட்ட மசோதா சீ – 49 ஐ எதிர்ப்பதின் மூலமாக தேசிய பாதுகாப்புக்கு பலவீனத்தை ஏற்படுத்துகிறார்கள் எனக் கூறி வருகிறார்கள்.
இத்தகைய முன்னெச்சரிக்கைகளையும் தவிர்த்துக் கொண்டு கப்பல்களின் பின்னணியில் இருக்கும் மனிதக் கடத்தல்காரர்கள் இன்று வரை பகிரங்க கண்காணிப்புகளைச் சமாளித்து வருகிறார்கள். விளம்பரம் செய்யப்பட்ட ஆவணங்கள்,முக்கிய அதிகாரிகளுடனான நேர்காணல்கள் அதேபோல பல நாடுகளிலுமுள்ள உத்தியோகப் பற்றற்ற ஊற்றுக்கள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு’நஷனல் போஸ்ட்’ நடத்திய புலன் விசாரணையிலிருந்து முக்கிய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.கனடாவில் ஏற்படுத்தப்பட்டு வரும் மனிதக் கடத்தல்களுக்கு எதிரான புதிய நிகழ்ச்சித் திட்டத்தைப்பற்றி ‘போஸ்ட்’டின் புலன் விசாரணைகள் வெளிச்சம் பாய்ச்சியதையடுத்து ஆகக் குறைந்தது இதுவரை ஒரு கப்பலையாவது தடுக்க முடிந்திருக்கிறது,இதன் விளைவாக பல கடத்தல் சந்தேக நபர்களையும் கைது செய்ய முடிந்திருக்கிறது.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: