திங்கள், 28 மார்ச், 2011

கேரளா மாநிலத்திலும்அரசியல் கட்சிகளின் அரிசி சண்டை

கொச்சி:நாட்டிலேயே தனி நபர் வருமானத்தில், முதல் இடத்தில் இருக்கும் கேரள மாநிலத்திலும், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டி போட்டு கொண்டு, "ஒரு கிலோ அரிசி 1 ரூபாய்க்கு தருகிறோம், 2 ரூபாய்க்கு தருகிறோம்' என, அறிவித்து வருகின்றனர்.கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி, அரசு வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு ஒரு கிலோ அரிசி, 2 ரூபாய் வீதம், 25 கிலோ அரிசி திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தியது. இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கண்களை உறுத்தியது. "ஓட்டுகளை கவரவே இது போல் ஆளும் கட்சி அறிவித்துள்ளது' என்று குற்றம்சாட்டினர்.
இதை எதிர்த்து தேர்தல் கமிஷனும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது."தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டம் இது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று இடதுசாரி எம்.எல்.ஏ., மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து தேர்தல் கமிஷன் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.இந்நிலையில், ஆளும் கட்சியை வசைபாடிய எதிர்க்கட்சி ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய் வீதம், 25 கிலோ அரிசி என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. "குறைந்த விலையில் அரிசி விற்க, கேரளா ஒன்றும் ஏழ்மை மாநிலம் கிடையாது' என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம், நாட்டிலேயே தனி நபர் வருமானத்தில், கேரளா முதல் இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு கணக்கின்படி, கேரளாவில் தனி நபர் வருமானம் 63 ஆயிரம். இரண்டாம் இடத்தில் உள்ள டில்லியில், இது, 55 ஆயிரம் ரூபாயாகவும், 3ம் இடத்தில் உள்ள பஞ்சாபில், இது 42 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது."கேரள ரேஷன் கடைகளில் 100 சதவீதம் அரிசி விற்கப்படுகிறது. தரமான அரிசி குறைந்த விலையில் போடுவதால் ரேஷன் கார்டுதாரர்கள் வாங்க தவறுவதில்லை. அன்றாடம் தேவைப்படும் உணவு பொருட்களின் மீது மானியம் வழங்கினால், குடும்ப பட்ஜெட்டில் செலவினங்கள் குறையும்' என, கேரள உணவு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: