ஞாயிறு, 19 ஜனவரி, 2020

70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து...!!!

polio நக்கீரன் - ஜீவா தங்கவேல் : உலகில் பல நாடுகளில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பெரும்பாலான மாநிலங்களில் போலியோ இல்லாத நிலையை சமீபகாலமாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நடைபெற்று வருகிறது. பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை இதற்கென சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இன்று இந்தியா முழுக்க இந்த முகாம் காலை முதல் மாலை வரை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 43 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் இரண்டு லட்சம் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். ஏறக்குறைய 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது.


ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதிகளிலும் இதற்கென சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் போலியோ தடுப்பு மருந்து வழங்கினர். மொடக்குறிச்சி அருகே உள்ள காகம் என்ற குக்கிராமத்தில் துணை சுகாதார செவிலியர் கே ஈஸ்வரி குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கினார். இதேபோல் மாவட்டம் முழுக்க சுகாதார செவிலியர்கள் ஆங்காங்கே  போலியோ தடுப்பு மருந்து வழங்கினர்.

கருத்துகள் இல்லை: