சனி, 25 ஜனவரி, 2020

தமிழகத்தை மாற்றும் வாடகை பைக்குகள்!

தமிழகத்தை மாற்றும் வாடகை பைக்குகள்!மின்னம்பலம் : பெங்களூரை சேர்ந்த பவுன்ஸ் என்கிற தொடக்க நிறுவனம் நாடுமுழுவதும் 36 நகரங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் பைக்குகளை இயக்கி வருகிறது. இதற்கான 150 மில்லியன் டாலர் நிதியை ‘பி கேப்பிடல்’ நடத்திய புதிய நிதிச்சுற்றில், நாட்டிற்குள் அதன் வியாபாரம் விரிவடைவதற்கும், சொந்தமாக எலெக்ட்ரிக் பைக்குகளை உற்பத்தி செய்வதற்கும் உதவும் வகையில் திரட்டியுள்ளது.
இந்தியா போன்ற மக்கள் தொகை பெருகிவரும் நாடுகளில் ஒவ்வொரு நபரும் தனெக்கென ஒன்றுக்கு இரண்டாய் வாகனங்களை வாங்கி தங்களது தினசரி வேலைகளுக்கு பயன்படுத்துவது, மாசு, வாகன நெரிசல், எரிபொருள் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாகிறது. சிலர் வாகனங்களை பகிர்ந்து கொண்டு வேலைகளுக்கு செல்லும் கார்பூலிங் முறையைத் தொடர்ந்து மற்றொரு யுக்தியாக இந்த வாடகை பைக்குகளை பார்க்கலாம். இந்தியாவில் வாடிக்கையாளர்கள் பட்டியலில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பெண்கள், இந்த முறையை பாதுகாப்புடன் கையாளக்கூடியதாக பார்க்கின்றனர்.

மெட்ரோ பைக்ஸ் என்று அழைக்க்கப்பட்ட இந்த பவுன்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு முதல் ரைடுக்கு கிலோமீட்டருக்கு வெறும் 1 ருபாய் என பைக்குகளை வாடகைக்கு கொடுக்கிறது. இந்த வாடகை பைக்குகளை வாடிக்கையாளர்கள் ரைடு முடிந்ததும் அருகில் இருக்கும் பைக்குகள்-பொருத்தும் நிலையணைகளிலோ அல்லது கடைகளிலோ விட்டுவிடலாம்.
இதன் வளர்ச்சிக்காக இந்நிறுவனதின் செயல்பாட்டுக் குழுக்களின் மூலம் சந்தைகளில் அதிக எண்ணிக்கையில் பைக்குகளை செயல்படவிட்டால், வியாபாரம் பெருகும் என்ற யுக்தியை கையாண்டும் அது சரிவராத நிலையில், இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான பல பரம்பரைகளாக வியாபாரக் கடைகளை நடத்தி வருபவர்களை அணுகி அவர்களுடன் ஒப்பந்தமிடும் முயற்சியை தொடங்கியிருக்கின்றனர். பிரபல ஆன்லைன் வணிக வலைதளமான அமேசானும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரம்பரை வியாபாரக் கடைகளை தங்களின் டெலிவரிகளை செய்ய பயன்படுத்தி வருகிறது. மக்களை எளிதில் அணுகக்கூடிய சிறு தொழிலார்களின் மீது படையெடுக்கும் தனியார் நிறுவனங்களின் போக்கையும் இதன்மூலம் கணிக்கமுடிகிறது. இதன் மூலம் சிறு வணிகதொழில்களின் வியாபாரம் நீடிக்கக்கூடும் என்பதால் அரசாங்கமும் அமைதிகாக்கிறது.
இந்நிறுவனம் இந்த யுக்தியை மங்களூரு, விஜயவாடா உள்ளிட்ட 6 நகரங்களில், 2.5 லட்சம் கடைகளை அணுகி செயல்படுத்திவருகிறது. இது குறித்து விளக்கம் அளித்த இந்நிறுவனத்தின் துணை நிறுவனர் விவேகானந்தா ஹல்லேகரே, “சில குறுவியாபாரிகள் அவர்களின் சொந்த வாகனங்களை இந்த ஆப்பின் மூலம் வாடகைக்கு விடுகிறர்கள். இது இந்நிறுவனத்தின் எக்கோ பைக்குகளை மட்டும் பயன்படுத்தும் கொள்கையின் போக்கை மாற்றும் விதமாக இருக்கிறது” என்று விவரித்தார்.
“பவுன்ஸ், அதன் செலவினங்களைக் குறைத்து விரிவாக்க ஒரு நிலையான வழியைக் கண்டறிய வேண்டும். இல்லையெனில், இந்தியாவில் ஒரு மில்லியன் வாகனங்களை அறிமுகப்படுத்த எனக்கு ஒரு பில்லியன் டாலர் கடன் தேவைப்படும்," என்று அவர் கூறினார். அளவிடக்கூடிய மற்றும் லாபகரமான ஒரு மாதிரியை பவுன்ஸ் விரும்புகிறது.
தற்போழுது இந்நிறுவனத்துக்கு போட்டியாக ஓலாவின் வோகோ மற்றும் ஊபரின் கூட்டு நிறுவனமான யூலுவும் பார்க்கப்படுகிறது. பவுன்ஸ், எலெக்ட்ரிக் வாகனங்களுக்க்காகவே தனி சுற்றுச்சூழலை உருவாக்க முயற்சித்து வருகிறது. தனது உற்பத்தியில் உருவாக்கப்பட்ட புதிய எலெக்ட்ரிக் பைக்கை, குறைந்த பட்சம் 2 லட்சம் கிலோமீட்டர்கள் ஓடக்கூடிய விதத்திலும், முதல் மாடியில் இருந்து கீழே போட்டாலும் சேதமடையாத அளவுக்கும் வடிவமைத்துள்ளது. வருகிற மாதங்களில் இந்த வண்டிகளை புழக்கத்திற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
இந்தியா வருங்காலத்தில் வாகன பகிர்தல் அதிகமாக உபயோகப்படுத்தும் நாடாக உருவாவதற்கேற்ப பவுன்ஸ் நிறுவனம் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. இந்த ஒரு தொடக்க நிறுவனத்தால் நடக்க இருக்கும் மாற்றங்கள், பலரின் வாழ்வியல் பழக்கங்களுடன் தொடர்புடையதாக இருக்கும். தமிழகத்திலும் ஸ்மார்ட் சிட்டிக்கள், தனியார் தளங்கள் போன்ற இடங்களில் டாக் சைக்கிள்ஸ் எனப்படும் வாடகை சைக்கிள்கள் புழக்கத்தில் வந்துவிட்டது. அதே போல் வாடகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உபயோகிக்க பழகுமா என்பது வரும் காலங்களில் தெரியும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இருக்கும் கண்டுபிடிப்புகளை மக்கள் உபயோகித்து, அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்டால் மாசு, வாகன நெரிசல், எரிபொருள் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளை வருங்கால சமுதாயம் சந்திக்காமல் இருப்பதற்கான ஒரு முன்னெடுப்பாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: