வியாழன், 12 மார்ச், 2020

போலி கால் சென்டர்... மெகா மோசடி விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி செல்வகுமார் கைது .. வீடியோ


பாலிமார் செய்திகள்  : போலி கால் சென்டர் மோசடி விவகாரத்தில் பென்ஸ் கிளப் சரவணன் கைது செய்யப்பட்டதன் பின்னணி குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
இந்த மெகா மோசடிக்கு மூளையாக செயல்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி செல்வா என்கிற செல்வகுமார், தனது இரு கூட்டாளிகளுடன் போலீசில் பிடிபட்டுள்ளார்.
தூண்டிலில் புழுவை மாட்டி, மீனை பிடிப்பது போல, அவசர பணத்தேவைக்காக அலைபாயும் மக்களை கண்டறிந்து, ஆசை வலை வீசி, மோசடியை அரங்கேற்றும் போலி கால் சென்டர்கள், தமிழகத்தில் புற்றீசல் போல இயங்கி வருகின்றன.
செல்போனில் பொதுமக்களை தொடர்பு கொண்டு குறைந்த வட்டியில் குறிப்பிட்ட வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூற, அதை நம்பி தங்கள் வங்கி விவரங்களை பகிர்ந்து கொள்ளும் வாடிக்கையாளர் பணம் அடுத்த சில நிமிடங்களில் சுருட்டப்படும். போலி நிறுவனங்களின் பெயரில் பல வங்கி கணக்குகள் வைத்திருப்பதால் எளிதில் அவர்களை கண்டுபிடிக்கவும் முடியாது.
ஒரு டீம் லீடர், மேனேஜர், ஹெச்.ஆர் என கார்ப்பரேட் அலுவலகம் போன்று இயங்கும் இந்த போலி கால் சென்டர்களில், பட்டதாரி இளம் பெண்கள், டெலி காலர்களாக பணி அமர்த்தப்படுகிறார்கள். முதலில், என்ன வேலை செய்கிறோம் என தெரியாமல் பணி செய்யும் இவர்களில் பலர், உண்மை தெரிந்த பிறகும் வேறு வழியில்லாமல், தொடர்ந்து, இந்த மோசடிக்கு துணை போகிறார்கள்.

10 போலி கால் சென்டர்கள் நடத்தி, கடந்தாண்டு போலீசில் சிக்கிய கோபி கிருஷ்ணாவை போல, மற்றொரு, மெகா மோசடி கும்பல் இருப்பது பென்ஸ் சரவணன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மாதம் ஐந்தரை லட்சம் ரூபாய் வாடகை செலுத்தும் சென்னை - பென்ஸ் கிளப், க்யூசெப்ட் சொலுயூஷன் என்ற போலி கால் சென்டர் நிறுவனத்திடம் உள் வாடகையாக மாதம் 5 லட்சம் ரூபாய் வசூலித்து வந்துள்ளது. பென்ஸ் கிளப் உரிமையாளர் சரவணன், தினமும் மோசடி பணத்தில் கமிஷன் பெற்று வந்ததாகவும், போலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஓராண்டாக போலீசாரால் தேடப்பட்டு வந்த செல்வா என்கிற செல்வகுமார்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாநில துணை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
வட மாநிலங்களில் செயல்பட்டு வரும் கவ் ராட்சசா எனும் பசு பாதுகாவலர்கள் அமைப்பின் தமிழ் மாநிலத் தலைவராகவும் இருக்கும் இவர், நிதின், குமரன் என 2 கூட்டாளிகளுடன் சிக்கியுள்ளார்.
இந்த செல்வகுமார், எப்போதும், ஜெயபால் தலைமையிலான ரவுடி கும்பலையும், வழக்கறிஞர் கும்பலையும் தம்முடன் வைத்து கொண்டு இந்த மோசடியை யாராவது மோப்பம் பிடித்து நெருங்கினால் ஆரம்பத்திலேயே கிள்ளி விடும் கில்லாடி என்கிறார்கள், போலீசார்.
செல்வா என்கிற செல்வகுமார் " பாஸ்" ஆக இயங்கிய இந்த மோசடி கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தோண்ட தோண்ட பல அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
எனவே, கடன் வாங்கி தருவதாக யார் அணுகினாலும் நேரடியாக குறிப்பிட்ட வங்கியில் சென்று விசாரிக்காமல், மோசடி கும்பலிடம் சிக்கி கொள்ள வேண்டாம் என, வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
@ 2020 - Polimernews.com All Right Reserved.

கருத்துகள் இல்லை: