செவ்வாய், 10 மார்ச், 2020

2019 : தடம் பதித்த பெண் பத்திரிக்கையாளர்கள்

Deepa Janakiraman - savukkuonline.co : “எங்களை முன்பெல்லாம் கிராமங்களுக்குள்
அனுமதிக்க மாட்டார்கள். துரத்திவிடுவார்கள். இன்று எங்களை அவர்களே அழைக்கிறார்கள். நாங்கள் இப்போது அவர்களுக்குத் தேவைப்படுகிறோம். எங்களது ஆயுதம் எழுத்து. ஆனால் அந்த ஆயுதம் சாதாரணமாக எங்களுக்குக் கிடைக்கவில்லை. போராடிப் > பெற்றிருக்கிறோம். நாங்கள் நாற்பது பேரும் நுழையாத உத்தரபிரதேச, பீகார் கிராமங்கள் இல்லை” இப்படி சொல்லும் கவிதா தேவியின் அடையாளம்
பத்திரிகையாளர் என்பது. ‘கபர் லஹரியா’ என்றால் இந்தியப் பத்திரிகைத்துறைக்கு நன்றாகத் தெரியும். அதை விட முக்கியமாய் உத்தரபிரதேசத்தின்
அத்தனை கிராமத்தினரும் கவிதாவையும் அவர் நடத்தும் கபர் லஹரியாவின் பணியாளர்களையும் நன்கு அறிவார்கள்.  கபர் லஹரியாவைத் தூக்கி சுமப்பவர்கள் நாற்பது பேர். அத்தனை பேரும் பெண்கள். ஒடுக்கப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின பெண்கள். அவர்களே செய்தி சேகரிக்கிறார்கள், எழுதுகிறார்கள், அச்சிடுகிறார்கள், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள்.  உத்தரபிரதேச, பீகாரில் அறுநூறு கிராமங்களுக்கு கபர் லஹரியா கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. மாபெரும் வலைப்பின்னல் கொண்டுள்ள பத்திரிகை கபர் லஹரியா.
இன்று களத்தில் செய்தி சேகரித்து தொடர்ந்து பணி செய்யும் பெண் பத்திரிகையாளர்கள் அதிகளவில் இருக்கின்றனர். ஒரு செய்திக் கட்டுரைக்காக உயிரைப் பணயம் வைக்கும் அளவுக்கு, தயாராய் நிற்பவர்கள் இவர்கள். கொலை மிரட்டலை சந்தித்திருக்கின்றனர், செய்தி சேகரிக்கும் இடங்களில் ஓட ஓட விரட்டப்பட்டிருக்கின்றனர். ஆனாலும் துணிச்சலுடன் இவர்கள் வெளியிட்ட கட்டுரைகள் அவர்களின் அடையாளமாக மாறியிருக்கின்றன. மறுக்கப்பட்ட பலரின் குரலாக ஒலித்திருக்கின்றன.

இப்படி 2019ஆம் ஆண்டில் சிறந்த செய்திக் கட்டுரைகளைத் தந்த சில பெண் பத்திரிகையாளர்கள் குறித்தே இந்தக் கட்டுரை அறிமுகப்படுத்தவிருக்கிறது. ஆபத்து என்று தெரிந்தும் ஓயாமல் ஆர்ப்பாட்டமில்லாமல் தொடர்ந்து எழுதிவரும் அத்தனை பெண் பத்திரிகையாளர்களையும் நினைவில் கொண்டே அவர்களில் சிலரைப் பற்றி பகிர இருக்கிறோம்.
கவிதா தேவியில் இருந்தே தொடங்கலாம். உத்தரபிரதேசத்தில் பந்தல்காந்த் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். சாதிக்கொடுமை, வறுமை, பெண்ணடிமை என எல்லாவற்றிலும் அனுபவப்பட்டவர். நான்கு பேர் முன்னால் நின்று பேச வேண்டுமெனில் கை கால்கள் நடுங்கிய காலம் ஒன்றுண்டு என பல மேடைகளில் இப்போது சொல்லிவருகிறார். பேசத் தானே அஞ்ச வேண்டும், நாம் ஏன் எழுதக்கூடாது என்று தன்னை கபர் லஹரியாவில் இணைத்துக் கொண்டார்.

கவிதா தேவி
டெல்லியில் இருக்கும் அரசு சாரா நிறுவனத்தின் மூலமாகத் தொடங்கப்பட்ட கபர் லஹரியா பத்திரிகையின் பொறுப்பாசிரியர் அளவுக்கு முன்னேறியிருக்கிறார் கவிதா தேவி. இந்தப் பத்திரிகை ஆறாயிரம் பிரதிகள் விற்கப்படுகின்றன. வாசகர்கள் எண்பதாயிரம் பேர். இணையதளத்தையும் தொடங்கியிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான தாக்குதல், சுரண்டல், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, அரசாங்க அலுவலகங்களில் நடக்கும் ஊழல், லஞ்சம் என எல்லாவற்றையும் இந்தப் பெண் பத்திரிகையாளர்கள் உடனுக்குடன் எழுதி விடுகின்றனர். இவர்கள் கையில் இருப்பதெல்லாம் ஒரு ஸ்மார்ட் போன் மட்டுமே. அந்தந்தப் பகுதியில் இருந்து அவர்களே புகைப்படம் எடுத்து, செய்தியை அனுப்பிவிடுகின்றனர். தேவைப்படும் பட்சத்தில் வீடியோ ஆதாரங்களையும் இணையதளத்தில் ஏற்றிவிடுகின்றனர். பெரும்பாலானோர் பள்ளிப் படிப்பு மட்டும் முடித்தவர்கள். இவர்களுக்கு தேசிய அளவில் அங்கிகாரம் கிடைத்திருக்கிறது, யுனஸ்கோவின் கௌரவ விருதான கிங் செஜாங் இலக்கிய விருது உட்பட.
சித்ராங்கதா சௌத்ரியை இப்படி சொல்லலாம். இவர் ஆதிவாசி மக்களின் பேனா. மத்தியபிரதேசத்தின் உமர்வாடா கிராமம், மகாராஷ்ட்ராவின் பிஜாபூர் கிராமம், உத்த்ரகாண்டின் உத்தம் சிங் நகர் மாவட்டம், சட்டிஸ்கரின் மகாசமுந்த் மாவட்டம், ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டம் என எங்கெல்லாம் அரசு தனியாருக்காக காடுகளைக் கையகப்படுத்தியதோ அங்கே சித்ராங்கதா களத்தில் நின்றிருக்கிறார். இங்கெல்லாம் முதன்முதலில் போய் செய்தி சேகரித்து வெளியிட்டதும் இவரே. இதற்காக கடுமையான மிரட்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறார். ஒரூ செய்திக்கட்டுரையாக மட்டுமல்லாமல் தொடர்ந்து இந்த இடங்களில் வாழும் பழங்குடியினர் எந்த மாதிரியான ஒடுக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதையும், இயற்கை சமநிலை குலைவதால் ஏற்படும் பாதிப்பையும் எழுதி வருகிறார். இவர் செய்வதெல்லாம் அரசோடு நேரடியாக மோதுவதே.

சித்ராங்கதா சௌத்ரி
கடந்த டிசம்பர் மாதம் சித்ராங்கதா எழுதிய ஒரு கட்டுரை ஒரிசாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. யாருக்கும் தெரியாமல் நடத்தப்பட்ட ஒரு காட்டின் அழிப்பினை வெளியுலகத்துக்கு கொண்டு வந்திருக்கிறார் சித்ராங்கதா. நெய்வேலி நிலக்கரி குழுமத்தினரால் அதானிக்கு ஒப்பந்தமாக தரப்பட்ட ஒரிசாவின் சம்பல்பூர் மலைக்கிராமத்தில் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதை இவர் முதன்முதலில் வெளியில் கொண்டு வந்தார். அதுவரை அந்தக்  காடுகளை வாழ்வாதாரமாக கொண்டிருந்த அந்தப் பகுதி மக்கள் யாரிடம் எப்படி அணுகுவது என்று தெரியாமல் இருந்த நிலையில் சித்ராங்கதா சௌத்ரியின் எழுத்துரீதியான பங்களிப்பு அங்கே தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதை தற்காலிகமாகவேனும் நிறுத்தியிருக்கிறது.
சுப்ரியா ஷர்மா scroll.in இணைய பத்திரிகையின் எக்சிகியூட்டிவ் எடிட்டர். ஜார்கண்டில் பழங்குடியினரின் நில அபகரிப்பு, அவர்கள் மேல் தொடரப்பட்டிருக்கிற தேசத்துரோக வழக்கு போன்றவற்றைக் குறித்து தற்போது கவனம் செலுத்தி வருகிறார். ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் 1890களில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து  நிலஉரிமைக்காக விவசாயிகளை ஓரணியில் இணைத்தவர் பிர்சா முண்டா. இன்றும் அவர் ஜார்கண்ட் மக்களின் ‘பகவான்’, மாபெரும் தலைவராக நினைக்கப்படுகிறார்.

சுப்ரியா ஷர்மா
25வது வயதில் பிர்சா முண்டா சிறையில் இறந்தபிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் சோட்டாநாக்பூர் குத்தகை சட்டதத்தினைக் (1908) கொண்டு வந்தது. அதன்படி ஜார்கண்ட் பழங்குடியினரின் நிலங்களை விவசாயம் மற்றும் அரசு சேவைக் நிறுவனக் கட்டடங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிறது சட்டம். அதோடு நில குத்தகை உரிமையை ஒரே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பழங்குடியினைரிடம் மட்டுமே தர இயலும் என்பதும் சட்டத்தின் அம்சம்.
ஆனால் பாஜக அரசு இதில் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதன்படி நிலம் கேள்விக்கு உட்படுத்தாமல் எவர் வசம் வேண்டுமானாலும் தரப்படலாம் என்பதான திருத்தமாக இருந்தது. கிராம சபையின் அனுமதி பெறப்படாமல் நிலங்களை தாரை வார்க்கும் வேலையிலும் அரசு ஈடுபட்டது. இதனை எதிர்த்து பழங்குடியினர் இலட்சக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக கிராமத் தலைவர்கள் உட்பட 10000க்கும் அதிகமானவர் பேரில் தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது.
இதனைக் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார் சுப்ரியா சர்மா. பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மனு தாக்கல் செய்வதோடு சட்ட உதவியும் செய்து வருகிறார். இவரின் கட்டுரைகள் scroll.inல் கிடைக்கின்றன.
கிரீஸ்மா குதார் எதைக் குறித்து எழுதினாலும் அதன் தொடக்க வரலாறு முதல் அதன் எதிர்காலம் வரை எழுதக்கூடியவர். அவர் எழுதியவற்றில் இரண்டினை உதாரணமாகச் சொல்லலாம். கர்நாடக கடற்கரைக் கிராமங்கள் காவிமயமாக்கப்பட்டதை பதினெட்டு அத்தியாயங்கள் கொண்ட தொடர்களாக தான் பணியாற்றி வரும் first post இதழுக்காக எழுதியிருக்கிறார். இதற்காக நான்கு மாத காலங்கள் கர்நாடகா முழுவதும் பயணம் செய்து செய்திகளை சேகரித்திருக்கிறார்.

க்ரீஷ்மா குத்தார்
ஆர்எஸ்எஸ்ஐ தொடங்கிய K.B ஹெட்கேவாரின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்ட கர்நாடகாவின் சரஸ்வத் பிராமண வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்  வெங்கடேஷ் காமத் என்பவரின் பிராச்சாரம் மற்றும் தொடர் ஊக்குவிப்பால் ஆர்எஸ்எஸ் கர்நாடாகாவில் அறிமுகமாகிறது என்பதாகத் தொடங்குகிறது முதல் அத்தியாயம்.  ஆரிய சமாஜத்தின் பங்களிப்பு, உடுப்பியில் 1952ல் ‘மாடுகள் வாரம்’ கொண்டாடப்பட்டது, மங்களூரில் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டது, லவ் ஜிகாத்தை பிரபலப்படுத்தியது என ஒவ்வொரு கட்டுரைகளும் பல்வேறு ஆய்வுகளையும், தகவல்களையும் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் வழக்கறிஞராக பணி செய்திருக்கிறார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை அரசு திரும்பப்பெற்ற பிறகான காஷ்மீரின் நிலை குறித்து கடந்த ஆகஸ்டில் இருந்து தொடர்ந்து எழுதி வருகிறார். காஷ்மிரின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களின் நிலை குறித்து தொடர்ந்து ஆடியோ  வடிவிலும் பதிவு செய்து வருகிறார். இவை அனைத்தும் voices from the lockdown என்ற பெயரில் ஒலிவடிவில் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்காக அவர் தந்திருக்கும் உழைப்பு அவர் கட்டுரைகளை வாசிக்கிறபோது மலைக்க வைக்கிறது.
அனுராதா பாஷின் காஷ்மீரைச் சேர்ந்தவர். ‘காஷ்மீர் டைம்ஸ்’ பத்திரிகையின் எக்சிகியூட்டிவ் எடிட்டர். ஜம்மு மற்றும் காஷ்மீரில் இவரது  பத்திரிகை அச்சிடப்படுகிறது. காஷ்மீரின் மிக முக்கியமான பிரச்சனைகளை வெளியுலகத்துக்கு கொண்டு வந்தவர். மிக சிக்கலான காலகட்டத்தில் காஷ்மீர் சிக்கிக் கொள்ளும்போதெல்லாம் நேரடியாக அந்தந்த பகுதிகளுக்கு சென்று செய்தி சேகரித்து வெளியிடுகிறார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபிறகு காஷ்மீரில் இயங்கும் இவரது பத்திரிக்கை தடை செய்யப்பட்டிருக்கிறது. ஜம்முவில் இருந்து மட்டும் இவரது பத்திரிகை வெளிவந்து கொண்டிருக்கிறது.

அனுராதா பாஷின்
முப்பது வருடங்களாக தொடர்ந்து காஷ்மீர் குறித்து எழுதிவரும் அனுராதா, முதன்முறையாக காஷ்மீர் இப்படியான நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகத் தொடர்ந்து தன் கவலையை சொல்லி வருகிறார். இதற்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனைகளின் போது கூட லேண்ட்லைன் தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டதில்லை என்றும் தற்போதுள்ள தகவல் தொடர்பு உலகில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பதிமூன்று மில்லியன் மக்களின் நிலை குறித்து தெரியாமல் இருப்பது அச்சம் தருகிறது என்றும் எழுதி வருகிறார்.  இதோடு தான் நேரடியாக சேகரித்த தகவல்களைக் கொண்டு காஷ்மீர் மக்களின் தகவல் தொடர்பு எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். காஷ்மீரில் பத்திரிக்கைகள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டதை எதிர்த்து
ஷீமா சிஷ்டி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர். கடந்த வருடம் அதிக பரபரப்புக்குள்ளான ‘பெகஸுஸ்’ ஒட்டுக்கேட்பு குறித்த செய்தியை முதன்முதலில் வெளிக்கொண்டு வந்தவர். இஸ்ரேலைச் சேர்ந்தது என்எஸ்ஓ சைபர் செக்யூரிட்டி  நிறுவனம். கண்காணிப்பு தொழில்நுட்பம் சார்ந்து சிறப்பாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் சேவையை உலக நாடுகளின் அரசுகள் பயன்படுத்துகின்றனர். தீவிரவாதம்,  குற்றச்செயல்கள் கண்காணிப்பிற்காக இந்த நிறுவனத்தின் சேவையை அரசுகள் பெறுகின்றன.

சீமா சிஷ்டி
இந்த என்எஸ்ஓ நிறுவனம் ‘பெகஸுஸ்’ ஸ்பைவார் மூலமாக வாட்ஸ்ஆப் செய்திகளை கண்காணிக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பிட்ட அலைபேசிக்கு வாட்ஸ்அப்பில் வெளிநாட்டு எண்ணில் இருந்து மிஸ்டு கால் வரும். அவ்வளவே தான். அந்த மிஸ்டு கால் மூலமாக பெகஸுஸ் அந்த அலைபேசிக்குள் புகுந்துவிடும். மிகுந்த பாதுகாப்பு என்று சொல்லப்படுகிற வாட்ஸ்ஆப்பினை அது கண்காணிக்கத் தொடங்கும். இது குறித்து முதன்முதலில் புலனாய்வு செய்து எழுதியவர் ஷீமா சிஷ்டி. வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மனித உரிமை போராளிகள் என இந்தியாவில் பதினெட்டு பேரின் வாட்ஸ்ஆப் கண்காணிக்கப்பட்டதை ஆதாரத்தோடு எழுதினார். தற்போது  வாட்ஸ்ஆப் என்எஸ்ஓக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இது தவிர தற்போதுள்ள அரசியல் நிலவரங்கள் குறித்தும் எழுதி வருகிறார் இவர்.
சங்கீதா பரூவா பிஷாரடி,  பத்திரிகைத் துறையின் உயரிய விருதான ராம்நாத் கோயங்கா விருதினைப் பெற்றவர். தி வயர் இதழின் துணை எடிட்டராக உள்ளார். ஒவ்வொரு செய்திக்கும் உள்ள வேறொரு பார்வையை முன்னிறுத்துபவர். அசாமைச் சேர்ந்தவர் என்பதால் என்ஆர்சி குறித்து தொடர்ந்து ஆழமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

சங்கீதா பரூவா பிஷாரேட்டி
என்ஆர்சியின் பாதிப்பு அசாமுக்குள் எந்தளவுக்கு ஊடுருவியுள்ளது என்பதான இவரது கட்டுரைகள் மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கின்றன. குடியுரிமைச் சட்டத்தின் விளைவு இந்தியாவில் மட்டுமல்லாது பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்தும், பாபர் மசூதி வழக்குத் தீர்ப்பினை ஒட்டி குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது பற்றியும் அதன் விளைவுகளையும் இவர் எழுதியது சமீப காலத்தின் முக்கிய கட்டுரைகள். ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் வேறொரு திட்டத்தினை அரசு கொண்டிருக்கும் என்பது இவரது செய்திக் கட்டுரைகள் வழியே வாசகர்களால் புரிந்து கொள்ள இயலும். இது இவரது எழுத்தின் சிறப்பு.
லக்ஷ்மி சுப்பிரமணியம் தி வீக் பத்திரிகையின் தென்னிந்திய சிறப்பு செய்தியாளர். தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் பத்திரிகையாளர்களில் முக்கியமானவர். தொடர்ந்து தமிழக அரசுகளின் ஊழல்கள் குறித்து எழுதி வருகிறார். குறிப்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மேல் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளை முதன்முதலில் பொதுப் பார்வைக்கு எடுத்து வந்தவர். முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் பல சந்தேகங்கள் எழுந்தபோது அது குறித்து ஆதாரங்களோடும், தரவுகளோடும் இவர் எழுதிய கட்டுரை தேசிய அளவில் கவனம் ஈர்த்திருந்தது.

லட்சுமி சுப்ரமணியம்
கடந்த டிசம்பர் மாதம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினால் பாதிப்புக்கு உள்ளான சிரியா பகுதிக்கும், சிறைக் கூடத்திற்கும், பெண்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிற அகதி முகாம்களுக்கும் சென்று வந்திருக்கிறார். அவருடைய நோக்கம் என்பது இந்தியாவில் இருந்து அங்கு சிக்கிக் கொண்டிருக்கும் குடும்பங்களின் நிலை குறித்து எழுதுவதாய் இருந்தது. அங்குள்ள இந்தியக் குடும்பம் ஒன்றினை சந்தித்து நேர்காணல் செய்திருக்கிறார். அது மிகச் சாதாரணமாய் அமைந்துவிடாமல் மிகுந்த சவாலானதாக இருந்திருக்கிறது என்பது கட்டுரை வழி நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
தேசிய அளவிலளன பத்திரிகைகள் அதிகம் கவனத்தில் கொள்ளாத ஒரு செய்தியை தமிழ்நாட்டில் இருந்து ஓர் பத்திரிகையாளராக சென்று  சாதித்திருப்பது குறிப்பிடப்பட வேண்டியது. தற்போது சிரியாவில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த, கணவனை போரில் பறிகொடுத்த ஒரு பெண்ணை அவருடைய மூன்று குழந்தைதகளுடன் மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வரும் பணியை வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து மேற்கொண்டிருக்கிறார். இதற்காக அவர் கொண்டிருக்கிற  தொடர் முயற்சிகளையும் கட்டுரையாகத் தருகிறார்.
இந்தப் பெண்கள் எல்லோருமே ஒரு சோற்றுப் பதங்கள் தான். இவர்களைப் போல தொடர்ந்து தீவிரமாக செயலபட்டுக் கொண்டிருக்கும் பெண் பத்திரிகையாளர்கள் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உண்டு. அவர்கள் அனைவரின் உழைப்பினையும், துணிச்சலையும் பாராட்டியே ஆகவேண்டும்; ஏனெனில் இவர்கள் அனைவருமே தங்களை முன்னிருத்தாதவர்கள். மற்றவர்கள் எழுதத் தயங்கியவற்றை, கண்கொள்ளாமல் விட்டதை தொடர்ந்து எழுதி வருபவர்கள். அவர்களில் சிலரை மட்டுமே அறிமுகம் செய்ய முடிந்திருக்கிறது.
ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த ஒரு துறையில், தடம் பதித்தது மட்டுமல்லாமல் தங்களுக்கென்று ஒரு தனி தடத்தை இப்பெண் பத்திரிக்கையாளர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  அடித்தட்டு மக்கள், விளிம்புநிலை மக்கள், உழைப்பாளி மக்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள், என சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை இப்பெண்கள் தங்கள் எழுத்துக்களின் மூலமாக பிரதிபலிக்கின்றனர். குரலில்லா மக்களின் குரலாக ஒலிக்கும் இப்பெண் பத்திரிக்கையாளர்கள் இச்சமூகத்தின் முன்னேற்றத்துக்கு ஆற்றும் பங்கு மகத்தானது.
இப்படியான கடுமையான சவால்களை எதிர்கொண்டிருக்கும் பெண் பத்திரிகையாளர்கள் உட்பட அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: