செவ்வாய், 10 மார்ச், 2020

ஜாதி மறுப்பு திருமணம்... செய்து வைத்தவரையும் மணப்பெண்ணையும் கடத்திய கும்பல்..

tamil.oneindia.com :
சரவணபரத் : ஈரோடு அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தவரை ஒரு கும்பல் கடத்தி சென்றுள்ளது.. மேலும் புது மண தம்பதிகளையும் தாக்கி.. கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள கிராமம் தர்மாபுரி.. இங்கு வசித்து வருபவர் செல்வன்.. 26 வயதாகிறது.. அதே பகுதியை சேர்ந்த இளமதி என்ற 23 வயது பெண்ணை காதலித்தார்.. கல்யாணமும் செய்ய முடிவு செய்தார்... இது ஒரு கலப்பு மணம் ஆகும்! செல்வன் திராவிடர் விடுதலைக் கழகத்தில் உறுப்பினர் ஆவார்.. அதனால் அந்த அமைப்பின் தலைமைக் குழு உறுப்பினரான ஈஸ்வரன் என்பவரை அணுகி தனக்கு கல்யாணம் செய்து வைக்க கோரியுள்ளார்.
இதையடுத்து சேலத்திலுள்ள கொளத்தூர் அருகே உள்ள காவலாண்டியூர் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நேற்று கல்யாணத்தை நடத்தி வைத்துள்ளனர். ஈஸ்வரன் வீட்டிலேயே செல்வனும் இளமதியும் சாயங்காலம் 5 மணி வரை இருந்துள்ளனர். பிறகு செல்வனின் நண்பரான சரவண பரத் என்பவரை சந்திப்பதற்காக அங்கிருந்து இளமதியும், செல்வனும் சென்றனர்.

இரவு 8.30 மணி இருக்கும்.. 4 ஆம்னி கார், ஒரு பொலேரோ, ஒரு இன்டிகா உட்பட 10-க்கும் மேற்பட்ட பைக்குகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வந்து ஈஸ்வரனை சரமாரியாக தாக்கி வலுக்கட்டாயமாக அவரை காரில் ஏற்றி சென்றுள்ளனர். காரில் அழைத்து செல்லும்போது, செல்வனும் இளமதியும் எங்கே என கேட்டு அடித்தபடியே இருந்துள்ளனர்.. அவரது செல்போனையும் பறித்துள்ளனர்.
அதற்குள் பைக்கில் சென்று கொண்டிருந்த இளமதி - செல்வனை மற்றொரு கும்பல் பார்த்துவிட்டது.. கொளத்தூர் அருகே உள்ள உக்கம்பருத்திக்காடு என்ற பகுதியில் அவர்களை தாக்கி இளமதியை ஒரு காரிலும், செல்வனை ஒரு காரிலும் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டது.. புது மண தம்பதி தாக்கப்பட்டது குறித்து கொளத்தூர் ஸ்டேஷனுக்கு புகார் தரப்பட்டது.. போலீசாரும் விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போதுதான் ஆம்னி காரில் சில குறிப்பிட்ட கட்சியின் கொடிகள் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கொளத்தூர் செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிரமான வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.. நள்ளிரவு 12 மணி அளவில் அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி காரை நிறுத்தி விசாரித்ததில் அவர்கள்தான் தம்பதியை பிரித்தவர்கள் என்று தெரியவந்தது. அந்த காரிலும் கட்சி கொடி கட்டப்பட்டிருந்தது.
இளமதியும் செல்வனும் வெவ்வேறு ஜாதியைச் சார்ந்தவர்கள் என்பதால், கலப்புத் திருமணத்தை ஏற்கமுடியாமல் அவர்களை பிரிப்பதற்காக கடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதன்பின்னர், ஈஸ்வரனையும் செல்வனையும் போலீசார் மீட்டனர்... இளமதியை இன்னும் மீட்கவில்லை.. அதனால் அவரை கடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கொளத்தூர் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.. இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். கலப்பு திருமணம் செய்து கொண்ட நண்பர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Edwin Prabhakaran : அவசரம்..அதிகம் பகிருங்கள்..
இளமதி (வன்னியர் சமூகம்) - செல்வன் (பட்டியல் சமூகம் ) காதலர்களுக்கு ஜாதி அமைப்புகளின் எதிர்ப்பால் கொளத்தூர் திவிகவினரின் உதவியை நாடினார்கள்..
கொளத்தூர் திவிக பொறுப்பாளர் ஈஸ்வரன் நேற்று மதியம் இருவருக்கும் ஜாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்தார்..
நள்ளிரவில் 100 க்கும் மேற்பட்ட பாமக மற்றும் கொங்கு ஈஸ்வரன் கட்சியை சார்ந்த ரவுடிகள் திவிக பொறுப்பாளர் ஈஸ்வரன் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தி அவரை கடத்தி சென்றனர்..
அதே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட இணையர்களையும் தேடிப்பிடித்து பெண்ணை மட்டும் வேறு காரில் ஏற்றிவிட்டு காதலனையும் பாதுகாப்பளித்த திவிக பரத்தையும் மிக கொடூரமாக தாக்கியுள்ளனர்.
காவல் துனை துனையோடு அந்த பெண்ணை கடத்தி சென்றுள்ளனர் ஜாதி வெறி கும்பல் ..
பெண்ணை மீட்டு தரக்கோரி நள்ளிரவு முதல் அண்ணன் கொளத்தூர் மணி 100 க் கணக்கான தோழர்களோடு கொளத்தூர் காவல் நிலையத்தில் போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்..
பெண்ணை மீட்கும் வரை போராட்டம் தொடரும்...
இளமதியின் உயிருக்கு பாதுகாப்பளிப்பது காவல்துறை மற்றும் தமிழக அரசின் கடமை..
தமிழக அரசே விரைந்து பெண்ணை மீட்டு கொடு.. தாக்குதல் நடத்திய கும்பலை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்...

கருத்துகள் இல்லை: