வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

கொரோனா: 20ஆயிரம் பேர் கருணைக் கொலை?

கொரோனா: 20ஆயிரம் பேர் கருணைக் கொலை?
மின்னம்பலம் : கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 20,000 பேரைக் கொல்ல சீனா, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளி வந்தன.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இதுவரை, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொடர்பான பல்வேறு உறுதி செய்யப்படாத தகவல்களும் பரவி வருகின்றன.
இதில், ”கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20,000 பேரை கருணைக் கொலை செய்யச் சீன நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அரசு நாடியுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் தினசரி 20 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையிலும், சுகாதார ஊழியர்களைக் காப்பாற்றும் வகையிலும், 20,000 பேரைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரியது. இதனை விசாரித்த நீதிமன்றம் பிப்ரவரி 7ஆம் தேதியான இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கும்” என்ற தகவல் சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி வந்தது. இது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.

AB-TC.காம் என்ற இணையதளத்தில் கடந்த 5ஆம் தேதி இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 20,000 பேரைக் கருணைக் கொலை செய்ய ஓப்புதல் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி உண்மையில்லை என்பதை SNOPES.COM என்ற இணையதளம் உறுதி செய்துள்ளது. இச்செய்தியை இணையத்தில் முதன் முதலில் பதிவேற்றிய இணையதளமான AB-TC.காம் வெளியிட்ட செய்தியில், சீனாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறித்த தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து அந்த இணையதளத்தை ஆராய்ந்ததில், பல உண்மைக்குப் புறம்பான செய்திகள் இருந்ததை SNOPES இணையதளம் உறுதி செய்திருக்கிறது. இதனை ஆராய்வதற்கு AB-TC இணையதளத்துக்குச் சென்று பார்த்தபோது ஜூலை 2010ல் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்று இப்போதும் அந்த ஊடகத்தில் முதல் பக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது. ”பிரேக்கிங் - நியூயார்க் ஜயண்ட்ஸ் பயிற்சியாளர் பாட் ஷர்முர் மறைவு" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. ஆனால் அவர் 2010ல் உயிரிழக்கவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறார். அமெரிக்க கால்பந்து குழுவில் அஃபென்ஸிவ் ஒருங்கிணைப்பாளராக தற்போது பணியாற்றி வருகிறார்.
இதுபோன்ற பல ஆதாரமில்லா செய்திகளை இந்த ஊடகம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தற்போது கொரோனா குறித்து வெளியிட்ட தகவலும் உண்மைக்குப் புறம்பானது என்று தெரியவருகிறது. ஆனால், இது தெரியாமல் இதனைப் பல தமிழ் ஊடகங்களும் மொழிபெயர்த்து வருகின்றன.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: