ஞாயிறு, 27 மார்ச், 2011

ரஜினிகாந்த்தை அடுத்தடுத்து சந்திக்கும் திமுக வேட்பாளர்கள்-

ரஜினிகாந்த்தை திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து சந்தித்து ஆசியும், வாழ்த்தும் பெற்று வருகின்றனர். திமுக வேட்பாளர்களை மட்டும் தொடர்ந்து சந்திக்க அனுமதித்து வருவதன் மூலம் தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் மறைமுகமாக வாய்ஸை பாஸ் செய்து வருவதாக கூறப்படுகிறது.


நடிகர் ரஜினிகாந்த்தை விட அவரது ரசிகர்களின் வாக்கு வங்கி மீதுதான் அரசியல் கட்சியினருக்கு முக்கிய ஆர்வம். குறிப்பாக திமுகவினர், இந்த வாக்கு வங்கியை சமீப காலமாக தங்களுக்கு சாதகமாக திருப்பி வருகின்றனர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர் எனலாம்.

ரஜினியை அரசியலுக்கு அழைத்து அழைத்து சலித்துப் போய் விட்டனர் அவரது ரசிகர்கள். ஆனால் அவருக்குப் பின்னால் அரசியலுக்கு வந்த விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து, இன்று அரசியல் சக்தியாகவும் மாறி நிற்கிறார். சரத்குமாரும், அதிமுகவுடன் இணைந்து புதிய அவதாரம் எடுக்க ஆயத்தமாகி விட்டார்.

ஒவ்வொரு தேர்தலிலும் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழும். அவரும் ஆரம்பத்தில் வாய்ஸ் கொடுத்துப் பார்த்தார். பி்ன்னர் அதை விட்டு விட்டார்.

இந்த சட்டசபைத் தேர்தலிலும் ரஜினியின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இந்த முறையும் அமைதி காக்க ரஜினி முடிவு செய்ததாக கூறப்பட்டது.

ஆனால் சமீபகாலமாக நடப்பதைப் பார்க்கும்போது ரஜினிகாந்த் மறைமுகமாக வாய்ஸ் கொடுத்துக் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது.

கடந்த சில நாட்களாக திமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் அடுத்தடுத்து ரஜினிகாந்த்தை சந்தித்து வருகின்றனர். முதலில் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் அசன் முகம்மது ஜின்னா சந்தித்தார். பின்னர் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். நேற்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் ஜே. அன்பழகன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து திமுக வேட்பாளர்களாக ரஜினியை சந்தித்து வருவதும், அவர் அதை அனுமதிப்பதையும் பார்க்கும்போது திமுகவுக்கு ரஜினிகாந்த் மறைமுக வாய்ஸ் தருகிறாரோ என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன.

கருத்துகள் இல்லை: