திங்கள், 14 அக்டோபர், 2019

சீமான் கட்சியை தடைசெய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

சீமான் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகிறதா?மின்னாம்பலம் : சீமானின் நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஆமாம்... நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்” என்று ஆவேசமாகப் பேசியிருந்தார். சீமானின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தியும் அதைச் செய்தவர்களை வரலாறு நிச்சயம் போற்றி பாராட்டும் என்று பயங்கரவாத வன்முறை செயலை சீமான் பகிரங்கமாக ஆதரித்துப் பேசியிருக்கிறார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலை புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை ஆதரித்ததின் மூலம் தேசத்துரோகக் குற்றத்தை சீமான் செய்திருக்கிறார்” என்று விமர்சித்துள்ளார்.
இலங்கை தமிழர்களின் நாற்பது ஆண்டுக்கால இன்னல்களைத் துடைக்க ஒப்பந்தம் கண்டவர் ராஜீவ்காந்தி. இதற்காக இலங்கை ராணுவ வீரனால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளானவர் என்பதை எவரும் மறந்திட இயலாது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கே.எஸ்.அழகிரி, “இலங்கை தமிழர்களைப் பாதுகாக்க இந்திய அமைதி காக்கும் படையை அனுப்பியவர் ராஜீவ் காந்தி” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “சீமான் மீது தேசத்துரோகக் குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இத்தகைய தேச விரோத செயலில் ஈடுபட்ட சீமானை தலைவராகக் கொண்ட நாம் தமிழர் கட்சிக்கான அங்கீகாரத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ள கே.எஸ்.அழகிரி, இதற்கான புகார்களை காவல்துறையிடமும், தேர்தல் ஆணையத்திடமும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
1991ஆம் ஆண்டு சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன் தலைவர் பிரபாகரனோ, ராஜீவ் காந்தி படுகொலை ஒரு துன்பியல் சம்பவம் என்று தெரிவித்தார். இந்த நிலையில் சீமானின் இப்பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று (அக்டோபர் 13) விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையிலான காங்கிரஸார் புகார் அளித்துள்ளனர். இதனால் சீமான் மீதும், அவரது கட்சியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: