புதன், 22 ஜனவரி, 2020

கர்நாடகாவின் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் போலீசில் சரண்

கர்நாடகாவின் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் போலீசில் சரண் தினத்தந்தி : கர்நாடகாவின் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் இன்று காலை போலீசில் சரண் அடைந்துள்ளார். கர்நாடகாவின் மங்களூரு நகரில் அமைந்துள்ள மங்களூரு சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கடந்த திங்கட்கிழமை காலை வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
இதுபற்றி சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இந்நிலையில், இதுபற்றி பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் செய்திகள் வெளியாகின.  இதனை அடுத்து வெடிகுண்டு வைத்த நபர் இன்று காலை 8 மணியளவில் போலீசில் சரண் அடைந்துள்ளார்.  அவரை ஹலாசூர்கேட் போலீசார் உடனடியாக சென்று கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.


இதில், அவர் மணிப்பால் நகரின் கே.எச்.பி. காலனியை சேர்ந்த ஆதித்ய ராவ் (வயது 36) என்பது தெரிய வந்துள்ளது.  கடந்த 2018ம் ஆண்டு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி பணி வழங்க விமான நிலைய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததற்கு பழிவாங்கும் வகையில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்.

பொறியியல் மற்றும் எம்.பி.ஏ. படித்தவரான ராவ் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.  இதில் சமீபத்தில் ஓட்டல் ஒன்றில் பணியில் சேர்ந்த அவர் அங்கு வெடிகுண்டை தயாரித்து உள்ளார் என்று கூறப்படுகிறது.  இதுபற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: