ஞாயிறு, 7 நவம்பர், 2010

ராஜபக்சேவிடம் பேசியதை கலைஞரிடம் பரிமாறிக்கொண்டேன்:ப.சிதம்பரம்


மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், முதலமைச்சர் கருணாநிதியை சென்னையில் அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு முடிந்த பிறகு வெளியே வந்த சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:
முதல்-அமைச்சரை சந்தித்ததில் ஏதேனும் விசேஷம் உண்டா?
விசேஷம் ஏதும் இல்லை. தீபாவளிதான் விசேஷம். மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பு. அதே நேரத்தில், கடந்த முறை முதல்-அமைச்சரை நான் சந்தித்துவிட்டு சென்ற பிறகு, இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்திருந்தார். அவரோடு பேசிய செய்திகளைப் பரிமாறிக்கொண்டேன்.

வாழ்விடத்தில் இருந்து இடம்பெயர்ந்த 50 ஆயிரம் பேருக்கு வீடுகட்டித்தர வேண்டும் என்ற திட்டம் முன்னேற்றத்தில் இருக்கிறது.
விரைவில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று இலங்கை அதிபரிடம் வற்புறுத்தி இருக்கிறோம். மழைக்காலம் முடிந்த பிறகு, வீடு கட்டும் பணிகள் தொடங்கும் என்று அவர்கள் வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். இதுபோன்ற பொதுவான விஷயங்களை பரிமாறிக்கொண்டோமே தவிர வேறெதுவும் இல்லை.
இலங்கை அரசினால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்களே?

 எனது நினைவின்படி, இந்த ஆண்டு ஒரு தமிழ் மீனவர் உயிரிழந்திருக்கிறார். 9 பேர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள். அதுதவிர புதிதாக யாராவது கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்களா? என்பது எனக்கு தெரியாது.

 அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா வருகை குறித்து?
ஒபாமா சென்னைக்கு வரவில்லையே, அவர் மும்பைக்கும், டெல்லிக்கும்தான் வருகிறார். அவருக்கு முழுப்பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

 ஒபாமா வருகையால் இந்திய-அமெரிக்க உறவில் முன்னேற்றம் ஏற்படுமா?

அவர் சென்றபிறகுதான் இதுபற்றிக்கூற முடியும். இந்திய-அமெரிக்க உறவு சீராக இருக்கிறது. இன்னும் வலுப்படுமா என்பதை பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் கூற முடியும்.

கருத்துகள் இல்லை: