திங்கள், 28 மார்ச், 2011

Khushboo கலைஞரின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்த ஜெயலலிதாவை தேர்தலில்


தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் மதுரையில் நேற்று பிரசாரம் தொடங்கினார். நேற்று காலையில் அவர், மதுரை மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் தளபதிக்கு ஆதரவாக, ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், சோலையழகுபுரம், ஆண்டாள்புரம், பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். மாலையில் கிழக்கு சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் பி.மூர்த்திக்கு ஆதரவாக, சொக்கலிங்கநகர், பை-பாஸ், ஆரப்பாளையம், கிராஸ் ரோடு, மேலமாசிவீதி, சிம்மக்கல், கோரிப்பாளையம், நரிமேடு, பீபிகுளம், அய்யர்பங்களா, ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், சூர்யாநகர், புதூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது திறந்த வேனில் இருந்தபடி அவர் பேசியதாவது:-
மதுரையில் தான் நான் முதன்முதலாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளேன். ஏனென்றால் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்னவர்கள் நீங்கள். உங்களைப் போல தைரியமானவர்கள் யாரும் இல்லை. அதுவும் அமைச்சர் மு.க.அழகிரியின் தைரியத்திற்கு ஈடு இணையில்லை. இங்கு வந்து பேசுவதால் எனக்கும் தைரியம் அதிகமாக வந்துவிட்டது. இந்த தேர்தலில் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் வெற்றி பெறுவார்.
ஏனென்றால் கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஆட்சியில் பயனடைந்துள்ளனர். ஜெயலலிதா ஆட்சியில் எந்த பலனும் உங்களுக்கு கிடைக்கவில்லை. இது உங்களுக்கே நன்றாக தெரியும். கடந்த 5 ஆண்டுகளாக அவர் எங்கே போயிருந்தார். கொடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அந்த எஸ்டேட் தொழிலாளர்கள் செல்லும் பாதையை அடைத்து விட்டார். ஆகையால் தொழிலாளர்கள் சுமார் 14 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. பின்னர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் அந்தபாதையை அவர் திறந்து விட்டுள்ளார்.
பள்ளியில் மாணவன் தேர்வு எழுதும் போது காப்பி அடித்தால் அந்த மாணவனை தண்டிப்பார்கள், அதேபோல் கலைஞரின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்த ஜெயலலிதாவை தேர்தலில் தோல்வி அடையச் செய்ய வேண்டும். ஜெயலலிதா வைத்துள்ளது கூட்டணி அல்ல சீட்டணிதான். கலைஞரின் கூட்டணி தான் வெற்றி பெறும். ஜெயலலிதாவின் `சீட்டணி' வெற்றி பெறப் போவதில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் கூட்டணி வைத்திருந்த ஒருவரை (வைகோ) தூக்கி எறிந்து விட்டார். அதேபோல தான் மக்களாகிய உங்களையும் தூக்கி எறிந்துவிடுவார். கலைஞர் அனைவருக்கும் வீடு வேண்டும் என்பதற்காக காங்கிரீட் வீடு கட்டித் தருகிறார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் மக்கள் பிளாட்பாரத்தில் தான் படுக்க வேண்டிய நிலை ஏற்படும். குஷ்பு புசுபுசுவென இருக்கிறார் என்று நீங்கள் அனைவரும் நினைக்கின்றீர்கள், அதேபோல் உங்கள் குழந்தைகளும் புசுபுசுவென இருக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரத்தை தருகிறார். அதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தித் தருவதாகவும் அறிவித்துள்ளார். எனவே கலைஞர் ஆட்சி மலர உங்கள் வாக்குகளை அளியுங்கள். இவ்வாறு குஷ்பு பேசினார்.

கருத்துகள் இல்லை: