சனி, 25 ஜனவரி, 2020

`தமிழ் மந்திரங்களில் இறை ஆற்றல்!'- 1,674 கோயில்களை ஒப்பிடும் சத்தியவேல் முருகனார்

சத்தியவேல் முருகனார்தஞ்சை பெரியகோயில் vikatan -கு. ராமகிருஷ்ணன்- ம.அரவிந்த் : இதுவரை 1,674 கோயில்களுக்கு தமிழ் ஆகமப்படி குடமுழுக்கு செய்துள்ளேன். அந்தக் கோயில்கள் எல்லாம் இறை ஆற்றலோடுதான் உள்ளன.
தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு, சம்ஸ்கிருத முறைப்படி நடத்துவதா.. தமிழ்வழியில் நடத்துவதா.. என்ற விவாதம் அனல் பறந்துகொண்டிருக்கிறது. சம்ஸ்கிருத முறைப்படி செய்தால்தான் கோயிலின் இறை ஆற்றல் உயிர்ப்பிக்கப்படும் என்ற கருத்தை இதன் ஆதரவாளர்கள் முன் வைத்து வருகிறார்கள். ஆனால், இதை தமிழ் ஆகம அறிஞர்கள் மறுக்கிறார்கள்.
தமிழ்தான் தெய்வமொழி, பக்தி மொழி எனவும் தமிழர்கள் கட்டிய கோயில்களுக்கு தமிழ் வழியில் குடமுழுக்கு செய்தால்தான் இறை ஆற்றல் கிடைக்கும் என ஆதாரங்களை முன் வைக்கிறார் செந்தமிழ் வேள்வி சதுரர் சத்தியவேல் முருகனார். இது தொடர்பாக வாதங்களை முன் வைக்கும் சத்தியவேல் முருகனார் ``தமிழ்வழி குடமுழுக்கு கோரிக்கை தஞ்சை பெருவுடையார் கோயிலோடு முடிந்துவிடக் கூடாது. தமிழர்கள் கட்டிய அனைத்துக் கோயில்களுக்கும் இது விரிவடைய வேண்டும். இறைவனை வணங்கக்கூடிய மக்களுக்கு என்ன மொழி தெரியுமோ, அந்த மொழியில்தான வழிபாடுகள் நடைபெற வேண்டும். சம்ஸ்கிருத மந்திரங்களின் அர்த்தம் நம் தமிழ் மக்களுக்குத் தெரியாது. தமிழில் குடமுழுக்கு செய்தால் இறை ஆற்றல் கிடைக்காது என்ற ஒரு பொய்யான வாதத்தை, சம்ஸ்கிருத ஆதரவாளர்கள் முன்வைக்கிறார்கள்.
அது அபத்தமானது. கடந்த 40 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இதுவரை 1,674 கோயில்களுக்கு தமிழ் ஆகமப்படி குடமுழுக்கு செய்துள்ளேன்.
அந்தக் கோயில்கள் எல்லாம் இறை ஆற்றலோடுதான் உள்ளன. பக்தர்களுக்கு இறை அருள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு செய்தால்தான், இறை ஆற்றல் கிடைக்கும் என சொல்லி, இன்னும் எவ்வளவு காலம்தான் தமிழ்நாட்டு மக்களை அவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள். 12 திருமுறைகளுக்காகவே ராஜராஜன் கட்டிய பெரியகோயிலுக்கு தமிழ் மந்திரங்கள் சொல்லிதான் குடமுழுக்கு செய்ய வேண்டும்." என்றார்.

கருத்துகள் இல்லை: