புதன், 30 மார்ச், 2011

Jaffna புதிய துணைவேந்தராக வசந்தி நேற்று நியமனம் இந்தப் பதவியை ஏற்கும் முதல் பெண்


யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக மருத்துவ பீடபேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்பட்டிருக்கிறார். பல்கலைக்கழகத்தில் பதவியேற்கின்ற முதல் பெண் துணைவேந்தர் இவரே. இவரது நியமனத்தின் மூலம் இனிவரும் காலங்களில் யாழ். பல்கலைக்கழகம் கல்வி மற்றும் வளங்களில் முன்னோக்கிச் செயற்பட வேண்டும் என்று குடாநாட்டின் கற்றறிந்தோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கும் கடிதம் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தால் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.யாழ்.பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்றது. பேரவை உறுப்பினர்களின் தெரிவுப்படி பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 14 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றிருந்தார். பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், தற்போதைய பதில் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் ஆகியோர் தலா 9 வாக்குகளைப் பெற்று அடுத்த நிலையில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். நடைமுறையின் பிரகாரம் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களின் பெயர்களை பல்கலைக்கழகப் பேரவை பரிந்துரைத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசுக்காக அனுப்பி வைத்தது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பின்னர் துணைவேந்தர் ஒருவரை ஜனாதிபதியே நியமிப்பார். மாதக்கணக்கில் இந்நியமனம் இடம்பெறாமல் இழுபறிப்பட்டு வந்தது. அதன் பின் கடந்த வருட இறுதியில் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் பதில் துணைவேந்தராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை: